அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர், துணை அதிபர் உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
அமெரிக்கத் துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமாகிய கமலா ஹரிஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது குறித்த தகவல்களுடன் வெளியான அறிக்கை:
அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. நீங்கள் உலகெங்கிலுமுள்ள பலருக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய ஆதாரமாக இருக்கிறீர்கள்.
ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையிலான நமது இரு நாடுகளின் உறவு புதிய உயரங்களை தொடும் என நம்புகிறேன். இந்தியாவிற்கு நிச்சயம் வாருங்கள், இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். மேலும், கொரோனா 2-ம் அலையின்போது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்கு அமெரிக்காவிற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
–இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.