அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டம் மற்றும் 'க்வாட்' கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
குவாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முதல்முறையாக வரும் 24-ம் தேதி 'க்வாட்' தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.இக்கூட்டத்தில், 'க்வாட்' கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, கொரோனா தொற்று போன்ற பிரச்னைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றம், கட்டுப்பாடற்ற இந்தோ – பசிபிக் பிராந்தியம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பிரசினைகள் விவாதிக்கப்படும்.
கடந்த முறை காணொலி வழியாக நடைபெற்ற இந்தக் கூட்டம் இம்முறை நேரில் நடைபெறவுள்ளதால் பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். முன்னதாக ஐ.நா. பொதுசபையின் 76-வது அமர்வு கூட்டம் நியூயார்க்கில் வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி 25-ம் தேதி உரையாற்ற உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும் அதிபர் ஜோ பிடனை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி, 2 தரப்பு உறவுகள், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், ஆப்கனிஸ்தான் நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.