தமிழக அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30% ஆக இருந்ததை 40% ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு நேரடி பணி நியமனங்களில் பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, மனித வள மேலாண்மைத்துறையின் மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளிக்கும்போது இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மேலும் அவர் அறிவித்த சில திட்டங்கள்:
அரசுத்துறையிலுள்ள பணியிடங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் ஆகியவற்றில் தமிழக இளைஞர்களே 100 சதவிகிதம் நியமனம் செய்யப்படுவர். அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்படும். மேலும், அனைத்து தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
-இவவாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.