தமிழகத்தின் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திரகுமாரியின் கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ஐஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 முதல் 96-ம் ஆண்டு வரஇயிலான அதிமுக ஆட்சியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அப்போது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளைக்கு ரூ.15.45 லட்சம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்மீது பின்னர் ஊழல் வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.