நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி ஊருக்குள் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தால் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே புலியைப் பிடிக்கும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டார். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, அங்குள்ள 120 குடும்பங்களுக்கு, சுமார் ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புலியைப் பிடிக்கும் முயற்சி தொடர்வதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.