திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், அன்னை டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்ற கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இதில் இருந்த 100 பேர் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவருக்கு சொந்தமான இந்த அன்னை டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மேல்தளத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கடை ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு மேல்தளத்திற்குச் சென்று படுத்து உறங்கியுள்ளனர். ஐந்து மாடிகள் கொண்ட அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரின் கீழ்த்தள பகுதியிலிருந்து இன்று அதிகாலை,திடீரென புகை வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் சுதாரித்துகொண்டு கடையை விட்டு வெளியேறினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5 மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்ததாக சொல்லப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:
பாலித்தீன் கவர்களை ஒட்டும் இயந்திரத்தை ஊழியர்கள் நேற்றிரவு பணி முடிந்து செல்லும்போது அணைக்காமல் சென்று விட்டதால், அதிக சூடு ஏறி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக பல்லடம் நகரின் மையப்பகுதியான என்.ஜி.ஆர். சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.