இது தஞ்சாவூர் ஸ்பெஷல். இலையில் விட்டால் நிற்காது ஓடும். அதனால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். இதனை அரைத்துவிட்ட சாம்பார் என்றோ வத்தக்குழம்பு என்றோ சொல்ல முடியாது. வித்தியாசமான சுவையில் ருசியாக இருக்கும்.
தேவையானவை:
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
பயத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – ½ ஸ்பூன்
பச்சரிசி = 2 ஸ்பூன்
மிளகாய் – 4
மிளகு – ½ ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
பெருங்காய கட்டி – சிறிது
முருங்கைக்காய் அல்லது கத்திரிக்காய்
புளிக்கரைசல் – 2 கப்
உப்பு –தேவையான அளவு.
செய்முறை:
எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் 4 பருப்புகளையும், தனியா ,மிளகாய் ,மிளகு ,பச்சரிசி ,பெருங்காய கட்டியை ஆகியவற்றுடன் வறுத்து பொடித்துக்கொள்ளவும். வாணலியில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை ஆகியவற்றை நல்லெண்ணெயில் தாளித்து முருங்கைக்காயை போட்டு ஒரு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். அத்துடன் மஞ்சள்பொடி, தேவையான உப்பு சேர்த்து இரண்டு கொதி வந்ததும் புளிக்கரைசலை சேர்க்கவும். புளி வாசனை போனதும் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து இரண்டு கொதி கொதித்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கி விடவும். சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் ரேஸ் குழம்பு தயார்.