தஞ்சை மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி கடந்த ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியில் அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அம்மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்ததாவது;
தஞ்சை மாணவியின் தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் காரணமாக இல்லை. அந்த மாணவியின் பெற்றோர், மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப் படுகிறது. அதேசமயம் உரிய பதிவின்றி செயல்பட்டு வரும் அந்த பள்ளி விடுதி மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் உரிய பதிவு இன்றி எத்தனை பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன என்பது குறித்து விசாரிக்கவும் அரசு முன்வர வேண்டும். மேலும் தஞ்சை பள்ளி விடுதியில் உள்ள மற்ற மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றவும் அறிவுறுத்தப் படுகிறது.
-இவ்வாறு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தன்அறிக்கையில் தெரிவித்துள்ளது.