சர்வதேச அளவில் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3-ம் தேதி சர்வதேச வன உயிரின தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 8,400 க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கிட்டதட்ட 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் அழியும் நிலியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நவீனமயமாக்கல் காரணமாக, கணிசமான அளவில் காடுகள் அழிக்கப் பட்டதால் இன்று உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வனங்களை அழித்ததால் அவறின் பரப்பளவு குறைந்தது மட்டுமல்ல.. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான உயிரினங்களும் வாழ்வாதாரத்தைத் தொலைத்து அழிந்து வருகிறது.
வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, இயற்கை சூழல் சங்கிலி அறுபட்டு, பூமிக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவது கண்கூடு.
இது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில், வன உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கான உணவு, பாதுகாப்பு ,வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில், ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி கூடிய ஐநா பொதுச்சபையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த வகையில், இந்த ஆண்டு சர்வதேச வன உயிரின தினத்திற்கான கருப்பொருள் – 'சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களை மீட்போம்' (Recovering key species for ecosystem restoration) என்பது ஆகும்!
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் புள்ளி விபரத்தின்படி – அழிந்து வரும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் 8,400 க்கும் மேற்பட்ட காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும் 30,000 க்கும் மேற்பட்ட இனங்கள் அழிவை நோக்கி செல்லக்கூடிய நிலையில் உள்ளன.
இந்நிலையில் உலக வனவிலங்கு தினத்தையொட்டி ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் வனங்களைக் காக்க உலக நாடுகள் அனைத்தும் சிறந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். மனிதகுலத்தின் நிலையான எதிர்காலத்திற்கு ஒரே தீர்வு, நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுதான்.
-இவ்வாறு ஐ.நா சபை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.