பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 8-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு விளைவாக அவரது உடலில் உள்ள பாகங்கள் செயலிழந்த நிலையில், நேற்று காலை 8.12 மணிக்கு அவரது இன்னுயிர் பிரிந்தது.
இதையடுத்து லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாட்டில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு வந்த பிரதமர் மோடி கானக்குயில் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
லதா மங்கேஷ்கரின் வீட்டுக்கு வெளியிலே குவிந்த மக்கள் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஊர்தியை தொட்டு வணங்கியும் அவர் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் வரை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் சிந்தி இன்னிசை அரசிக்கு பிரியா விடை கொடுத்தனர்.