கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சாய்நிகேஷ் என்ற 21 வயது இளைஞர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனிலுள்ள கார்கோ நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். உக்ரைன் மீது ரஷ்யா இப்போது போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் துணை ராணுவ பிரிவில் சாய் நிகேஷ் இணைந்து செயலாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தவிவகாரம் குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்;
சாய் நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பியதாகவும், ஆனால் அவர் உயரம் குறைவாக இருந்ததன் காரணமாக இந்திய ராணுவத்தில் இரண்டு முறை சேர முயற்சித்து நிராகரிக்கப் பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அதனால் உக்ரைனில் விமானவியல் படிக்க சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அங்கு போர் எழுந்துள்ளதால் உக்ரைன் துணை இராணுவப்படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதும் இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில், சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.