திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 7) காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண் சடலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இக்கொலையைச் செய்தவர் அபிஜித் என்ற இளைஞர் மற்றும் அவருக்கு உதவியவர் ஜெய்லால் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து இந்த இருவரையும் பிடிக்க இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 7-ம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதை போலீஸ் சோதனை செய்ததில் அதனுள் ஒரு பெண் சடலம் அடைபட்டு கிடந்தது. இதையடுத்து கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் படடது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று அந்த பெண் குடியிருந்த வீட்டை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
உயிரிழந்த அந்த பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் நேகா என்பதும் தெரியவந்தது. அப்பெண் அபிஜித் என்ற நபரோடு கடந்த ஒரு மாதமாக திருப்பூரில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்ணுடன் தங்கிருந்த அபிஜித், அந்த வீட்டின் உரிமையாளரிடம் தான் வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துசென்றுள்ளார். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலையான பெண்ணை சூட்கேஸில் வைத்து கொண்டு சென்று புதுநகர் பகுதியில் கால்வாயில் வீசியுள்ளனர்.
-இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது தலைமறைவாகியுள்ள அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இருவரையும் பிடிக்க, 2 தனிப்படையினர் ஒசூர் மற்றும் கர்நாடாகவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.