சி.ஆர்.ஹரிஹரன்
சமையலறையில் உங்கள் வேலையை எளிதாக்கவும், உணவின் சுவையை அதிகரிக்கவும் சில எளிய குறிப்புகள் (Simple Kitchen Tips) பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கும்போது அவை நிறம் மாறாமலிருக்க சிறிது தயிர் ஊற்றி வைக்கலாம்.
மல்லியை சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து, சாம்பார் செய்து முடித்தவுடன், இந்தப் பொடியைப் போட்டு மூடி வைத்தால், சாம்பார் கமகமவென மணத்துடன் இருக்கும்.
எந்த வித சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்க விட்டால் சூப் நல்ல கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
தேங்காய் சட்னி செய்யும்போது புளியை சேர்க்க விரும்பாதவர்கள், அதற்கு பதில் சிறிது தக்காளிப் பழத்தை சேர்த்து தயாரித்தால், சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதை உபயோகித்து பாத்திரம் கழுவினால், பாத்திரங்கள் பளிச்சென்று ஆகி விடும்.
கோதுமை மாவில் கொஞ்சம் வேர்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால், கிழங்கு வகைகள் சீக்கிரமாக வெந்து விடும்.
தயிர் சீக்கிரம் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயை தயிர் பாத்திரத்தில் போட்டு வைத்தால் போதும்.
உருளைக்கிழங்கை ஐஸ் வாட்டரில் கொஞ்ச நேரம் போட்டுவைத்து பிறகு வறுத்தால், மொறுமொறுப்பாக இருக்கும்.
சாம்பார், குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால், தக்காளியைச் சாறு பிழிந்து ஊற்றிக் கலக்கி விட்டால், காரம் குறைந்துவிடும்.
நீங்கள் நேற்று சுட்ட சப்பாத்தி மீதமாகி விட்டால் கவலை வேண்டாம். இட்லி குக்கரில் லேசாக ஆவியில் வேக வைத்தால், சப்பாத்தி மிருதுவாகி விடும்.