சி.ஆர்.ஹரிஹரன்
சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் தேங்காய்த் துவையலில் புளிக்கு பதிலாக மாங்காய் வைத்து அரைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.
சாம்பார், வற்றல் குழம்பு போன்றவற்றில் உப்பு (அ) காரம் அதிகமாகிவிட்டால் ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்தால் சரியாகிவிடும்.
பூரிக்கு மாவு பிசையும்போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்து பூரி செய்தால் பூரியின் சுவையே அலாதி தான்.
அடைக்கு பருப்பு வகைகள் நனைக்கும் போது, துவரம் பருப்பை முற்றிலும் நீக்கி, பட்டாணிப் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அடை சுவை மிகுந்து இருக்கும்.
தட்டை, முறுக்கு செய்யும்போது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் கரகரப்பும் ருசியும் கூடும்.
வெண்ணையில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட கெடாமல் இருக்கும்.
புளித்த தோசைமாவு இருந்தால், அதில் மூன்று பிடி ஜவ்வரிசியை ஊற வைத்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து சுவையான போண்டா செய்யலாம்.
தேங்காய் சாதம் கிளறும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறிப் பாருங்கள். சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
பருப்புப்பொடி அரைக்கும்போது ஒரு கரண்டி கொள்ளு சேர்த்து வறுத்து அரைத்தால் பருப்புப்பொடி மிகவும் சுவையாக இருக்கும்.
கறிவேப்பிலைக் குச்சிகளை தூரப் போடாமல் வெயிலில் காயவைத்து ரசப்பொடியோடு சேர்த்து அரைத்தால் ரசப்பொடி வாசனையாக இருக்கும். ரசமும் சுவையாக இருக்கும்.
உருளை, சேனை கிழங்கு வைத்துக் கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது பிரட்டை உதிர்த்து கடைசியில் தூவி இறக்க ரோஸ்ட் சுவை அள்ளும்.
வாழைக்காய் வெளியில் வைத்தால் பழுத்து விடும். எனவே, தோல் சீவி நறுக்கி உப்பு, காரம், மஞ்சள்பொடி போட்டுப் பிசறி வைத்தால் ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
தேங்காய் சட்னிக்கு புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சைச் சாறைப் பிழிந்தால் சுவையாக இருக்கும்.
ஒரு கரண்டி மசித்த கீரையை கெட்டித்தயிரில் கலந்து சுவையான தயிர் பச்சடி செய்யலாம்.