பெரெரிக்கா லெ
'அனாதைகளின் தாய்' என அன்புடன் அழைக்கப்படும் சிந்துதாய் சப்கல், ஒரு இந்திய சமூக சேவகரும், சமூக ஆர்வலருமாவார்.
1948ம், நவம்பர் 14 அன்று பிறந்தவரான சிந்துதாய் சப்கலுக்கு, 4ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.
அவருடைய 12 வயதில், 32 வயது நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டர். 3 பெண் குழந்தைகளுக்கு தாயான அவர், 4வது முறை கர்ப்பமடைந்தபோது அவருடைய கணவரால் கைவிடப்பட்டார்.
அவருடைய பெற்றோர் மற்றும் கிராமத்தினரும் கைவிட்டபோது வாழ்க்கையை நடத்த ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து தனது குழந்தைகளுக்கு உணவளித்தார்.
அப்போது அங்கு இன்னும் பல ஆதரவற்றவர்கள் பிச்சை எடுப்பதை பார்த்து ஆதரவற்றவர்களின் தாயாக மாறி, பிறரின் பசிக்காகவும் அதிகமாக யாசிக்கத் தொடங்கினார்.
ஆதரவற்றவர்கள் உணவருந்துவதற்காக சாலைகளில் யாசித்த சிந்துதாய் சப்கல், தனது வாழ்க்கையை ஆதரவற்றவர்களின் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை குடும்பமாக நினைத்து அவர்களுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஆதரவற்றவர்கள் இல்லத்தை நிறுவி, 1050க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் தாயாகவே மாறியவர் சிந்துதாய் சப்கல்.
இதன்மூலம் மிகப்பெரிய குடும்பமாக சிந்துதாய் சப்கலின் குடும்பம் மாறியிருக்கிறது. 207 மருமகன்களும், 36 மருமகள்களுடனும் சிந்துதாய் சப்கல் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சமூகப் பணி பிரிவில் 2021ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதுடன் கூடுதலாக, தனது வாழ்நாளில் 750க்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் சப்கல் பெற்றுள்ளார்.
அந்த விருதுப் பணத்தை அனாதைகளுக்கான மேலும் பல தங்குமிடங்களைக் கட்டுவதற்கு அவர் பயன்படுத்தினார். அவரது வாழ்க்கை பலருக்கு ஒரு உத்வேகமாக இருந்துள்ளது.
2010 இல், அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "மீ சிந்துதாய் சப்கல்" என்ற மராத்தி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வெளியாகி, 54வது லண்டன் திரைப்பட விழாவில் உலகப் பிரீமியருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
குடலிறக்கத்திற்காக புனேவில் உள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிந்துதாய் சப்கலின் உடல்நிலை முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் 04 ஜனவரி 2022 அன்று இரவு 8 மணியளவில் மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் மண்ணை விட்டு அகன்றது. ஆனால் அவர் செய்த நல்ல செயல்கள் இன்றளவும் நம்மை விட்டு அகலாது இருக்கின்றன.