பெண்கள் ஸ்படிக மாலை அணியலாமா?

சேலம் சுபா

பல நூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர் பாறைகளை வெட்டி அதற்குள் தூசி, உடைசல் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனை பட்டை தீட்டித் தயாரிக்கப்படுவதே ஸ்படிகம்.

அறிவியல் ரீதியாக, ஸ்படிகம், சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஐம்பூதங்கள் அனைவருக்கும் பொதுவானது போல, நீர் மற்றும் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகமும் அனைவருக்கும் பொதுவானதே.

ஸ்படிக மாலையை ஒரு நாள் முழுவதும் பசுஞ்சாணத்தில் மூழ்க வைத்துப் பின் நீர் பால் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்து தகுந்த குருவின் கைகளால் அணிவது சிறந்தது என்று சாஸ்திரம் கூறுகிறது.

இதனால் கிரகங்கள் மூலமாக ஏற்படும் இன்னல்கள் விலகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். குறிப்பாக பவுர்ணமியன்று இந்த மாலையை அணிவதால் உடலும் மனதும் மேலும் சக்தி பெறும் என்கிறது சாஸ்திரம்

ஸ்படிக மாலை அணிவது. நமது உடலின் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும். நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காமல் உடல் சூட்டை சீரான, அளவில் வைக்கும்.

ஸ்படிக மாலை நமது மனதை அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு மாற்றுவதில் சிறந்தது. ரத்த அழுத்தம் உள்ளவர் களுக்கு ஸ்படிக மாலை அணிவது சிறந்த நிவாரணம் தரும்.

108  மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் பிடித்து, விரும்பும் இறைவனின் பெயரை சொல்லி நேரம் கிடைக்கும்போது ஜெபம் செய்யலாம். வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும். அதற்கான எளிய வழி இது.

அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தமான மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் ஸ்படிக மாலை வைத்து மனதில் நினைக்கும் நேர்மறை எண்ணங்கள் வெற்றி பெற வேண்டுவது நன்மை தரும்.

காலையில் இருந்து அணியும் மாலை நம் உடல் சூட்டை இழுத்துக் கொள்வதால் இரவில் அதைக் கழற்றி தரையில் வைத்துத் திரும்ப காலையில் எடுத்து அணியும் போது, பூமியின் ஈர்ப்பு சக்தியினால் உடல் சூடு தணிந்து  குளிர்த் தன்மைக்கு மாறும்.

ஸ்படிக மாலையை கழிவறை செல்லும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களிலும் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். முக்கியமாக குளிக்கும் பொழுது கழுத்தில் ஸ்படிக மாலையோடு குளிப்பது ஆரோக்கியம் தரும்.

முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரத்திலிருந்து பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் உள்ளன. உயர்ந்த தரமான ஸ்படிகமணி மாலையை நீரில போட்டால் தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும், தனியாக தெரியாது.

மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சின் சராசரியான  எண்ணிக்கை என்ன தெரியுமா? 21,600 ஆகும். அதே சமயம் ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப் படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் உள்ள மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப்பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும்.