பேட்டி: ஜிக்கன்னு
கண்மணி ராதிகா.. சன் டி.வி செய்தி வாசிப்பாளர்.. வசீகரிக்க வைக்கும் அந்தச் சிரிப்புக்கு இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பாலோயர்ஸ்… 100-க்கு மேற்பட்ட போலி ID-க்கள்! இன்ஸ்டாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் கண்மணி, நேயர்களின் செல்லக் கண்மணி. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரு வெறி, அந்தக் கிராமத்துப் பெண்ணை சென்னைக்குத் தள்ளி விட, இன்று சன் டிவி–யின் பிரபல செய்தி வாசிப்பாளர்.. ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் என்று ஜமாய்க்கிறார். கண்மணி ராதிகாவை கல்கி ஆன்லைன் இதழுக்காக சந்தித்தோம்..
செய்தி வாசிப்பை எப்படித் தேர்வு செய்தீர்கள்?
’’சின்ன வயதிலேயே எனக்கு இதழியல் பிடிக்கும். ப்ளஸ் டூ முடிந்தவுடன் வீட்டில் கிராமத்து பெற்றோர்கள் எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டார்கள். நான் மேற்கொண்டு படிக்க விரும்புவதை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தேன். அப்புறம் லயோலாவில் ஜர்னலிஸம் படிக்க சீட் கிடைத்தபோது துள்ளிக் குதித்தது உள்ளம்’’ – வெள்ளந்தி சிரிப்புடன் தொடர்ந்தார்..
’’லயோலாவில் படிக்கும்போது ஜெயா டி.வி.யில் ஆடிஷனுக்காக அழைத்தார்கள். கிட்டத்தட்ட 500 பேர். கலந்துக்கிட்ட அந்த ஆடிஷனில் செலக்ட் ஆன வெகுசிலரில் நானும் ஒருத்தி. அப்போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை’’ – பட்டாம்பூச்சியாய் படபடக்கிறார்.
ஜெயா டிவி – டூ – சன் டிவி.. இந்த மாற்றம் எப்படி?
ஜெயா டிவியில் நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனால் ஒரு மாற்றம் வேணும் இல்லையா? அங்கேயிருந்து கேப்டன் டிவி, நியூஸ்18, மாலை முரசு என்று நீண்ட பயணம். அப்போது மாலைமுரசு தொலைக்காட்சியில் தொகுப்பாளினி வாய்ப்பும் கொடுத்தார்கள். உலக செய்திகளை அந்தந்த நாடுகளின் உடைகளை அணிந்து தொகுத்து வழங்கியதற்கு குண்டக்க மண்டக்க ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனாலும் செய்தி வாசிப்பாளர்களுக்கு சன் டி.வி. என்பது பெரும் கனவு இல்லையா?. ஆனால் ஏனோ அந்தக் கதவு எனக்குத் திறக்கப்படவே இல்லை. இந்த சமயத்தில் எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நல்லவேளையாக திடீரென ஒருநாள் சன் டி.வி.யிலிருந்து அழைப்பு வந்தது. போனேன். வென்றேன். ஆனால் குறுகிய காலத்திலேயே சன் நியூஸ் சேனலில் மெயின் நியூஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு கொரோனாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’’ –சஸ்பென்ஸ் வைத்து நிறுத்த்னார்..
அப்படி என்ன நல்லது செய்தது கொரோனா?
கொரோனா ஊரடங்கு நேரத்தில்தான் சன் டி.வி.யில் மதிய செய்தி கொண்டு வந்தார்கள். அதில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. . கொஞ்சநாட்கள் கழித்து மெயின் நியூஸ் பிரைம் டைம். மாலை 6 மணி செய்திகள் படிக்கச் சொன்னார்கள். ஜாம்பவான்கள் கோலோச்சிய நேரத்தில் செய்தி வாசிக்க எனக்கும் வாய்ப்பு. சந்தோஷம்… படபடப்பு என கலவையான மனநிலையில் இருந்தேன். அதில் நியூஸ் படிக்க ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள்! மீம்ஸ் தெறிக்க விடுகிறார்கள். இன்ஸ்டாவில் பாலோயர்ஸ்… ஃபேக் ஐ.டி. என வாழ்க்கையை திசை திருப்பிப் போட்டு விட்டது மெயின் நியூஸ்.
இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளமா?
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நீ பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிறாய் என்று இன்ஸ்டாவில் பாராட்டுகிறார்கள்.
சின்னத்திரை ஓகே., அடுத்தது பெரிய திரைதானே?
நோ நெவர்.. சினிமா வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால், எனக்கு விருப்பம் இல்லை. ரசிகர்கள் ஆசைப்படி அவர்கள் பக்கத்து வீட்டு பெண்ணாகவே இருக்க ஆசை.
இந்த சீசனில் பிக்பாஸ் அழைப்பு வந்தது என்று கேள்விப்பட்டோம்?
’’ஆமாம்’’… கண்கள் விரிய சிரிக்கிறார். ’’அதில் கலந்துகொள்ளச் சொல்லி பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தம் வந்தது. ஆனால் நான் உறுதியாக மறுத்து விட்டேன். பிக்பாஸ் என்பது வேறு ஒரு உலகம். அதற்கு நான் சரிப்பட்டுவர மாட்டேன்.
கூகுளில் உங்கள் மீம்ஸ்க்கு என்று தனிப் பக்கமே இருக்கிறதே?
எனக்கே எக்கசக்க ஆச்சரியமாத்தான் இருக்கு! தமிழ் மக்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ரசிகர்கள் நான் நின்றால், நடந்தால்.. கொண்டாடுகிறார்கள்.. சிலிர்க்க வைக்கிறது இந்தப் பாசம்.
விளம்பங்களிலும் வர ஆரம்பித்தது விட்டீர்கள் போல…?
எல்லாப் புகழும் சன் டி.வி.க்கும் ரசிகர்களுக்கும்தான்!
பிடித்த உணவு; பிடித்த உடை; நடிகர், நடிகை?
மஞ்சூரியன் உணவு வகையறாக்கள்.. உடலுக்குப் பொருந்தும் உடைகள் எல்லாமே.. நடிகர், நடிகைகள் எல்லோரும்! எப்படி தப்பித்தேன் பார்த்தீர்களா?’’- சிர்க்கிறார். ம்ம்.. பொண்ணு படு உஷார்தான்.
திருமணம்?
’’ஒய் திஸ் கொல வெறி’’ – கேட்டுவிட்டு எஸ்கேப் ஆனார் கண்மணி ராதிகா.
‘’உங்கள் ரசிகர்கள் பற்றிய மறக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?’’ என்ற கேள்விக்கு கண்மணி ராதிகாவின் பதிலை இந்த வீடியோவில் காணலாம்.