இளையராஜா இசையில் நான் – என் பெற்றோர் செய்த புண்ணியம் – சூரி நெகிழ்ச்சி

இளையராஜா இசையில் நான் – என் பெற்றோர் செய்த புண்ணியம் – சூரி நெகிழ்ச்சி

 'அசுரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் "விடுதலை". இதில் நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் படிப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது அதில் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. வெற்றிமாறன் தன்னுடைய திரைப்படங்களுக்கு வழக்கமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி அமைப்பார். ஆனால் இந்த ‘விடுதலை’ திரைப்படத்திற்காக முதன் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் 'ஒன்னோடு நடந்தா’ என்ற பாடல் உருவாகி உள்ளது. அந்தப் பாடலை தனுஷ் மற்றும் அநன்யா பஃட் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

 ஆர் எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி உடன் பவானி, ஸ்ரீ பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் வேல்ராஜ் 'ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

 இந்நிலையில் விடுதலை படத்தில் இடம்பெறும் ஒன்னோடு நடந்தா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் தனுஷ் பாடியிருப்பது அவரின் வழக்கமான ஸ்டைலில் இல்லை என்றாலும், இந்தப் பாடலுக்கு என்ன தேவையோ, அதை இளையராஜாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு பாடி கொடுத்துள்ளார். அது சிறப்பாகவே அமைந்திருக்கிறது. 

இந்தப் பாடல் சூரிக்கும் அவருடைய காதலிக்கும் வரும் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுகா எழுதிய வரிகள் இளையராஜாவின் இசையுடன் சேர்ந்து ரம்மியமாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் சூரி தமது ட்விட்டர் பக்கத்தில்,

என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் #ViduthalaiPart1என்று ட்விட் செய்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com