ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 'ரூட் நம்பர் 17'!

ஜித்தன் ரமேஷ்
ஜித்தன் ரமேஷ்

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்தப் படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் தம்பிகண்ணம் தானம் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்ல… இதே நிறுவனத்தின் தயாரிப்பில் 14 சர்வதேச விருதுகளை வென்ற, ‘தாய் நிலம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

'ரூட் நம்பர் 17' படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷும் கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவரும் நடித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய அஞ்சு இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஜாக்கி ஜான்சன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் சவுண்ட் கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் டிசைன் ஆகியவற்றை ராஜ கிருஷ்ணன் உள்ளிட்ட காந்தாரா படத்திற்கு பணியாற்றிய குழுவினர் தான் வடிவமைத்துள்ளார்கள்.

ரூட் நம்பர் 17
ரூட் நம்பர் 17

படம் பற்றி இயக்குநர் அபிலாஷ் கூறும்போது, “காட்டோடு சேர்ந்த பாதை என்பதுதான் இந்தப் படத்தின் தலைப்புக்கான அர்த்தம். முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது.

இந்த படத்திற்காக 5500 சதுர அடியில் பூமிக்கு அடியில் ஒரு மிகப்பெரிய செட் அமைத்து 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதுவரை சினிமாவில் யாரும் இப்படி ஒரு செட் போட்டது இல்லை. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆந்திராவில் உள்ள கண்ணவம் என்கிற இடத்தில் இந்த குகை செட்டை அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் இந்த செட்டை பார்ப்பதற்கே பொதுமக்கள் நிறையபேர் வருகை தந்தனர்.

ரூட் நம்பர் 17
ரூட் நம்பர் 17

1990 முதல் 2020 வரை மூன்று வித காலகட்டங்களில் நடக்கும் 30 வருடப் பழிவாங்கல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அதற்கேற்ப ஜித்தன் ரமேஷும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதில் 90 கிலோ எடையுள்ள ஒரு வித்தியாசமான கெட்டப்பும் உண்டு. இதற்காக தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் ரஷீத் அஹமது உழைத்திருக்கிறார்.

அடர்ந்த காடு, மிகப்பெரிய குகை, வறண்ட சமதள பகுதி என மூன்று விதமான இடங்களில் கதை நடைபெறுகிறது. இந்த மூன்றுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம்.

கதைக் களம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்கிறது. படப்பிடிப்பை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளோம்.

ரூட் நம்பர் 17
ரூட் நம்பர் 17

தென்காசி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். யானை, புலி உலாவும் அச்சுறுத்தல் கொண்ட அந்த காட்டிற்குள் மாலை 6 மணிக்கு மேல் யாரும் நுழைய மாட்டார்கள்.. ஆனால் நாங்கள் இரவு 9 மணிவரை படப்பிடிப்பு நடத்தினோம். எங்களது படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே ஒரு திருவிழா மாதிரி, ஒரு ஜாலியான சுற்றுலா சென்று வந்தது மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது.

படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com