கவிஞர் வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியின் முதல் பாகம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இப்போது நாட்படு தேறல் நிகழ்ச்சியின் 2-ம் பாகம் . ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாவது;
நாட்படு தேறல் நிகழ்ச்சியின் 2-ம் பாகம் . ஏப்ரல் 17 முதல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் இந்நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் 13 பாடல்களோடு 13 வாரங்கள் வெளியாகவுள்ளது. மேல்நாடுகளில் திரைப்படங்களை விட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி இப்போதுதான் மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்கின்றது. தமிழில் அந்த முயற்சியை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.
"எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த வகையில் இன்று உலகமெங்கும் இந்த தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும் என்று நம்புகிறேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை.
-இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.