ராம நாம பெருமை!

ராம நாம பெருமை!

வீதியில், ‘ராம நாம’ சங்கீர்த்தனம் பாடியபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், “இதை ஒருபோதும் விற்காதே. ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்” என்று கூறிச் சென்றார். அவனும் அப்படியே செய்தான்.

காலக்கிரமத்தில் அவன் இறந்து போனான். அவனது ஆத்மாவை இழுத்துப் போய் யம தர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும் அவனுடைய பாப, புண்ணியக் கணக்கை பரிசீலித்து, “ஒருமுறை ராம நாமத்தைச் சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள்” என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே’ என்று கூறியிருந்தது அவனது நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து, “ராம நாமத்துக்கு நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்” என்றான்.

அதைக்கேட்டுத் திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்துக்கு நாம் எப்படி மதிப்பு போடுவது?’ என்று எண்ணி, ‘‘இந்திரன்தான் இதைத் தீர்மானிக்க வேண்டும். வா இந்திரனிடம் போகலாம்’’ என்றார்.

அதற்கு அவன், “நான் வருவதென்றால், பல்லக்கில்தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா?” என்றான்.

‘இவன் நம்மையே பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத்தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ, “ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள்” என்றார்.

அதற்கு அவன், “யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால்தான் நான் வருவேன்” என்று மீண்டும் நிபந்தனை விதித்தான்.

அதற்கு இந்திரனும் ஒப்புக்கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவும், ‘ராம நாம மகிமையைச் சொல்ல என்னால் ஆகாது. வைகுண்டம் போய் அந்தப் பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்” என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று, “இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது. அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள்தான் கூற வேண்டும்” என்றனர்.

அதற்கு மகாவிஷ்ணு, “இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லோரும் சுமந்து வருகிறீர்களே, இதிலிருந்தே ராம நாமத்தின் மகிமை தெரியவில்லையா?”  என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்!

‘மும்மைசால் உலகுக்கெல்லாம்

மூலமந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை தானே

இம்மையே, எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் எண்ணும்

செம்மைசேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்.’

- வாலி வதைப் படலம், கம்ப ராமாயணம்.

இப்படி, ராம நாமம்தான் அனைத்து மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com