யார் ஜகத்குரு?

காஞ்சி மஹா பெரியவர்
காஞ்சி மஹா பெரியவர்

ஹா பெரியவரின் யாத்திரை காசி நகரை நெருங்கியது. காசி ராஜா மதன் மோஹன் மாளவியா. ஆதித்ய நாராயண சிங் பெரியவரை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். சிலருக்கு இது பிடிக்கவில்லை! அவர்கள் ராஜாவிடம், ‘காஞ்சி மடம் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் காஞ்சி மடாதிபதிகள், ‘ஜகத்குரு’ என்று அழைத்துக்கொள்வது சரியில்லை’ என்றும் கூறினார்கள்.

இதைக் கேட்ட ராஜாவுக்கு மனசு சஞ்சலப்பட்டு விட்டது. யோசித்து யோசித்து குழம்பி, கடைசியில் பூரண கும்ப மரியாதையை தவிர்த்து விட நினைத்தார். காசி ஹிந்து சர்வ கலாசாலையின் சம்ஸ்கிருதத் துறை பேராசிரியரை அழைத்து, “நாளை நீங்கள் மஹா பெரியவருக்கு பூர்ண கும்ப மரியாதை செய்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அவர் அதிர்ச்சியுடன், "ஏன்? என்ன ஆயிற்று? உங்களுக்கு உடல் நிலை ஏதும் சரியில்லையா?” என்று வினவினார். அதற்கு ராஜா சரியாகப் பதில் சொல்லாமல் மழுப்பினார். பேராசிரியருக்கு ராஜாவின் மனசை யாரோ கலைத்து இருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது.

"பூரண கும்பத்தை நான் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கிறேன். அது நான் செய்த பாக்கியம்! ஆனால், காசி பல்கலைக்கழகத்துக்கான என் கடைசி வேலை அதுவாகத்தான் இருக்கும். அவர் எப்பேர்பட்ட மஹான்! சாக்ஷாத் பரமேஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றே சொல்லலாம். அவருக்கு பூரண கும்ப மரியாதை தர நீங்கள் தயங்குவது சரியா? யாரோ அவரைப் பற்றி தவறாகச் சொன்னால் நீங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்வதா? ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்’ என்று உங்களுக்குத் தெரியாதா? குறைந்தது, சம்ஸ்கிருத பேராசிரியராக உங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிற என்னையாவது கூப்பிட்டு கேட்கக்கூடாதா?” என்று பொழிந்து தள்ளிவிட்டார்.

திக்குமுக்காடிப்போன ராஜா, "சரி சரி… நானே நாளை பூர்ண கும்பம் கொடுக்கிறேன். நீங்கள் பக்கத்தில் இருங்கள்!” என்று ஒப்புக்கொண்டார்.

ர் எல்லை… ஏராளமான ஜனங்கள் பெரியவரை எதிர்கொண்டழைக்கக் கூடி இருக்கிறார்கள். ராஜாவும் ஆஜர். பெரியவரும் வந்து சேர்ந்தார். சூரியன் போல் பிரகாசித்துக்கொண்டு நிற்கும் பெரியவரைக் கண்ட ராஜாவின் பூர்ண கும்பத்தை ஏந்திய கைகள் நடுங்குகின்றன. கீழே போட்டுவிடுவார் போல் இருந்தது. பேராசிரியர் அதைத் தானே வாங்கி வேத மந்திரம் கோஷித்து பெரியவரிடம் நீட்டுகிறார். மஹாபெரியவரும் அதை ஏற்கிறார்.

பின்னர் பேராசிரியரிடம், "ராஜாவுக்கு ஏதோ சந்தேகம் இருக்கு போலிருக்கே? தாராளமாகக் கேட்கச் சொல்லு" என்கிறார்.

ராஜா உடனே தமது சந்தேகத்தை சம்ஸ்கிருதத்திலேயே கேட்கிறார்… “ஜகத்குரு என்பவர் யார்? யாருக்கு அந்தப் பட்டம் பொருந்தும்?” என்கிறார்.

பெரியவர் சிரித்துக்கொண்டே, "இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க சாயந்திரம் வரை பொறுக்க முடியுமா? நான் பார்த்த நோட்டீஸில் சாயந்திரம் வரவேற்புக் கூட்டம் என்றும், என் அனுக்ரஹ பாஷ்யம் என்றும் போட்டு இருக்கிறதே!” என்றார்.

ராஜாவும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.

மாலை சதஸ் கூடியது.

காசி நகர சார்பாக வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது. பெரியவர் ஏற்புரை நிகழ்த்தலானார்.

"ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!” என்று கூறி, பின் ஒரு முறை நிதானமாக கூட்டத்தினர் அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தார்.

"நான் பார்க்கிற வரையில் என்னைத் தவிர, ‘ஜகத்குரு’ பட்டத்துக்கு பொருத்தமானவரா யாரையும் பார்க்கலை!” என்கிறார்.

கூட்டம் கப்சிப் என்றாகி விட்டது! ஒரே அதிர்ச்சி! ஒரு சன்யாஸி! தன்னைத்தானே இப்படிப் புகழ்ந்து கொள்வதா? பலருக்கு ச்சீ என்றாகி விட்டது.

பெரியவர் தொடர்ந்தார். "யார் ஜகத்குரு?

‘குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்|

நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம:|’

என்று தக்ஷிணாமூர்த்தியை ஜகத்குருவாக சொல்லியிருக்கு.

‘வாசுதேவ சுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம்

தேவகீ பரமானந்தம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’

என்று ஸ்ரீ கிருஷ்ணனை ஜகத்குருவாக சொல்லி இருக்கு.

‘ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்’

என்று ஆச்சார்யாளையும் சொல்லி இருக்கு. வேறு யாரையும் இப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை. ஜகத்குரு என்பதை இரண்டு விதமா அர்த்தம் பண்ணலாம். ‘ஜகதாம் குரு’ என்றால் ஜகத்துக்கே குரு என்பதாக முன்னே மூன்று பேரை சொன்னேன்.

'ஜகத் ஏவ குரு' என்றும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். யாருக்கு இந்த உலகமே குருவா இருக்கோ அவர் ஜகத் ஏவ குரு என்றும் அர்த்தம் பண்ணலாம். அப்படிப் பார்த்தா சின்ன வயசில் இந்த மடத்துக்கு வந்ததில் இருந்து லோகத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டே இருக்கேன். இன்னமும் பாடம் கற்றுக்கொள்கிறேன். அதனால்தான் வேறு யாரையும் விட எனக்கே. 'ஜகத் ஏவ குரு'வாக இருக்க அதிக அருகதை இருக்குன்னு சொன்னேன்."

இதைக் கேட்டதும் ராஜா சாஷ்டாங்கமாக மஹாபெரியவரின் காலில் விழுந்தார்! அதே சபையில் ராஜா, "நான்தான் அப்படி மடத்தனமான கேள்வியைக் கேட்டவன். இப்போது புரிந்து போயிற்று. நீங்களே ஜகத்குரு. ஜகத் ஏவ குரு இல்லை, ஜகதாம் குரு!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். சபையோர் ஆரவாரித்தனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com