மகா பெரியவருக்கு சேவகம் செய்ய ஆசைப்பட்ட வைர வியாபாரி!

மகா பெரியவருக்கு சேவகம் செய்ய ஆசைப்பட்ட வைர வியாபாரி!

சித்திரை மாதம் என்று சொல்லும்போதே உடல் வியர்க்கும். உஷ்ணம் தகிக்குமே. தமிழ் புது வருஷம் அன்று. விடியற்காலை 3 மணிக்கே எழுந்து குளித்து, அந்த மஹா ஜ்யோதிஸ்ஸின் விஸ்வரூப தரிசனத்துக்காக எல்லாரும் காத்திருப்பார்கள். ஸ்ரீமடம் வாசலிலும், பெரியவருடைய ஸயன அறையின் வாசலிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, பெரிய பெரிய கோலங்கள் போடப்பட்டு, செம்மண் பூசப்பட்டிருக்கும். கோலத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஜொலிக்கும்.

காலை வெயில் சுரீர் என்று இருந்தாலும் அதைக் கொஞ்சமும் லட்சியம் பண்ணாமல் காஞ்சி மடத்தில் பெருங்கூட்டம். பாம்பு போல் நெளிந்து வளைந்து வரிசையாக பக்தர்களுக்கு நடுவே ஒரு பதினாறு வயது பையன். பத்து மணியாகிவிட்டது அவன் பெரியவர் எதிரில் செல்லும்போது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினான் அவன்.

"எழுந்திரு" என்றார் பெரியவர்.

இரு கையும் சிரத்தின் மேல். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.  பெரியவா, ‘கிட்டே வா‘ என்று ஜாடை காட்ட அருகே கை கட்டி நின்றான்.

"உன் பேர் என்ன. எங்கிருந்து வறே?”

"என் பேர் பாலகிருஷ்ண ஜோஷி. குஜராத்தி. மெட்ராஸ்லேதான் இருக்கோம்.” வாயைக் கையால் பொத்தியபடி பதில்.

"எந்த இடத்திலே?”

"ஹனுமந்தராயன் கோயில் கிட்டே சுவாமி”

"என்ன படிச்சிருக்கே?”

"எட்டாவது பெரியவா.”

"ஓஹோ. இன்னிக்குப் புது வருஷங்கிறதாலே காஞ்சிபுரம் கோயில் தரிசனம் எல்லாம் பண்ண வந்தியோ?”

“இல்லை… பெரியவா தரிசனத்துக்காக.”

"அபச்சாரம், அபச்சாரம். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எங்கேயாவது போனா, முதல்லே சிவன், விஷ்ணு கோயில்தான் போகணும். நான் அப்படித்தான் எங்கே போனாலும் பண்றேன். அப்புறம்தான் என் வேலை. புரியறதா? ” சிரித்துக்கொண்டே தெய்வம் சொல்லியது.

"புரியறது பெரியவா.”

“சரி. பிரசாதம் வாங்கிண்டு கோயில்களுக்கு போ. அப்புறம் மெட்ராஸுக்கு பஸ் ஏறணும் என்ன?” அழுத்தமாக சொன்னார் மகா பெரியவார்.

"பெரியவா சொன்னமாதிரியே எல்லா கோயிலுக்கும் போய்விட்டு மடத்துக்கு வந்து பெரியவா அனுக்கிரஹம் வாங்கிக்கிறேன்” தைரியமாக சொன்னான் பாலகிருஷ்ண ஜோஷி.

"ஓஹோ, கோயில்கள் தரிசனத்துக்கு அப்புறம் மடத்தில் சாப்பாடா? அப்பறம் பஸ். சரி சரி. பிரசாதம் தரேன்.”

பாலகிருஷ்ண ஜோஷி ஏதோ சொல்லத் தயங்கினான். கண்களில் நீர்.

"என்ன விஷயம் சொல்லு.”

"இங்கேயே கொஞ்ச காலம் தங்க...”

"இங்கன்னா என்ன அர்த்தம் புரியலே…”

"பெரியவாளோடு மடத்தில்…" பவ்யமாகச் சொன்னான்.

"என்ன இந்த மடத்திலேயா? இது சன்யாசிகளுக்குடா, உன்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு இங்கே என்ன வேலை? போய் ஸ்வாமி தரிசனம் எல்லாம் முடிச்சுண்டு ஊர் போய்ச் சேரு.”

ஜோஷி நகரவில்லை. மீண்டும் நமஸ்கரித்தான்.

"பெரியவா அப்படிச் சொல்லக்கூடாது. என்னுடைய ஆசை இந்த மடத்தில் உங்களுக்கு சேவகம் பண்ணிண்டு இருக்கணும்னு தான்.”

பெரியவா அவனைப் புரிந்து கொண்டார். அவனது தீர்மானம், பவ்யம் அவருக்கு பிடித்தது.

"எனக்கு பணிவிடை பண்ண ஏற்கெனவே நிறைய பேர் இருக்கா. இன்னொருத்தன் நீ எதுக்கு? பேசாம மெட்ராஸ் போ.”

ஜோஷி நகர்ந்தான். மடத்தை விட்டுப் போகவில்லை.  சாப்பிட்டான். பெரியவர் சிரம பரிகாரம் பண்ணும் அறைக்கு வாசலில் ஒரு மூலையில் அமர்ந்தான். சாயந்திரம் பெரியவா ஸ்நானம் முடித்து வெளியே வந்தார். ஜோஷியைப் பார்த்தார் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்ற ஜோஷியைக் கடந்து சென்றார்.

நான்கு நாட்கள் வைராக்கியமாக ஜோஷி அவர் பார்வையில் பட்டுக்கொண்டு நின்றான். ஐந்தாம் நாள் அதிகாலை மஹாஸ்வாமி காமாக்ஷியம்மன் கோயில் புஷ்கரணியில் உஷஸ் கால ஸ்நானம் செய்யக் கிளம்பியவர் குளத்திலிருந்து கரை ஏறும்போது ஜோஷி நின்றதைப் பார்த்தார்.

"என்னடா நீ இன்னும் மெட்ராஸ் போகலையா?”

"இல்லை பெரியவா. என் சங்கல்பம் முடியற வரை திரும்பலை.”

"அப்படி என்னடா சங்கல்பம்?” தெரியாதது போல் கேட்டார் மகா பெரியவா.

"பெரியவா திருப்பாதங்களுக்கு பணிவிடை சில காலம் செய்யணும்” தயங்கிக்கொண்டே சொன்னான் ஜோஷி.

"சாத்தியமில்லாத சங்கல்பத்தாலே என்ன பிரயோஜனம்?” பெரியவா போய்விட்டார். காமாக்ஷி தரிசனம் செய்து விட்டு ஜோஷியும் மடத்துக்கு திரும்பி வழக்கம்போல் பெரியவா அறைக்கு வெளியே தரையில் அமர்ந்தான்.

பெரியவர் வெளியே பக்தர்களுக்குத் தரிசனம் தர வந்தபோது அவன் மீது பார்வை பட்டது. அவன் வைராக்கியம் பிடித்தது.

"இங்கே வா. உன்னோட அப்பா ஏதாவது ஆபிஸ்லே வேலையா இருக்காரா? வியாபாரமா?”

"வைர வியாபாரம் பெரியவா.”

"ஓஹோ. உன் குணத்தைப் பார்த்தா நீயும் பெரிய வைர வியாபாரி ஆயிடுவே. அப்போ நாணயமானவன்னு பேர் எடுக்கணும் சரியா. இப்போ மடத்துலே சில பசங்க இருக்கா. அவாளோடு சேர்ந்துண்டு எனக்கு நீயும் ஏதாவது பணிவிடை செய். போ. ”

ஜோஷிக்கு பரம சந்தோஷம். அவன் எண்ணம் கை கூடிவிட்டதே. நாலைந்து பையன்கள் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டான். ரெண்டு நாள் பெரியவருடன் தரிசனத்தில் இருந்தான். சொன்ன வேலையைச் செய்தான். அந்த ரெண்டு நாளும் அந்தப் பையன்களோடு படுக்கை.

மூன்றாம் நாள் இரவு படுக்கும் முன்பு, "ஜோஷி…"  பெரியவா கூப்பிட்டார்கள்.

நமஸ்காரம் பண்ணிவிட்டு கைகட்டி வாய் பொத்தி நின்றான் அவர் ஏதிரே.

"இதோபார் ஜோஷி, நீ என்ன பண்றே, நாள் முழுக்க அந்தப் பையன்களோடேவே நீயும் எனக்கு பணிவிடை பண்ணு. ஆனா, ராத்திரியிலே இங்கே தூங்கக்கூடாது.”

அதிர்ந்து போன ஜோஷி, "பெரியவா எனக்கு இப்படி ஒரு தண்டனை தரக்கூடாது. மத்த பசங்களோடே நானும் இங்கேயே இருக்கேனே.”

"இதோ பாரடா, ஒரு காரணமாத்தான் சொல்றேன். சொல்றதைக் கேளு.”

"சரி… பெரியவா சொல்றபடி நடக்கிறேன்.”

"அப்படிச் சொல்லு”  சிரித்துக் கொண்டே பெரியவா, “நேரா சமையல் கட்டுக்குள் போனா, அங்கே கோட்டை அடுப்புக்கு பக்கத்திலே ஒரு பென்ச் இருக்கு. அதிலே படுத்துண்டுட்டு விடிகாலம்பற எழுந்து உன் கடமையெல்லாம் முடிஞ்சு, குளிச்சு, அப்புறம் என்கிட்டே வா. என்ன புரியறதா?” என்றார்.

மற்ற பையன்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க, ஜோஷி கண்ணைத் துடைத்துக் கொண்டே பெரியவா சொன்னபடி செய்தான்.

போகும் வழியில் ஒரு பையனிடம், "ஏண்டா பெரியவா உங்க யார்கிட்டேயாவது இப்படி சமையல்கட்டு அடுப்புகிட்ட பெஞ்சுலே போய் படுன்னு சொல்லியிருக்காளா?”

"இல்லேயே, அப்படி யார்கிட்டேயும் சொல்லலியே” என்றான் அவன்.

வருத்தத்தோடு சென்றான் ஜோஷி. இரவு பத்து மணி. ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை. அடுப்பருகே பெஞ்சில் படுத்தான். மனது வாடியது. சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, இரவெல்லாம் தூங்கவில்லை. பொழுது விடிந்தது. மடத்தில் அன்றாட நியதிகள் துவங்கியது. வேத பாராயணம் பஜனை ஒலித்தது.

விடுவிடுவென்று எழுந்து, காலைக்கடன்கள் முடித்து குளித்து காமாட்சி அம்மன் சன்னிதி சென்றான். மடம் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. நடுப்பகல் சமயம் மடத்துக்கு வந்தான். சாப்பிட்டான். காமாட்சி கோயில் சென்று விட்டான். இரவு அடுப்படி படுக்கை. ரெண்டு நாள் இப்படி மஹா பெரியவாளை பார்க்கவில்லை.

மூன்றாம் நாள் காலை. பெரியவா மற்ற பையன்களைக் கேட்டார். "எங்கேடா அந்தப் பயல் ஜோஷி. ரெண்டு நாளா கண்ல படலையே . எங்கே போனான். என்கிட்டே சொல்லாம மெட்ராஸ் போயிட்டானோ?”

"இல்லை பெரியவா. இங்கேதான் மடத்தில் இருக்கான்.”

"ரெண்டு நாளாக் காணோமே.”

"தெரியலே பெரியவா.”

இன்னொருத்தனையும் கேட்க, அவனுக்கும் காரணம் தெரியவில்லை.

"சரி… பார்த்தா அவனை இங்கே அழைச்சுண்டு வா."

கை கட்டி வாய் புதைத்து தலை குனிந்து அவர் எதிரில் ஜோஷி நின்றான்.

"என்னடா குழந்தே, உடம்பு சரியில்லையா. ரெண்டு நாளா உன்னை இங்கே காணோமே.”

பதில் இல்லை.

"என்னடா சும்மா இருக்கே. என்ன துக்கம். ஒருவேளை என்மேலே கோவமோ?”

"அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ பெரியவா. மனசு உடைஞ்சுபோய் வருத்தம்" வாய் குழற, மெதுவாகச் சொன்னான்.

"அப்படி என்னடா வருத்தம். நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?”

எல்லோரும் ஆச்சர்யத்தோடு நடப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கீழே தடாலென்று விழுந்து வணங்கிய ஜோஷி, "ஒண்ணுமில்ல பெரியவா. முதல் ரெண்டு நாள் மட்டும் மத்த பேரோடு உங்க அறையிலே படுக்க விட்டேள். அப்புறம் அடுப்படியில் எங்கேயோ போய் படுன்னு சொல்லிட்டேள். அவாள் எல்லாம் தமிழ்க்காரா... நான் குஜராத்திங்கிறதாலேயோன்னு மனசிலே உறுத்தித்து" அழுது கொண்டே பதிலளித்தான் ஜோஷி.

ஒரு நிமிஷ அமைதியில் அவனை பார்த்தார் பெரியவர். மற்றவர்களை அனுப்பிவிட்டு அவனிடம்,  "ஏண்டா பாலகிருஷ்ணா , நான் உன்னை அடுப்படிலே படுக்கச் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தமா? நான் அந்த எண்ணத்திலே சொல்லலை. நீ சின்னப் பயல். தப்பா புரிஞ்சுண்டுட்டே. உக்காரு இங்கே”

தரையில் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்தான்.

"இங்கே பாரு" மஹா பெரியவா தொடை வரை தனது காவி வஸ்திரத்தை உயர்த்திக் காட்டினார். சிவப்பு சிவப்பாக நிறைய கொசுக்கடி அடையாளங்கள் அந்த தெய்வத்தின் ரோஜா நிற கால்களில்.

"இங்கே ராத்திரியில் எவ்வளவு கொசுக்கடி பார்த்தியா? நான் சன்னியாசி. பொறுத்துப்பேன். நீ குழந்தே. ரெண்டு நாளா நீ கொசுக்கடியிலே துடிக்கிறதைப் பார்த்துட்டுதான் ரோஜா நிறத்தில் இருக்கிற சின்னக் குழந்தை... கொசு வராத ஒரே இடம் சூடான அடுப்படி. அங்கே போய் படு ராத்திரிலேன்னு சொன்னேன். நீ என்னமோ தப்பா கணக்கு போட்டுட்டே."

மஹா பெரியவா சிரித்தார். ஜோஷி அடக்கமுடியாத அழுகையால் ஓவென்று கதறினான்.

"பெரியவா, என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. உங்கக் கருணையை புரிஞ்சிக்காத முட்டாள் ஏதோ உளறிட்டேன்.”

பெரியவரின் அபய ஹஸ்தம் உயர்ந்தது. "நீ பெரிய வைர வியாபாரியாயிடுவே. நாணயமா, நியாய விலைக்கு வியாபாரம் பண்ணு” பெரியவா ஆசி கிடைத்தது ஜோஷிக்கு.

சில வருஷங்கள் ஓடியது. பாலகிருஷ்ண ஜோஷி பெரிய தர்ம கைங்கர்யம் செய்யும் பிரபல வைர வியாபாரி. பெரியவா பக்தர் என்று எல்லோரும் போற்றினர். பெரியவா சமாதி அடையும் வரை மடத்துக்கு வந்து தரிசனம் செய்தவர் சில வருஷங்களிலேயே பெரியவர் திருவடிகளைச் சேர்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com