‘இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்!’

‘இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்!’

கார்த்திகை மாதம்! ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. விடியும் முன் ஸ்நானம் பண்ணுவாரென்பதால் மகாபெரியவாளுக்கு கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போட வேண்டும். அதற்காக ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார். ‘டொக்’கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது! தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் மகாபெரியவாளின் அற்புதத் திருமேனி தெரிந்தது.

 "இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்... வெந்நீர் வேணாம்..." என்றார்.

வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!

"வெங்கட்ராமனை கூப்டு!" என்றார் மகாபெரியவர்.

 திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ? அதை பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..." என்றார் மகாபெரியவர்.

கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது. காலை சுமார் ஏழு மணி இருக்கும். ‘மியாவ்’ என்று மெல்லிசாக ஒரு குரல் கேட்டது.

"அடேய்! பூனை எங்கேடா இங்கே வந்தது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது! ஷ்ஷ்ஷூ... ஷூ...! என்று குத்துமதிப்பாக அதை அனைவரும் விரட்டினர். ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை! ‘பூனை எங்கே? பூனை எங்கே?’ என்று அனைவரும் தேடிக்கொண்டிருந்தார்கள்.

ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போய் பார்த்தார். அதற்குள் ஒரு தாய்ப்பூனை. அந்தப் பூனையின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, அந்தத் தாய்ப்பூனையின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நான்கு பூனைக்குட்டிகள், இன்னும் கண்கூடத் திறக்காமல்! ‘ஆஹா! கோட்டை அடுப்பை இன்னிக்கு மூட்ட வேணாம்’ என்ற மகாபெரியவாள் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது!

குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்து விட்டாள் அந்த அம்மாப் பூனை! அவளை விரட்டிவிட்டு, மகா பெரியவர் தனக்கு குளிக்க வெந்நீர் போட்டுக்கொள்ளுவாரா என்ன?

“பூனைகள் நன்னா தூங்கட்டும்... எனக்கு வெந்நீர் வேணாம்!” என்றார்.

‘ஏகம் ஸத்!’ நமக்கெல்லாம் அது வெறும் மேல்பூச்சாக சொல்லும் வார்த்தை! பெரியவாளுக்கு…? அவரே அதன் பொருள் அல்லவா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com