கடன் பிரச்னை தீர எளிய பரிகாரம்!

கடன் பிரச்னை தீர எளிய பரிகாரம்!

டன் என்பது அனைவரது வாழ்விலும் தொற்றிக்கொண்டுவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கான எளிய பரிகாரத்தைப் பார்க்கலாம்! கேட்ட வரங்களை, கேட்டபடி அள்ளிக் கொடுப்பவர் பெருமாள். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை தனது நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர். இந்த எம்பெருமானை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்துவர கடன் பிரச்னைகள் தீரும்.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிலோ அல்லது கோயிலுக்கு சென்று பெருமாளையும், தாயாரையும் வழிபாடு செய்யலாம். பெருமாளை வழிபாடு செய்யும்போது துளசி மாலையோடு சென்று வழிபாடு செய்வது மேலும் சிறப்பைத் தரும். எவரொருவர் விடாமல் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மனதார செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக செல்வம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பெரிய அளவில் வராது என்பது நம்பிக்கை.

செவ்வாய்க்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று உங்களுக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்னை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் சமயத்தில் முதலில் உங்களிடம் கடன் பெற்றவருக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்றும், கடன் கொடுத்த உங்களுக்கும் எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்றும் வேண்டுவதே சிறந்தது.

இரண்டாவதாக, உங்களுக்கு யாராவது அவசரத் தேவைக்கு கடனை கொடுத்திருப்பார்கள். அவர்கள், உங்களுக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்கும்போது, கடனை திருப்பிக் கேட்பவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நீங்கள் தக்க சமயத்தில் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நமக்கு உதவி செய்த, நமக்கு கடன் கொடுத்தவருக்கு சாபம் விடக்கூடாது. நமக்குக் கஷ்டம் வரும்போது நமக்கு உதவி செய்த மனிதர்களை எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் சபிக்கவே கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் கடன் கொடுக்க வேண்டிய கடனாளியாக இருந்தாலும் சரி அல்லது கடனை வசூல் செய்யும் இடத்தில் நீங்கள் இருந்தாலும் சரி, மனிதர்களுடைய சூழ்நிலையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எப்போதுமே இறைவனிடம் வேண்டுதல் வைக்கும்போது அடுத்தவர்களை பழித்து, திட்டி, அதன் பின்பு உங்களுடைய பிரச்னைகள் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுக்குக் கடன் வசூல் ஆக வேண்டும் என்றாலும், நீங்கள் யாருக்கேனும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றாலும், நல்லதை மட்டுமே நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேண்டுதல் வைத்தால் மட்டுமே அது பலிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com