காலையில் ஏன் சுப்ரபாதம்?

காலையில் ஏன் சுப்ரபாதம்?

ருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினைக் காக்க ராம-லட்சுமணர்கள் சென்றபோது, கங்கைக் கரையில், அவர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள், காடு, மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்துக் கொண்டு வந்த விஸ்வாமித்திரர், அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுமணர்களை எழுப்புகிறார். நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக்கொண்டே இருக்கிறாராம்! ம்ஹூம்… இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.

உடனே, ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என்று சொல்லிக்கொண்டே எழுப்பினாராம். ‘இன்று ஒருநாள், இந்த தெய்வக் குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன். ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினைப் பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினைப் பெற்றவள்’ என நினைத்து, அவளை தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார்.

‘கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலி போல் செய்திடுவாய் இறை கடமை!’ என்று. இந்த, ‘கௌசல்யா சுப்ரஜா’ என்ற வால்மீகியின் வார்த்தையினைக் கொண்டே பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் சுப்ரபாதத்தை எழுதினார். அவர் எழுதிய அந்தப் பாடலே இன்றைக்கு திருமலை திருப்பதியில் எம்.எஸ்.அம்மாவின் குரலில் திருப்பள்ளியெழுச்சிப் பாடலாய் ஒலிக்கிறது.

ல்லாம் சரி, ராமனை எழுப்பியாச்சு. லட்சுமணனும்தான் தூங்கிக்கொண்டு இருக்கிறான். ஏன் லட்சுமணனை எழுப்பவில்லை. இதைப் படிப்பவர்களுக்கு இந்தக் கேள்வி எழும்பும். ஏனென்றால், லட்சுமணன் ஆதிசேஷன் அம்சம். விஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் எழுப்ப மாட்டார்கள். எழுப்பவும் முடியாது. அதனால்தான் லட்சுமணனை இதில் சேர்க்கவில்லை.

பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, ‘கௌசல்யா சுப்ரஜா’என ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்? இதில் என்ன அர்த்தம் இதற்கு? அதாவது, ‘இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராமபிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தைப் பெற்றாயோ…’ என்று ஸ்ரீராமபிரானின் புகழை மறைமுகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.

‘ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய

வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம!’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com