தமிழக பள்ளிகளில் வகுப்பறையில் மாணவர்களுக்கு செல்போன்கள் வைத்திருக்க அனுமதி கிடையாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்படியும் மாணவர்கள் எடுத்து வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்கலிடம் பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்படி மீறி எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்திய காரணத்தினால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதனை சரி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சலிங் வகுப்புகள் ஒரு வாரத்துக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
அரசுப் பள்ளிகளில்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். அந்த வகையில் சுமார் ஆயிரம் ஆசிரியர்களை இந்த வருடம் புதிதாக நியமிக்க இருக்கிறோம். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் முறையாக துவங்கியுள்ளதால், 'இல்லம் தேடி கல்வித்திட்டம்' படிப்படியாக நிறுத்தப்படும்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.