

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஜான்வி கபூர், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடித்த ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற பாலிவுட் திரைப்படம், 2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாதிரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கத்தில் உருவான இந்த படத்தை, கரண் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் தயாரித்திருந்தனர்.
பாலிவுட் சினிமாவில் இந்த ஆண்டின் மிகவும் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மனதை நெகிழ வைக்கும் கதையசம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்த போதிலும், வசூலில் ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும், படத்திற்கு விமர்சனரீதியாக பலரின் பாராட்டுக்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், ஒரு முஸ்லிம் (ஈஷான் கட்டர்) மற்றும் ஒரு தலித் (விஷால் ஜெத்வா) சிறுவர்களின் குழந்தை பருவ நட்பைச் சித்தரிக்கிறது. அவர்கள் தங்கள் குடும்பப் பெயர்கள் காரணமாக நீண்ட காலமாக மறுக்கப்பட்ட மரியாதையையும் கண்ணியத்தையும் பெற்றுத் தரும் ஒரு காவல்துறை வேலையை பெற முயற்சி செய்வது தான் இந்த படத்தின் கதை. படத்தில் ஜான்வி கபூர் சுதா பார்த்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
‘ஹோம்பவுண்ட்' திரைப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) விழாவில் திரையிடப்பட்டபோது, கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்ட பார்வையாளர்கள் 9 நிமிடங்கள் எழுந்துநின்று கைத்தட்டி வரவேற்பு அளித்தனர். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு(2026) மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் ஹோம்பவுண்ட் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதி பட்டியலில் தேர்வாகியுள்ளது. இதன்பின் இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22-ம்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு கரண் ஜோஹர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை எழுதி உள்ளார். அதில், படத்தின் இயக்குனர் நீரஜ் கய்வானுக்கு நன்றி தெரிவித்த கரண், ‘ஹோம்பவுண்ட்'திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகி உள்ளதற்கு பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
எங்கள் பல கனவுகளை நனவாக்கியதற்கு நீரஜ் கய்வானுக்கு நன்றி. கேன்ஸில் இருந்து ஆஸ்கார் தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவது வரை இது ஒரு மிகப்பெரிய பயணமாக இருந்து வருகிறது! மேலும் இந்த படத்தில் நடித்த நடிகை, நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி.’ என்று பதிவிட்டுள்ளார்.