கால்பந்து கைப்பந்தான கதை

கால்பந்து கைப்பந்தான கதை

கால்பந்து வீரர்களின் கால்கள்தான் கோல்களை அடிக்கும்.  சில சமயம் அவர்களின் தலையில் படும் பந்தும் கோல்போஸ்ட்டுக்குள்  விழுந்து வெற்றி காண வைக்கும்.  ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியிலும் தவறாமல் எழுப்பப்படும் ஒரு கேள்வி ' இந்த முறையும் எந்த போட்டியிலாவது கடவுளின் கை பங்கேற்குமா?' என்பதுதான்.  முக்கியமாக அர்ஜென்டினா அணியினரை நோக்கி இந்த கேள்வி எழுப்பப்படும். 

பிரபல கால்பந்து வீரர் மாரடோனாவுக்கும் கடவுளின் கைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

1986 ஜூன் 22ஆம் தேதி அர்ஜென்டினா அணியும் இங்கிலாந்து அணியும் உலககோப்பை களத்தில் மோதியபோது இருதரப்பு பார்வையாளர்களும் உச்சகட்ட பதற்றத்தில் இருந்தார்கள்.  கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போது ரசிகர்களுக்கு இருக்கும் அதே மன நிலை அவர்களுக்கும் இருந்தது

இரு தரப்புக்கும் இடையே பாக்லாந்து போர் நடைபெற்று சில ஆண்டுகளே ஆகியிருந்த காலகட்டம் அது.  தெற்கு அட்லாண்டிக் கடலில் இருந்த இரு தீவுகள் யாருக்கு சொந்தம் என்பது குறித்த போர் அது.  பிரிட்டிஷ் அரசு தனது கடற்படையை அங்கு அனுப்பியது.  74 நாட்கள் போர் நடைபெற்றது.  இறுதியில் அர்ஜென்டினா சரணடைந்தது.  அந்தத் தீவுகளை பிரிட்டனுக்கு அளித்தது.  இந்தப் போரில் 649 அர்ஜென்டினா  ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.   பின்னர் ஒருவழியாக இருநாடுகளுக்கும் தூதரக தொடர்பு ஏற்பட்டது என்றாலும் மனதில் உள்ள பகைமை அடங்கவில்லை.  முக்கியமாக கால்பந்து ரசிகர்களுக்கு.

மேற்படி போட்டியின் இரண்டாம் பாதியில் மாரடோனா தனது முதல் கோலைப் போட்டார்.  இது இங்கிலாந்து விளையாட்டு வீரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.  என்றாலும் நடுவர் மாரடோனாவுக்கு  சாதகமாகத் தீர்ப்பளித்தார்.

argentina vs england match : maradona
argentina vs england match : maradona

தொலைக்காட்சியில் வெளியான ரீப்ளேக்கள் அவர் கால்பந்தை காலோலோ தலையினாலோ அடிக்கவில்லை என்பதையும் தனது கைமுஷ்டியால் அதை அடித்தார் என்பதையும் எடுத்துக் காட்டின.  பின்னர் கேட்டபோது ‘அது கடவுளின் கை' என்று மாரடோனா கூறியது தலைப்புச் செய்தியானது. 

அந்த முதல் கோல் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது என்றாலும் மிகச் சிறப்பாக தனது இரண்டாவது கோலை அந்த போட்டியில் மாரடோனா அடித்தது மற்றபடி பெரிதும் பாராட்டப்பட்டது.

இம்முறை சவுதி அரேபியா அணியிடம் அர்ஜென்டினா அணி தோற்றபோதும் சில விமர்சகர்கள் ' கடவுளின் கை, கை கொடுக்கவில்லையோ?' என்று கிண்டல் அடித்தது இந்தப் பின்னணியில்தான்.

கடந்த இரு நாட்களில் நடந்தது...

கேம​ரூன் செர்பியா மோதலில் இரு அணிகளும் 3 கோல் எடுக்க, ஆட்டம் டிரா​வில் முடிந்தது.  உலகக் கோப்பை போட்டிகளில் கேம​ரூன் ஒரே ஆட்டத்தில் ​மூன்ற கோல்கள் அடித்தது இதுவே முதன்முறையாகும்.

சுவிட்சர்லந்தை 1-0 கணக்கில் வீழ்த்திய பிரேசில் ரவுண்டு 16க்கு முன்னேறியது.

கானா அணி தென் கொரிய அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com