இந்தியக் கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் ரன்வீர், கிழக்கு பிராந்திய கடற்படை கமாண்ட் மண்டலத்தைச் சேர்ந்தது. இந்தக் போர்க்கப்பல் பல்வேறு துறைமுகங்களுக்குச் சென்ற பின்னர் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கப்பலின் உள்பகுதியில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக 3 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து கப்பல் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கப்பலில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
–இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு கடற்படை மண்டல தளத்திலிருந்து கிளம்பிய ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் விரைவில் தளத்துக்கு திரும்பவிருந்த நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.