தமிழகத்தில் மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், அப்போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய மகளிர் சி அணியை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
–இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் இப்போட்டிகளில் கலந்துகொள்ள இந்திய மகளிர் அணியின் சி பிரிவினர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதன்படி ஈஷா கரவடே, ஷாகிதி வர்ஷினி, பிராட்யுஷா போடா, பி.வி.நந்திதா மற்றும் விஷ்வா வாஷ்ணவாலா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே ஆண்கள் பிரிவில் 3 ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மகளிர் சி பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
– இவ்வாறு அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் மொத்தம் 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கான பயிற்சியை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.