மதுரையில் அடுத்த, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 

மதுரையில் அடுத்த, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 

மத்திய அரசின் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டிகரில் நேற்றும் அதற்கு முன் தினமும் ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 18%, சூரிய சக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%, பேனா மை, கத்தி, பிளேடு போன்றவற்றின் ஜிஎஸ்டி வரி 18%, கிரைண்டர் அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 18% என வசூலிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டத்திற்கு பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தின் மதுரையில் நடத்தப் படும். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டதர்கு இணங்க, அவர் அழைப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

-இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

இதுகுறித்து தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் நன்றி தெரிவித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பை மத்திய நிதியமைச்சர் ஏற்று கொண்டதற்கு நன்றி. கோயில் நகரமான மதுரை மற்றும் அங்குள்ள மக்கள் சார்பில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மற்றும்  உயர் அதிகாரிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com