முகமது ஷமிக்கு எதிரான பதிவுகள்: நீக்கியது பேஸ்புக்!

முகமது ஷமிக்கு எதிரான பதிவுகள்: நீக்கியது பேஸ்புக்!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 24) இரவு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான் ஆட்டம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது.

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவு செய்தனர். ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவரை தேச துரோகியாகச் சித்தரித்து பதிவுகள் வெளியிட்டனர். இதையடுத்து சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் உள்பட முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தியும் எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

இந்திய கிரிக்கெட் வீரரை இழிவுபடுத்தும் பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். எங்களுடைய விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். சமூகவலைத்தளங்களில் பிரபலங்களுக்கான கண்டனப் பதிவுகளை நீக்கும் வகையில் எங்களுடைய விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு பேஸ்புக் நிறூவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com