ஒரு நிருபரின் டைரி – 27.– எஸ். சந்திரமெளலி.பொதுவாக, யாரும் கலைத்தொண்டு ஆற்றவேண்டும் என்ற நோக்கத்துடம் சினிமாவுக்கு வருவதில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும்; பேரும், புகழும் சம்பாதிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதுவும், இந்தக் கால நடிகர், நடிகர்கள் மட்டுமில்லாமல், இயக்குனர்களும், இதர டெக்னிஷியன்களுக்கும் கூட அதுவே லட்சியமாக இருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆனால், உடனே தன் சம்பளத்தை சகட்டுமேனிக்கு அதிகரிப்பதே இதற்கு சாட்சி. ஆனால், இதற்கு விதிவிலக்கு நடிகை சௌகார் ஜானகி என்று சொன்னால் அது மிகை இல்லை. அவர், நடிப்பின் மூலமாக சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில் நடிக்க வந்தவர். எழுபது வருட சினிமா வாழ்க்கை. தொண்ணூறு வயதாகிவிட்டது. நாகேஷ் வாழ்க்கைத் தொடர் போலவே, கல்கியில் சௌகார் ஜானகியின் வாழ்க்கை அனுபவங்களையும் நான் தொடராக எழுதி இருக்கிறேன். 'நாகேஷ்' என்ற மகத்தான கலைஞனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ கூட கொடுக்கவில்லை. அந்த வகையில், அட்லீஸ்ட், சௌகார் ஜானகிக்கு தொண்ணூறு வயதிலாவது 'பத்மஸ்ரீ கௌரவம் கிடைத்ததே' என்று எனக்கு சந்தோஷம்.."நாகேஷ் போலவே சௌகார் ஜானகியின் தொடரை எழுதியபோதும், வாராவாரம் பிரசுரமாகவிருக்கும் அத்தியாயத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்கு படித்துக் காட்டுவேன். தற்போதைய முதல்வர் வசிக்கும் செனடாஃப் சாலை பகுதியில்தான் அவரது வீடு. செல் போன் இல்லாத அந்தக் காலத்தில், நான் வழக்கமாக மாலை ஐந்து மணி வாக்கில்தான் அத்தியாயம் படித்துக்காட்டுவதற்குச் செல்வேன். டெலிபோன் செய்துவிட்டுப் புறப்படுவேன். அவர் வீட்டை அடையும்போது தன் வீட்டு வாசலில் காம்பவுண்டு கேட் சாவியோடு சௌகார் காத்திருப்பார். காரணம் அந்த நேரத்தில் அவர் வீட்டு வேலைக்காரப் பெண்மணி இருக்கமாட்டார். வீட்டுக்குள் போனதும் முதல் வேலையாக தன் கையால் சுடச் சுட காபி போட்டுக் கொடுத்து உபசரிப்பார். புறப்படும்போது, மறுபடி கேட் வரை வந்து வழி அனுப்பி வைப்பார். ஒரு நடிகை வீட்டுக்கு சென்று வந்த உணர்வு இல்லாமல் யாரோ ஓர் உறவினரைப் பார்த்துவிட்டு வந்ததுபோல இருக்கும்.."வீட்டின் மொட்டை மாடி. பௌர்ணமி நிலவு. கதாநாயகி தாம்பூலத் தட்டுடன் நெருங்க, வைத்த கண் வாங்காமல் அவரையே பார்க்கிறார் கதாநாயகன். அவரை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டு, தலைகுனிந்தபடியே வெற்றிலையை மடித்து நாயகனிடம் நீட்டுகிறார். "இப்படிக் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டேன். என் வாயில் ஊட்டு!" என்று நாயகன் சொல்லவும், வெட்கத்தில் முகம் சிவக்க, வாயில் தாம்பூலத்தை ஊட்டிவிட்டு, சற்று தள்ளி நிற்கிறார் நாயகி.."கட்! கட்!" என்கிறார் இயக்குனர் எல்.வி.பிரசாத். டேக் ஓ.கே ஆகிறது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் கைத்தட்டிப் பாராட்டுகிறார்கள். இதுதான் என் முதல் தெலுங்குப் படமான சௌகாரில் படமாக்கப்பட்ட முதல் காட்சி. கதாநாயகன் என்.டி.ராமராவ்" இப்படித்தான் தனது அனுபவங்களை கல்கியில் சொல்ல ஆரம்பித்தார் சௌகார்..அவருடைய குடும்ப சூழ்நிலைதான் அவரை நடிப்புக்குத் தள்ளியது. 1949ல், விஜயா வாகினி அதிபர் பி.என்.ரெட்டியின் அலுவலகத்தில் கைக்குழந்தையோடு போய் நின்று சினிமா வாய்ப்புக் கேட்டார். கூட அவரது கணவரும் சென்றிருந்தார். தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை மிக உருக்கமாக அவர் சொல்லவும், பி.என்.ரெட்டி 'சௌகார்' படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். தமிழில் சௌகாரின் முதல் படம் 'வளையாபதி'. தமிழ்க் காவியமான வளையாபதி கதையை மாடர்ன் தியேட்டர்சில் படமாக எடுத்தார்கள். அப்போது, சினிமா உலகில் இன்னொரு ஜானகி (வி.என்.ஜானகி) யும் இருந்தார். எனவே, சௌகார் படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு 'சௌகார் ஜானகி' என்று பெயர் வைத்துவிட்டார்கள்..கடந்த 70 வருடங்களில் நானூறுக்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை கரடுமுரடானது; வழியில்தான் எத்தனை முட்களும், மலர்களும்! "எல்லாவற்றையும் எதிர்கொண்டு, சமாளித்தேன். சினிமாவில் எனக்கென்று ஒரு தனி இடம் கிடைத்தது இறைவனின் அருள்தான்! " என்று நெகிழ்ச்சியோடு கூறுவார்..பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கும் தகவல் வந்த சில நாட்களில் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னபோது, உற்சாகமாகப் பேசினார். "என்னுடைய தொண்ணூறாவது வயதில்தான் எனக்கு இந்த தேசிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது நான் வணங்கும் பாபாவின் சித்தம் போலும்! எது எது எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது அது அவ்வப்போதுதானே நடக்கும்? பத்மஸ்ரீ விருது எனக்குக் கிடைத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..இதுவரை நான் எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். அவை அனைத்தையும்விட பத்மஸ்ரீ விருதை நான் பெருமைக்குரியதாக கருதுகிறேன். காரணம் இந்த நாடு எனக்கு வழங்கி இருக்கும் அங்கீகாரமல்லவா இது? விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டும்; நாம் விருதுகள் பின்னால் துரத்திக் கொண்டு போகக்கூடாது என்பது எனது பாலிசி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரிகள் போன் செய்து, விருது பற்றி தகவல் சொல்லி, "ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டபோது, "மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி" என்று கூறினேன். நேரில் டெல்லி சென்று விருதினை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை! நான் பிறந்த காலகட்டத்தில்தான் இந்திய சினிமா பேச ஆரம்பித்தது. இன்று உலகத் தரத்துக்கு ஈனையான தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளது. நான் இரண்டுக்கும் பாலமாக இருக்கிறேன்" " என்று நெகிழ்ச்சியான குரலில் பதில் சொன்னார்..சௌகார் சமையலில் கைதேர்ந்தவர். ஜெமினி டீவியில் தொண்ணூறுகளில் "ருசி-அபிருசி" என்ற பெயரில் சமையல் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். முப்பது எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றது அந்த சமையல் நிகழ்ச்சி. அவர், சென்னையில் வசித்தபோது, "கோகனட் குரோவ்" என்ற பெயரில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். அங்கே இருபது, முப்பது பேர்கள் வேலை செய்தார்கள். மெனு கார்டில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கும். "தினமும் சுமார் இருபத்தைந்து ஐட்டங்கள் போல சமையல் செய்வேன். மெரீனா பீச்சுக்குப் போய் சமையலுக்குத் தேவையான மீன்களை நானே வாங்கிக்கொண்டு வருவேன். மூன்று வருடம் போல அந்த ஓட்டலை நான் நிர்வகித்தேன். அந்த மூன்று வருடங்களும் வாழ்க்கையில் சந்தோஷமான, திருப்தியான, மறக்கமுடியாத காலம். என் வீட்டில், இன்னமும் நானேதான் சமையல் செய்துகொள்கிறேன். இங்கே மட்டுமில்லை; அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்குச் சென்றால் கூட அங்கேயும் நான்தான் சமையல். இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடும் உணவுகள் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை; எனவே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்" என்று சொல்லுவார்..தமிழ் சினிமா உலகில் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய மிகச் சிலரில் சௌகாரும் ஒருவர். அது பற்றி பேசும்போது, "பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே, எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனாலும், எனக்கு "எப்படியாவது மெட்ரிகுலேஷன் படிப்பையாவது முடிக்க வேண்டும்" என்று ஆசை. திருமணத்துக்குப் பின், பிரைவேட்டாகப் படித்தேன். வயிற்றில் குழந்தையோடு போய் பரிட்சை எழுதினேன். முதல் வகுப்பில் பாஸ் பண்ணினேன். திரையுலகில், என்னுடைய ஆங்கிலம் பற்றியும், என் உச்சரிப்பு பற்றியும் பலரும் சிலாகித்துப் பேசுவார்கள். அதற்குக் காரணம், என் சிறு வயதில், அப்பா போட்ட ஒரு உத்தரவுதான். ஆம்! தினமும் காலையில் உரக்க இந்து பேப்பர் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது, புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லுவதுடன், எங்கள் உச்சரிப்பினையும் திருத்துவார். அது மட்டுமில்லாமல், பி.பி.சி. நியூஸ் கேட்டும் என் ஆங்கில அறிவினை வளர்த்துக் கொண்டேன்" என்று சொல்லுவார்..தமிழ் சினிமா உலகில் சினிமா நடிகையாக புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் நாடகத்தில் நடித்த நடிகை வேறு யாராவது இருப்பார்களா தெரியவில்லை. டைரக்டர் கே. பாலச்சந்தர் எழுதி, இயக்கிய நாடகங்களில் 1965ல் தொடங்கி. சுமார் எட்டு வருடங்கள் நடித்திருக்கிறார் சௌகார் ஜானகி. அந்த நாடகங்களில் மேஜர் சுந்தர ராஜனும், நாகேஷும் அவருடன் நடித்தார்கள். "சினிமாவில் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுக்களைவிட நாடகங்களில் நடிக்கும்போது மேடையில் என்னுடைய நடிப்புக்குக் கிடைத்த ஆன் தி ஸ்பாட் கைத்தட்டல்களை நான் ரொம்பவே ரசித்தேன்" என்று பெருமையோடு குறிப்பிடுவார். அது மட்டுமில்லை. கே.பி. மீது அவர் கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் அலாதியானது. சுசித்ரா சென் அம்மா-மகள் என இரட்டை வேடத்தில் நடித்த பெங்காலிப் படத்தை டைரக்டர் கே.பாலசந்தரது இயக்கத்தில் சௌகார் ஜானகியே தமிழில் சொந்தமாகத் தயாரித்தார். அந்தப் படத்தின் பெயர்: காவியத் தலைவி. "என்னைப் பொறுத்தவரை, காவியத்தலைவியை தயாரித்தது, அதில் இரட்டை வேடத்தில் நடித்தது, டைரக்டர் கே.பி.சாருடன் பணியாற்றியது எல்லாவற்றையும் என் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக, சாதனைகளாக நினைக்கிறேன். இரு கோடுகள் படத்தில் அவருடன் பணியாற்றியதும் என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை" என்று கூறுவார்..எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி போன்றவர்களுடன் தான் நடித்த அனுபவங்களைச் சொன்னபோது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்: "எனக்கு சினிமா வாய்ப்புக் கேட்டு யாரிடமும் போய் நிற்பது பிடிக்காது. வாழ்க்கையில் இரண்டு தடவைகள்தான் நானே வலியச் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறேன்..முதல் தடவை, பி.என்.ரெட்டியிடம் என் குடும்பச் சூழ்நிலையைச் சொல்லி, பட வாய்ப்பு கேட்டது. அடுத்தது எம்.ஜி.ஆரிடம். தர்மேந்திரா நடித்த "ஃபூல் அவுர் பதர்" என்ற படத்தை தமிழில் எம்.ஜி.ஆர். நடிக்க "ஓளிவிளக்கு" என்று எடுத்தார்கள். எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா. இந்திப் படத்தில் மீனாகுமாரி நடித்த ரோலில் தமிழில் நீங்கள் நடிக்கலாமே! எம்.ஜி.ஆரிடம் கேட்டுப் பாருங்களேன்!" என்று சிலர் ஆலோசனை சொல்ல, மிகுந்த தயக்கத்துடன், எம்.ஜி.ஆருக்குப் போன் செய்து, என் விருப்பத்தைச் சொன்னேன். உடனே, எம்.ஜி.ஆர். ஓ.கே. சொல்லிவிட்டார். அந்தப் படத்தில் நான் நடித்து இடம்பெற்ற "ஆண்டவனே உன் பாதங்களில்" பாடல், பின்னாளில் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அவர் நலமடைய பிரார்தித்து தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்ததைக் கேட்டு நெகிழ்ந்துபோவேன்"..1999ல் சென்னையிலிருந்து பெங்களூரு போய் செட்டிலாகிவிட்டார். அவருடைய தங்கையும், நடிகையுமான கிருஷ்ணகுமாரியின் எஸ்டேட்டுக்குள்ளேயே ஒரு சிறிய பகுதியை வாங்கி, அங்கே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு வசித்து வருகிறார். "பசுமையான சூழல். இயற்கையை ரசித்தபடி அமைதியான வாழ்க்கை. சினிமாவில் நடித்தது போதும், என்று ஒரு கட்டத்தில் முடிவு செய்துவிட்டார். ஆனாலும், எப்போதாவது நல்ல கேரக்டர் என்று சிலர் வற்புறுத்திக் கேட்கிறபோது என்னால் "ஸாரி! நடிக்க மாட்டேன்" என்று கட் அண்டு ரைட்டாக சொல்ல முடியவில்லை. முள்ளும், மலரும் கொண்ட ரோஜா வாழ்க்கை என்னுடையது. வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். எல்லாம் பாபாவின் அருள்!" என்று உற்சாகமாகச் சொல்கிறார் பத்மஸ்ரீ சௌகார் ஜானகி..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 27.– எஸ். சந்திரமெளலி.பொதுவாக, யாரும் கலைத்தொண்டு ஆற்றவேண்டும் என்ற நோக்கத்துடம் சினிமாவுக்கு வருவதில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும்; பேரும், புகழும் சம்பாதிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதுவும், இந்தக் கால நடிகர், நடிகர்கள் மட்டுமில்லாமல், இயக்குனர்களும், இதர டெக்னிஷியன்களுக்கும் கூட அதுவே லட்சியமாக இருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆனால், உடனே தன் சம்பளத்தை சகட்டுமேனிக்கு அதிகரிப்பதே இதற்கு சாட்சி. ஆனால், இதற்கு விதிவிலக்கு நடிகை சௌகார் ஜானகி என்று சொன்னால் அது மிகை இல்லை. அவர், நடிப்பின் மூலமாக சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில் நடிக்க வந்தவர். எழுபது வருட சினிமா வாழ்க்கை. தொண்ணூறு வயதாகிவிட்டது. நாகேஷ் வாழ்க்கைத் தொடர் போலவே, கல்கியில் சௌகார் ஜானகியின் வாழ்க்கை அனுபவங்களையும் நான் தொடராக எழுதி இருக்கிறேன். 'நாகேஷ்' என்ற மகத்தான கலைஞனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ கூட கொடுக்கவில்லை. அந்த வகையில், அட்லீஸ்ட், சௌகார் ஜானகிக்கு தொண்ணூறு வயதிலாவது 'பத்மஸ்ரீ கௌரவம் கிடைத்ததே' என்று எனக்கு சந்தோஷம்.."நாகேஷ் போலவே சௌகார் ஜானகியின் தொடரை எழுதியபோதும், வாராவாரம் பிரசுரமாகவிருக்கும் அத்தியாயத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்கு படித்துக் காட்டுவேன். தற்போதைய முதல்வர் வசிக்கும் செனடாஃப் சாலை பகுதியில்தான் அவரது வீடு. செல் போன் இல்லாத அந்தக் காலத்தில், நான் வழக்கமாக மாலை ஐந்து மணி வாக்கில்தான் அத்தியாயம் படித்துக்காட்டுவதற்குச் செல்வேன். டெலிபோன் செய்துவிட்டுப் புறப்படுவேன். அவர் வீட்டை அடையும்போது தன் வீட்டு வாசலில் காம்பவுண்டு கேட் சாவியோடு சௌகார் காத்திருப்பார். காரணம் அந்த நேரத்தில் அவர் வீட்டு வேலைக்காரப் பெண்மணி இருக்கமாட்டார். வீட்டுக்குள் போனதும் முதல் வேலையாக தன் கையால் சுடச் சுட காபி போட்டுக் கொடுத்து உபசரிப்பார். புறப்படும்போது, மறுபடி கேட் வரை வந்து வழி அனுப்பி வைப்பார். ஒரு நடிகை வீட்டுக்கு சென்று வந்த உணர்வு இல்லாமல் யாரோ ஓர் உறவினரைப் பார்த்துவிட்டு வந்ததுபோல இருக்கும்.."வீட்டின் மொட்டை மாடி. பௌர்ணமி நிலவு. கதாநாயகி தாம்பூலத் தட்டுடன் நெருங்க, வைத்த கண் வாங்காமல் அவரையே பார்க்கிறார் கதாநாயகன். அவரை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டு, தலைகுனிந்தபடியே வெற்றிலையை மடித்து நாயகனிடம் நீட்டுகிறார். "இப்படிக் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டேன். என் வாயில் ஊட்டு!" என்று நாயகன் சொல்லவும், வெட்கத்தில் முகம் சிவக்க, வாயில் தாம்பூலத்தை ஊட்டிவிட்டு, சற்று தள்ளி நிற்கிறார் நாயகி.."கட்! கட்!" என்கிறார் இயக்குனர் எல்.வி.பிரசாத். டேக் ஓ.கே ஆகிறது. படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் கைத்தட்டிப் பாராட்டுகிறார்கள். இதுதான் என் முதல் தெலுங்குப் படமான சௌகாரில் படமாக்கப்பட்ட முதல் காட்சி. கதாநாயகன் என்.டி.ராமராவ்" இப்படித்தான் தனது அனுபவங்களை கல்கியில் சொல்ல ஆரம்பித்தார் சௌகார்..அவருடைய குடும்ப சூழ்நிலைதான் அவரை நடிப்புக்குத் தள்ளியது. 1949ல், விஜயா வாகினி அதிபர் பி.என்.ரெட்டியின் அலுவலகத்தில் கைக்குழந்தையோடு போய் நின்று சினிமா வாய்ப்புக் கேட்டார். கூட அவரது கணவரும் சென்றிருந்தார். தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை மிக உருக்கமாக அவர் சொல்லவும், பி.என்.ரெட்டி 'சௌகார்' படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். தமிழில் சௌகாரின் முதல் படம் 'வளையாபதி'. தமிழ்க் காவியமான வளையாபதி கதையை மாடர்ன் தியேட்டர்சில் படமாக எடுத்தார்கள். அப்போது, சினிமா உலகில் இன்னொரு ஜானகி (வி.என்.ஜானகி) யும் இருந்தார். எனவே, சௌகார் படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு 'சௌகார் ஜானகி' என்று பெயர் வைத்துவிட்டார்கள்..கடந்த 70 வருடங்களில் நானூறுக்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை கரடுமுரடானது; வழியில்தான் எத்தனை முட்களும், மலர்களும்! "எல்லாவற்றையும் எதிர்கொண்டு, சமாளித்தேன். சினிமாவில் எனக்கென்று ஒரு தனி இடம் கிடைத்தது இறைவனின் அருள்தான்! " என்று நெகிழ்ச்சியோடு கூறுவார்..பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கும் தகவல் வந்த சில நாட்களில் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னபோது, உற்சாகமாகப் பேசினார். "என்னுடைய தொண்ணூறாவது வயதில்தான் எனக்கு இந்த தேசிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது நான் வணங்கும் பாபாவின் சித்தம் போலும்! எது எது எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது அது அவ்வப்போதுதானே நடக்கும்? பத்மஸ்ரீ விருது எனக்குக் கிடைத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..இதுவரை நான் எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். அவை அனைத்தையும்விட பத்மஸ்ரீ விருதை நான் பெருமைக்குரியதாக கருதுகிறேன். காரணம் இந்த நாடு எனக்கு வழங்கி இருக்கும் அங்கீகாரமல்லவா இது? விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டும்; நாம் விருதுகள் பின்னால் துரத்திக் கொண்டு போகக்கூடாது என்பது எனது பாலிசி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரிகள் போன் செய்து, விருது பற்றி தகவல் சொல்லி, "ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டபோது, "மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி" என்று கூறினேன். நேரில் டெல்லி சென்று விருதினை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை! நான் பிறந்த காலகட்டத்தில்தான் இந்திய சினிமா பேச ஆரம்பித்தது. இன்று உலகத் தரத்துக்கு ஈனையான தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளது. நான் இரண்டுக்கும் பாலமாக இருக்கிறேன்" " என்று நெகிழ்ச்சியான குரலில் பதில் சொன்னார்..சௌகார் சமையலில் கைதேர்ந்தவர். ஜெமினி டீவியில் தொண்ணூறுகளில் "ருசி-அபிருசி" என்ற பெயரில் சமையல் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். முப்பது எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றது அந்த சமையல் நிகழ்ச்சி. அவர், சென்னையில் வசித்தபோது, "கோகனட் குரோவ்" என்ற பெயரில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். அங்கே இருபது, முப்பது பேர்கள் வேலை செய்தார்கள். மெனு கார்டில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கும். "தினமும் சுமார் இருபத்தைந்து ஐட்டங்கள் போல சமையல் செய்வேன். மெரீனா பீச்சுக்குப் போய் சமையலுக்குத் தேவையான மீன்களை நானே வாங்கிக்கொண்டு வருவேன். மூன்று வருடம் போல அந்த ஓட்டலை நான் நிர்வகித்தேன். அந்த மூன்று வருடங்களும் வாழ்க்கையில் சந்தோஷமான, திருப்தியான, மறக்கமுடியாத காலம். என் வீட்டில், இன்னமும் நானேதான் சமையல் செய்துகொள்கிறேன். இங்கே மட்டுமில்லை; அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்குச் சென்றால் கூட அங்கேயும் நான்தான் சமையல். இப்போதெல்லாம் வெளியில் சாப்பிடும் உணவுகள் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை; எனவே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்" என்று சொல்லுவார்..தமிழ் சினிமா உலகில் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய மிகச் சிலரில் சௌகாரும் ஒருவர். அது பற்றி பேசும்போது, "பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே, எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனாலும், எனக்கு "எப்படியாவது மெட்ரிகுலேஷன் படிப்பையாவது முடிக்க வேண்டும்" என்று ஆசை. திருமணத்துக்குப் பின், பிரைவேட்டாகப் படித்தேன். வயிற்றில் குழந்தையோடு போய் பரிட்சை எழுதினேன். முதல் வகுப்பில் பாஸ் பண்ணினேன். திரையுலகில், என்னுடைய ஆங்கிலம் பற்றியும், என் உச்சரிப்பு பற்றியும் பலரும் சிலாகித்துப் பேசுவார்கள். அதற்குக் காரணம், என் சிறு வயதில், அப்பா போட்ட ஒரு உத்தரவுதான். ஆம்! தினமும் காலையில் உரக்க இந்து பேப்பர் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது, புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லுவதுடன், எங்கள் உச்சரிப்பினையும் திருத்துவார். அது மட்டுமில்லாமல், பி.பி.சி. நியூஸ் கேட்டும் என் ஆங்கில அறிவினை வளர்த்துக் கொண்டேன்" என்று சொல்லுவார்..தமிழ் சினிமா உலகில் சினிமா நடிகையாக புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் நாடகத்தில் நடித்த நடிகை வேறு யாராவது இருப்பார்களா தெரியவில்லை. டைரக்டர் கே. பாலச்சந்தர் எழுதி, இயக்கிய நாடகங்களில் 1965ல் தொடங்கி. சுமார் எட்டு வருடங்கள் நடித்திருக்கிறார் சௌகார் ஜானகி. அந்த நாடகங்களில் மேஜர் சுந்தர ராஜனும், நாகேஷும் அவருடன் நடித்தார்கள். "சினிமாவில் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுக்களைவிட நாடகங்களில் நடிக்கும்போது மேடையில் என்னுடைய நடிப்புக்குக் கிடைத்த ஆன் தி ஸ்பாட் கைத்தட்டல்களை நான் ரொம்பவே ரசித்தேன்" என்று பெருமையோடு குறிப்பிடுவார். அது மட்டுமில்லை. கே.பி. மீது அவர் கொண்டிருந்த மதிப்பும், மரியாதையும் அலாதியானது. சுசித்ரா சென் அம்மா-மகள் என இரட்டை வேடத்தில் நடித்த பெங்காலிப் படத்தை டைரக்டர் கே.பாலசந்தரது இயக்கத்தில் சௌகார் ஜானகியே தமிழில் சொந்தமாகத் தயாரித்தார். அந்தப் படத்தின் பெயர்: காவியத் தலைவி. "என்னைப் பொறுத்தவரை, காவியத்தலைவியை தயாரித்தது, அதில் இரட்டை வேடத்தில் நடித்தது, டைரக்டர் கே.பி.சாருடன் பணியாற்றியது எல்லாவற்றையும் என் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக, சாதனைகளாக நினைக்கிறேன். இரு கோடுகள் படத்தில் அவருடன் பணியாற்றியதும் என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை" என்று கூறுவார்..எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி போன்றவர்களுடன் தான் நடித்த அனுபவங்களைச் சொன்னபோது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்: "எனக்கு சினிமா வாய்ப்புக் கேட்டு யாரிடமும் போய் நிற்பது பிடிக்காது. வாழ்க்கையில் இரண்டு தடவைகள்தான் நானே வலியச் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறேன்..முதல் தடவை, பி.என்.ரெட்டியிடம் என் குடும்பச் சூழ்நிலையைச் சொல்லி, பட வாய்ப்பு கேட்டது. அடுத்தது எம்.ஜி.ஆரிடம். தர்மேந்திரா நடித்த "ஃபூல் அவுர் பதர்" என்ற படத்தை தமிழில் எம்.ஜி.ஆர். நடிக்க "ஓளிவிளக்கு" என்று எடுத்தார்கள். எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதா. இந்திப் படத்தில் மீனாகுமாரி நடித்த ரோலில் தமிழில் நீங்கள் நடிக்கலாமே! எம்.ஜி.ஆரிடம் கேட்டுப் பாருங்களேன்!" என்று சிலர் ஆலோசனை சொல்ல, மிகுந்த தயக்கத்துடன், எம்.ஜி.ஆருக்குப் போன் செய்து, என் விருப்பத்தைச் சொன்னேன். உடனே, எம்.ஜி.ஆர். ஓ.கே. சொல்லிவிட்டார். அந்தப் படத்தில் நான் நடித்து இடம்பெற்ற "ஆண்டவனே உன் பாதங்களில்" பாடல், பின்னாளில் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அவர் நலமடைய பிரார்தித்து தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்ததைக் கேட்டு நெகிழ்ந்துபோவேன்"..1999ல் சென்னையிலிருந்து பெங்களூரு போய் செட்டிலாகிவிட்டார். அவருடைய தங்கையும், நடிகையுமான கிருஷ்ணகுமாரியின் எஸ்டேட்டுக்குள்ளேயே ஒரு சிறிய பகுதியை வாங்கி, அங்கே ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு வசித்து வருகிறார். "பசுமையான சூழல். இயற்கையை ரசித்தபடி அமைதியான வாழ்க்கை. சினிமாவில் நடித்தது போதும், என்று ஒரு கட்டத்தில் முடிவு செய்துவிட்டார். ஆனாலும், எப்போதாவது நல்ல கேரக்டர் என்று சிலர் வற்புறுத்திக் கேட்கிறபோது என்னால் "ஸாரி! நடிக்க மாட்டேன்" என்று கட் அண்டு ரைட்டாக சொல்ல முடியவில்லை. முள்ளும், மலரும் கொண்ட ரோஜா வாழ்க்கை என்னுடையது. வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். எல்லாம் பாபாவின் அருள்!" என்று உற்சாகமாகச் சொல்கிறார் பத்மஸ்ரீ சௌகார் ஜானகி..(தொடரும்)