ஒரு நிருபரின் டைரி – 23.– எஸ். சந்திரமெளலி.திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எதிரே இருக்கும் வல்லப அக்ரஹாரத்தில் உள்ள மேன்ஷனில் ஆறாம் நெம்பர் அறைக்குப் போகாத பத்திரிகையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்; பல மூத்த பத்திரிகையாளர்களை நான் முதல் முறையாக சந்தித்தது அந்த அறையில்தான். தமிழ்நாட்டு அரசியல் பற்றியோ அல்லது தேர்தல் நேரத்திலோ சென்னைக்கு வரும் வடநாட்டுப் பத்திரிகையாளர்கள் அந்த அறைக்குப் போகாமல் ஊருக்குப் புறப்பட மாட்டார்கள். தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் என்று பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் நேரம் கிடைக்கும்போது அந்த அறைக்கு வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் செல்பவர்கள் சிலர் என்றால், இன்னும் சிலரோ வாரம் ஒரு நாள் டைம் டேபிள் போட்டுக்கொண்டு வந்துவிட்டுப் போவார்கள். நக்கீரன் கோபால் தன் ஆபீசுக்குப் போகிறாரோ இல்லையோ, அந்த அறைக்கு தினம் வந்து அவரை நலம் விசாரித்துவிட்டுப் போவார். இவ்வளவு பீடிகை போடுகிறேனே! யாரடா அந்த நபர்? என்று யோசிக்கிறீர்களா? முக்கால் செஞ்சுரி போட்ட அவர் பெயர் தியாகராஜன். இப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. சின்னகுத்தூசி என்றால், "ஓ! அவரா?' என்பீர்கள்!".சுமார் ஓராண்டு காலமாக மருத்துவமனையிலேயே வாசம் செய்து, சிகிச்சை பெற்று வந்த அந்த நல்ல மனிதர் 2011 மே 22 அன்று காலை காலமானார். கலைஞர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த நக்கீரன் அலுவலக வளாகத்தில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, மாலையில் தகனம் செய்யப்பட்டது..கலைஞர் கருணாநிதியையோ, தி.மு.க.வையோ விமர்சனம் செய்தால், மனுஷர் வரிந்து கட்டிக்கொண்டு பதிலுக்குக் கடுமையாக விமர்சனம் செய்வார். படிப்பவர்களுக்கு அவர் பேனாவுக்கு இங்க் ஊற்றுவாரா? இல்லை பச்சை மிளகாய் சாற்றை ஊற்றுவாரா? என்று சந்தேகம் வரும். அவரது காரசாரமான எழுத்துகளைப் படித்துவிட்டு, அவரை நேரே பார்த்தால், "இந்த சாந்த சொரூபியா இப்படி எழுதுகிறார்?" என்று நம்ப மறுப்பார்கள். வெள்ளை வேட்டி; வெள்ளை கதர் சட்டை. மெலிந்த தேகம். பேச்சில் ரொம்பவும் சாஃப்ட். பெரியாரது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வாரிசு..அவரது அறைக்குச் சென்றால், இரண்டு கட்டில், இரண்டு நாற்காலிகள் இருக்கும். அதிலும் ஒரு கட்டில் முழுக்க புத்தகங்களும், நியூஸ் பேப்பர்களிலிருந்து எடுத்துவைக்கப்பட்ட முக்கியமான செய்திகள், கட்டுரைகள். அவர்தான் உண்மையான புத்தகப்புழு என்றால் மிகையில்லை. ஒரு கட்டத்தில் அந்த அறையில் புத்தகங்களும், பத்திரிகைகளும் அதீதமாக நிறைந்துவிட்ட சூழ்நிலையில், அடுத்த அறையையும் அவர் ஆக்கிரமிக்கும்படி ஆனது. சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மேன்ஷனுக்கு அருகாமையில் இருக்கும் இன்னொரு லாட்ஜுக்கு இடம்பெயர்ந்துவிட்டார். கீழே வழுக்கி விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டுவிட, அவரது ஜாகை பில்ரோத் ஹாஸ்பிடலுக்கு இடம் பெயர்ந்தது. அங்கே சென்று அவ்வப்போது சந்தித்தபோது, "நிறைய பேசணும்னு தோணுது; ஆனால் பேச முடியலை! இன்னொரு நாள் வரீங்களா?" என்று அவர் வருத்தத்துடன் மெல்லிய குரலில் கேட்டபோது, என் கண்கள் கலங்கிவிட்டன. அவர் வசித்த லாட்ஜின் முகப்பில் ஒரு இஸ்லாமியர் பெட்டிக் கடை வைத்திருப்பார். அவர் கடையில் டெலிபோன் உண்டு. அவருக்கு போன் செய்து, குத்தூசி சார் இருக்கிறாரா? என்று கேட்டு அவரது ரூமுக்குப் போவதுண்டு. அந்த கடைக்காரரிடம் தான் மரணமடைந்துவிட்டால், அது தொடர்பான செலவுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு தொகையைக் கொடுத்து வைத்திருந்தார். ஆனால், நக்கீரன் கோபால் ஆஸ்பத்திரி செலவு உட்பட அவரது பராமரிப்புச் செலவுகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு உதவியது மெச்சத் தகுந்த செயல். அது மட்டுமின்றி, குத்தூசியை நக்கீரனில் பல்லாண்டுகள் தொடர்ந்து பல்வேறு அரசியல், சமூகக் கட்டுரைகள் எழுதச் செய்தது மட்டுமின்றி, அவற்றின் தொகுப்புகளை புத்தகங்களாக பிரசுரம் செய்ததும் பாராட்டுக்குரியவை..சின்ன குத்தூசியின் நினைவாற்றல் அபாரமானது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக அமைக்கப் பட்ட நீதிபதி ஜெயின் கமிஷனின் அறிக்கை ரகசியமாக வெளியாகி, சந்தேக ஊசி தி.மு.க. பக்கம் திருப்பிய நேரத்தில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் நாட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணைக் கமிஷன்கள், அவற்றின் அறிக்கைகள், அதன் மீதான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. சின்னக் குத்தூசி இருக்கும் தைரியத்தில், கட்டுரை எழுதித்தர ஒப்புக்கொண்டு விட்டேன்..அவரை சந்தித்து விஷயத்தைச் சொன்னதும், "கவலைப்படாதீங்க! நாளைக்கு வாங்க! உங்களுக்கு வேண்டிய தகவல் தர்றேன்!" என்றார். மறுநாள் போனபோது, பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரான் மீது கூறப்பட்ட லஞ்ச ஊழலை விசாரிக்க போடப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் விசாரணைக் கமிஷனில் தொடங்கி, ஜெயின் கமிஷன் வரை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு கமிஷனும் எதற்காக போடப்பட்டது? யார் நீதிபதி? கமிஷனின் விசாரணையின் போக்கு, அதில் நடந்த அரசியல் தலையீடுகள், அறிக்கைகளின் ஹைலைட்ஸ், அதன் பிறகு அந்த விசாரணைக் கமிஷன் அறிக்கை என்னவாயிற்று? என்பது வரை ஒரு குழந்தைக்குச் சொல்வது போல விளக்கினார். "நீங்க எழுதினதுக்கப்புறம், எடுத்துக்கிட்டு வாங்க! ஒரு தடவை படிக்கிறப்போ, ஏதாவது விட்டுப் போனது ஞாபகம் வரும்" என்றார். மறுநாள் சில திருத்தங்கள், புது தகவல்கள் சொன்னார். கட்டுரையில் அவரது பெயரை குறிப்பிட விரும்புவதாக சொன்னபோது, "எனக்குத் தெரிஞ்ச பழைய விஷயங்களை உங்களுக்குச் சொன்னேன். நீங்க எழுதுறீங்க! என் பெயர் எதுக்கு?" என மறுத்துவிட்டார். இன்று எந்த ஒரு தகவல் வேண்டுமானாலும் இணையத்தில் தட்டினால் தகவல்கள் கொட்டுகிறது. இதுபோன்ற சௌகரியம் இல்லாத காலகட்டத்தில் அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், முரசொலி மாறன், சரத் பவார் என்று உள்ளூர், தேசிய தலைவர்கள், திராவிட வரலாறு, தமிழக, தேசிய அரசியல் சரித்திர நிகழ்வுகள், ஈழப் பிரச்னை என்று எதைப் பற்றி கட்டுரைகள் எழுதவேண்டுமென்றால் நான் அவரிடம்தான் சென்று தகவல்கள் கேட்டுக் கொள்வேன்..அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என்னை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் உண்டு. தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் மறைந்த சமயம் விகடன் நிருபர் ஒருவர் சின்ன குத்தூசியை சந்தித்து, கி.ஆ.பெ. பற்றிய விபரங்களைக் கேட்டுக் கொண்டு போய் ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதினார். கட்டுரை வெளியானவுடன், விகடனிலிருந்து ஒரு காசோலையைக் கொண்டுவந்து கொடுத்தார் அந்த நிருபர். "கி.ஆ.பெ. பத்தி எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கு சொன்னேன். நீங்க கட்டுரை எழுதினீங்க! எனக்கு எதுக்கு சார் சன்மானம்?" என்று சொல்லி அந்த செக்கை வாங்க மறுத்துவிட்டார் குத்தூசி.."எனக்குத் தெரியாது. ஆபீஸ்ல உங்களுக்கு ஒரு செக் கொடுத்தாங்க! உங்ககிட்டே கொடுத்திட்டேன்" என்று நிருபர் சொல்லி அவர் பக்கத்தில் செக்கை வைத்துவிட்ட போதிலும், "எனக்கு பேங்க் கணக்கு இல்லை; இந்த செக் வேணாம்" என்று நிருபரது கையில் செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டார். புறப்பட்டுப் போன நிருபர், இரண்டு நாட்களில் அந்த செக்குக்கு உரிய பணத்தை ரொக்கமாக எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். "இந்தப் பணத்தை நான் வாங்கிக்கறது நியாயமில்லை" என்று குத்தூசி எவ்வளவோ மறுத்தும், நிருபர் அந்தப் பணத்தை அவரிடமே விட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டார். அந்தப் பணத்தை குத்தூசி என்ன செய்தார் தெரியுமா? அன்றைக்கு நியூஸ் பேப்பரில் ஒரு சிறுமியின் இதய அறுவைச் சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வெளியாகி இருந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டார்..சின்னகுத்தூசி நல்ல சிறுகதைகளில் பரம ரசிகர். பல எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை நினைவு கூர்ந்து படிக்கிற சுவாரசியத்துடன் கதைகளை நினைவு கூர்வார். பெரியார் பற்றியும், காமராஜர் பற்றியும், அண்ணா, கலைஞர் பற்றியும் ஏராளமான விஷயங்களை இளம் பத்திரிகையாளர்களுக்குச் சொல்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம்..அவரது அறையை ஊடகத்துறை வேலைவாய்ப்பு அலுவலகம் என்றால் துளியும் மிகை இல்லை. திடீரென்று பத்திரிகை முதலாளிகளால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பல பத்திரிகையாளர்கள் அவரை வந்து சந்திப்பார்கள். அவர்களில் பலருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார். அவரது அறைக்கு வருகிறபோது, சந்தித்து, காதலித்து திருமணம் செய்துகொண்ட பத்திரிகையாளர்கள் கூட உண்டு.."கிணற்றுத் தவளை" என்ற தன்னை வர்ணித்துக் கொள்ளுவார் சின்னகுத்தூசி. "நான் இந்த ஆறாம் எண் அரையிலேயே அடைந்து கிடப்பவன்; நீங்கதானே நாலு இடங்களுக்கு போறீங்க! நாலுபேரைப் பார்த்துப் பேசறீங்க!" என்று கிணற்றுத் தவளைக்கு விளக்கமும் கொடுப்பார். அவர் ஒரு முறை என்னிடம் இப்படிச் சொன்னபோது, "ஆனா ஊர் சுத்தற குருவி எல்லாம் இந்த கிணத்துக்கு வந்து போகுதே! தவளை இங்கே இருந்துக்கிட்டே எல்லா தகவலும் தெரிஞ்சுகுதே!" என்று சொன்னதை ரசித்துச் சிரித்தார். அவருடைய அறைக்கு வரும் விசிட்டர்களுடனான உரையாடலின் முக்காலே மூணு வீசத்தில் அரசியல் நெடி வீசும் என்றாலும், தேர்ந்தெடுத்த சிலரிடம் கிரிக்கெட், கர்நாடக இசை மற்றும் இலக்கியம் பற்றிப் பேசுவார். வெகு அபூர்வமாக தன் சொந்தக் கதையைக் கூட சுவையாக சொல்லுவார்..செம்பை, முசிறி, மதுரை மணி அய்யர், எம்.எஸ். செம்மங்குடி, யேசுதாஸ் என்று பலரது இசை கேசட்டுகளை கேட்டு ரசிப்பார். அப்போது அந்தந்த வித்வான்களைப் பற்றி – அவர்களது விசேஷ குணாதிசயங்கள், கச்சேரி அனுபவங்கள், அவர்களைப் பற்றிய அந்தக்கால விமர்சனங்கள் என்று நிறைய, மிகவும் சுவாரசியமான விஷயங்களைச் சொல்லுவார். அவரது இசை ஆர்வத்தைப் பாராட்டினால், "காவேரி தண்ணி குடிச்சா தானா சாவேரி பாட வரும்" என்று பழமொழி சொல்லிவிட்டு, " நான் வெறும பேசறேன்; பாடலியே!" என்பார். கபில்தேவ், சச்சின் இரண்டுபேரும் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர்கள். இன்னொருபக்கம் அந்தக்காலத்து எழுத்தாளர்கள் கல்கி, தொடங்கி அகிலன், நா.பா. மௌனி, கரிச்சான் குஞ்சு, வல்லிக் கண்ணன் ஊடாக இந்தக்காலத்து சாரு நிவேதிதா வரை பலரைப் பற்றியும் நிறைய பேசுவார்..அவரது அறையில் எப்போதும் வெள்ளைவெளேரென்று சலவை செய்யப்பட்ட சில கதர் வேட்டி, சட்டைகள் ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு நாள் அவரது வேட்டியில் இருந்த சலவைக் குறி அவரது பெயருக்கு சம்பந்தமில்லாத ஒன்றாக இருப்பதை கவனித்துவிட்டு, அதுபற்றி விசாரித்தபோது ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார். "சின்ன குத்தூசியும், ஈ.வி.கே. சம்பத்தும் ரொம்ப குளோஸ். சம்பத், 'தமிழ் தேசியக் கட்சி' என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கியபோது, குத்தூசி அவரது செயலாளராக கூடவே இருந்தார்; தமிழ்நாடு முழுக்க இருவரும் ஒன்றாக டூர் போவார்கள்; சம்பத்தின் உடைகளை வெளுக்கும் சலவைத் தொழிலாளி ஒரே வீட்டுத் துணிதானே என இரண்டு பேர்களின் வெள்ளை வேட்டி, சட்டைகளிலும் ஒரே சலவைக் குறியை போட்டுவிட்டாராம். சம்பத் மறைவுக்குப் பிறகும், இவரது உடைகளில் அதே சலவைக் குறி தொடர்ந்தது. "சம்பத் அண்ணன் ஞாபகமா இருந்திட்டுப் போகட்டும்னு நானும் அப்படியே விட்டுட்டேன்" என்று சொன்ன போது அவரது குரலில் ஒரு நெகிழ்ச்சியை நான் கவனித்தேன்..இன்று கூட பழைய விஷயங்கள் குறித்த ஆழமான கட்டுரைகள் எழுதும்போது, என்னத்தான் கூகுள் ஆசான் உதவி செய்தாலும், சின்னக் குத்தூசியை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்..(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 23.– எஸ். சந்திரமெளலி.திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எதிரே இருக்கும் வல்லப அக்ரஹாரத்தில் உள்ள மேன்ஷனில் ஆறாம் நெம்பர் அறைக்குப் போகாத பத்திரிகையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்; பல மூத்த பத்திரிகையாளர்களை நான் முதல் முறையாக சந்தித்தது அந்த அறையில்தான். தமிழ்நாட்டு அரசியல் பற்றியோ அல்லது தேர்தல் நேரத்திலோ சென்னைக்கு வரும் வடநாட்டுப் பத்திரிகையாளர்கள் அந்த அறைக்குப் போகாமல் ஊருக்குப் புறப்பட மாட்டார்கள். தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் என்று பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் நேரம் கிடைக்கும்போது அந்த அறைக்கு வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் செல்பவர்கள் சிலர் என்றால், இன்னும் சிலரோ வாரம் ஒரு நாள் டைம் டேபிள் போட்டுக்கொண்டு வந்துவிட்டுப் போவார்கள். நக்கீரன் கோபால் தன் ஆபீசுக்குப் போகிறாரோ இல்லையோ, அந்த அறைக்கு தினம் வந்து அவரை நலம் விசாரித்துவிட்டுப் போவார். இவ்வளவு பீடிகை போடுகிறேனே! யாரடா அந்த நபர்? என்று யோசிக்கிறீர்களா? முக்கால் செஞ்சுரி போட்ட அவர் பெயர் தியாகராஜன். இப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. சின்னகுத்தூசி என்றால், "ஓ! அவரா?' என்பீர்கள்!".சுமார் ஓராண்டு காலமாக மருத்துவமனையிலேயே வாசம் செய்து, சிகிச்சை பெற்று வந்த அந்த நல்ல மனிதர் 2011 மே 22 அன்று காலை காலமானார். கலைஞர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த நக்கீரன் அலுவலக வளாகத்தில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, மாலையில் தகனம் செய்யப்பட்டது..கலைஞர் கருணாநிதியையோ, தி.மு.க.வையோ விமர்சனம் செய்தால், மனுஷர் வரிந்து கட்டிக்கொண்டு பதிலுக்குக் கடுமையாக விமர்சனம் செய்வார். படிப்பவர்களுக்கு அவர் பேனாவுக்கு இங்க் ஊற்றுவாரா? இல்லை பச்சை மிளகாய் சாற்றை ஊற்றுவாரா? என்று சந்தேகம் வரும். அவரது காரசாரமான எழுத்துகளைப் படித்துவிட்டு, அவரை நேரே பார்த்தால், "இந்த சாந்த சொரூபியா இப்படி எழுதுகிறார்?" என்று நம்ப மறுப்பார்கள். வெள்ளை வேட்டி; வெள்ளை கதர் சட்டை. மெலிந்த தேகம். பேச்சில் ரொம்பவும் சாஃப்ட். பெரியாரது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வாரிசு..அவரது அறைக்குச் சென்றால், இரண்டு கட்டில், இரண்டு நாற்காலிகள் இருக்கும். அதிலும் ஒரு கட்டில் முழுக்க புத்தகங்களும், நியூஸ் பேப்பர்களிலிருந்து எடுத்துவைக்கப்பட்ட முக்கியமான செய்திகள், கட்டுரைகள். அவர்தான் உண்மையான புத்தகப்புழு என்றால் மிகையில்லை. ஒரு கட்டத்தில் அந்த அறையில் புத்தகங்களும், பத்திரிகைகளும் அதீதமாக நிறைந்துவிட்ட சூழ்நிலையில், அடுத்த அறையையும் அவர் ஆக்கிரமிக்கும்படி ஆனது. சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மேன்ஷனுக்கு அருகாமையில் இருக்கும் இன்னொரு லாட்ஜுக்கு இடம்பெயர்ந்துவிட்டார். கீழே வழுக்கி விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டுவிட, அவரது ஜாகை பில்ரோத் ஹாஸ்பிடலுக்கு இடம் பெயர்ந்தது. அங்கே சென்று அவ்வப்போது சந்தித்தபோது, "நிறைய பேசணும்னு தோணுது; ஆனால் பேச முடியலை! இன்னொரு நாள் வரீங்களா?" என்று அவர் வருத்தத்துடன் மெல்லிய குரலில் கேட்டபோது, என் கண்கள் கலங்கிவிட்டன. அவர் வசித்த லாட்ஜின் முகப்பில் ஒரு இஸ்லாமியர் பெட்டிக் கடை வைத்திருப்பார். அவர் கடையில் டெலிபோன் உண்டு. அவருக்கு போன் செய்து, குத்தூசி சார் இருக்கிறாரா? என்று கேட்டு அவரது ரூமுக்குப் போவதுண்டு. அந்த கடைக்காரரிடம் தான் மரணமடைந்துவிட்டால், அது தொடர்பான செலவுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு தொகையைக் கொடுத்து வைத்திருந்தார். ஆனால், நக்கீரன் கோபால் ஆஸ்பத்திரி செலவு உட்பட அவரது பராமரிப்புச் செலவுகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு உதவியது மெச்சத் தகுந்த செயல். அது மட்டுமின்றி, குத்தூசியை நக்கீரனில் பல்லாண்டுகள் தொடர்ந்து பல்வேறு அரசியல், சமூகக் கட்டுரைகள் எழுதச் செய்தது மட்டுமின்றி, அவற்றின் தொகுப்புகளை புத்தகங்களாக பிரசுரம் செய்ததும் பாராட்டுக்குரியவை..சின்ன குத்தூசியின் நினைவாற்றல் அபாரமானது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக அமைக்கப் பட்ட நீதிபதி ஜெயின் கமிஷனின் அறிக்கை ரகசியமாக வெளியாகி, சந்தேக ஊசி தி.மு.க. பக்கம் திருப்பிய நேரத்தில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் நாட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணைக் கமிஷன்கள், அவற்றின் அறிக்கைகள், அதன் மீதான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. சின்னக் குத்தூசி இருக்கும் தைரியத்தில், கட்டுரை எழுதித்தர ஒப்புக்கொண்டு விட்டேன்..அவரை சந்தித்து விஷயத்தைச் சொன்னதும், "கவலைப்படாதீங்க! நாளைக்கு வாங்க! உங்களுக்கு வேண்டிய தகவல் தர்றேன்!" என்றார். மறுநாள் போனபோது, பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரான் மீது கூறப்பட்ட லஞ்ச ஊழலை விசாரிக்க போடப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் விசாரணைக் கமிஷனில் தொடங்கி, ஜெயின் கமிஷன் வரை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு கமிஷனும் எதற்காக போடப்பட்டது? யார் நீதிபதி? கமிஷனின் விசாரணையின் போக்கு, அதில் நடந்த அரசியல் தலையீடுகள், அறிக்கைகளின் ஹைலைட்ஸ், அதன் பிறகு அந்த விசாரணைக் கமிஷன் அறிக்கை என்னவாயிற்று? என்பது வரை ஒரு குழந்தைக்குச் சொல்வது போல விளக்கினார். "நீங்க எழுதினதுக்கப்புறம், எடுத்துக்கிட்டு வாங்க! ஒரு தடவை படிக்கிறப்போ, ஏதாவது விட்டுப் போனது ஞாபகம் வரும்" என்றார். மறுநாள் சில திருத்தங்கள், புது தகவல்கள் சொன்னார். கட்டுரையில் அவரது பெயரை குறிப்பிட விரும்புவதாக சொன்னபோது, "எனக்குத் தெரிஞ்ச பழைய விஷயங்களை உங்களுக்குச் சொன்னேன். நீங்க எழுதுறீங்க! என் பெயர் எதுக்கு?" என மறுத்துவிட்டார். இன்று எந்த ஒரு தகவல் வேண்டுமானாலும் இணையத்தில் தட்டினால் தகவல்கள் கொட்டுகிறது. இதுபோன்ற சௌகரியம் இல்லாத காலகட்டத்தில் அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், முரசொலி மாறன், சரத் பவார் என்று உள்ளூர், தேசிய தலைவர்கள், திராவிட வரலாறு, தமிழக, தேசிய அரசியல் சரித்திர நிகழ்வுகள், ஈழப் பிரச்னை என்று எதைப் பற்றி கட்டுரைகள் எழுதவேண்டுமென்றால் நான் அவரிடம்தான் சென்று தகவல்கள் கேட்டுக் கொள்வேன்..அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என்னை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் உண்டு. தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் மறைந்த சமயம் விகடன் நிருபர் ஒருவர் சின்ன குத்தூசியை சந்தித்து, கி.ஆ.பெ. பற்றிய விபரங்களைக் கேட்டுக் கொண்டு போய் ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதினார். கட்டுரை வெளியானவுடன், விகடனிலிருந்து ஒரு காசோலையைக் கொண்டுவந்து கொடுத்தார் அந்த நிருபர். "கி.ஆ.பெ. பத்தி எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கு சொன்னேன். நீங்க கட்டுரை எழுதினீங்க! எனக்கு எதுக்கு சார் சன்மானம்?" என்று சொல்லி அந்த செக்கை வாங்க மறுத்துவிட்டார் குத்தூசி.."எனக்குத் தெரியாது. ஆபீஸ்ல உங்களுக்கு ஒரு செக் கொடுத்தாங்க! உங்ககிட்டே கொடுத்திட்டேன்" என்று நிருபர் சொல்லி அவர் பக்கத்தில் செக்கை வைத்துவிட்ட போதிலும், "எனக்கு பேங்க் கணக்கு இல்லை; இந்த செக் வேணாம்" என்று நிருபரது கையில் செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டார். புறப்பட்டுப் போன நிருபர், இரண்டு நாட்களில் அந்த செக்குக்கு உரிய பணத்தை ரொக்கமாக எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். "இந்தப் பணத்தை நான் வாங்கிக்கறது நியாயமில்லை" என்று குத்தூசி எவ்வளவோ மறுத்தும், நிருபர் அந்தப் பணத்தை அவரிடமே விட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டார். அந்தப் பணத்தை குத்தூசி என்ன செய்தார் தெரியுமா? அன்றைக்கு நியூஸ் பேப்பரில் ஒரு சிறுமியின் இதய அறுவைச் சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வெளியாகி இருந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டார்..சின்னகுத்தூசி நல்ல சிறுகதைகளில் பரம ரசிகர். பல எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை நினைவு கூர்ந்து படிக்கிற சுவாரசியத்துடன் கதைகளை நினைவு கூர்வார். பெரியார் பற்றியும், காமராஜர் பற்றியும், அண்ணா, கலைஞர் பற்றியும் ஏராளமான விஷயங்களை இளம் பத்திரிகையாளர்களுக்குச் சொல்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம்..அவரது அறையை ஊடகத்துறை வேலைவாய்ப்பு அலுவலகம் என்றால் துளியும் மிகை இல்லை. திடீரென்று பத்திரிகை முதலாளிகளால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பல பத்திரிகையாளர்கள் அவரை வந்து சந்திப்பார்கள். அவர்களில் பலருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறார். அவரது அறைக்கு வருகிறபோது, சந்தித்து, காதலித்து திருமணம் செய்துகொண்ட பத்திரிகையாளர்கள் கூட உண்டு.."கிணற்றுத் தவளை" என்ற தன்னை வர்ணித்துக் கொள்ளுவார் சின்னகுத்தூசி. "நான் இந்த ஆறாம் எண் அரையிலேயே அடைந்து கிடப்பவன்; நீங்கதானே நாலு இடங்களுக்கு போறீங்க! நாலுபேரைப் பார்த்துப் பேசறீங்க!" என்று கிணற்றுத் தவளைக்கு விளக்கமும் கொடுப்பார். அவர் ஒரு முறை என்னிடம் இப்படிச் சொன்னபோது, "ஆனா ஊர் சுத்தற குருவி எல்லாம் இந்த கிணத்துக்கு வந்து போகுதே! தவளை இங்கே இருந்துக்கிட்டே எல்லா தகவலும் தெரிஞ்சுகுதே!" என்று சொன்னதை ரசித்துச் சிரித்தார். அவருடைய அறைக்கு வரும் விசிட்டர்களுடனான உரையாடலின் முக்காலே மூணு வீசத்தில் அரசியல் நெடி வீசும் என்றாலும், தேர்ந்தெடுத்த சிலரிடம் கிரிக்கெட், கர்நாடக இசை மற்றும் இலக்கியம் பற்றிப் பேசுவார். வெகு அபூர்வமாக தன் சொந்தக் கதையைக் கூட சுவையாக சொல்லுவார்..செம்பை, முசிறி, மதுரை மணி அய்யர், எம்.எஸ். செம்மங்குடி, யேசுதாஸ் என்று பலரது இசை கேசட்டுகளை கேட்டு ரசிப்பார். அப்போது அந்தந்த வித்வான்களைப் பற்றி – அவர்களது விசேஷ குணாதிசயங்கள், கச்சேரி அனுபவங்கள், அவர்களைப் பற்றிய அந்தக்கால விமர்சனங்கள் என்று நிறைய, மிகவும் சுவாரசியமான விஷயங்களைச் சொல்லுவார். அவரது இசை ஆர்வத்தைப் பாராட்டினால், "காவேரி தண்ணி குடிச்சா தானா சாவேரி பாட வரும்" என்று பழமொழி சொல்லிவிட்டு, " நான் வெறும பேசறேன்; பாடலியே!" என்பார். கபில்தேவ், சச்சின் இரண்டுபேரும் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர்கள். இன்னொருபக்கம் அந்தக்காலத்து எழுத்தாளர்கள் கல்கி, தொடங்கி அகிலன், நா.பா. மௌனி, கரிச்சான் குஞ்சு, வல்லிக் கண்ணன் ஊடாக இந்தக்காலத்து சாரு நிவேதிதா வரை பலரைப் பற்றியும் நிறைய பேசுவார்..அவரது அறையில் எப்போதும் வெள்ளைவெளேரென்று சலவை செய்யப்பட்ட சில கதர் வேட்டி, சட்டைகள் ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு நாள் அவரது வேட்டியில் இருந்த சலவைக் குறி அவரது பெயருக்கு சம்பந்தமில்லாத ஒன்றாக இருப்பதை கவனித்துவிட்டு, அதுபற்றி விசாரித்தபோது ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார். "சின்ன குத்தூசியும், ஈ.வி.கே. சம்பத்தும் ரொம்ப குளோஸ். சம்பத், 'தமிழ் தேசியக் கட்சி' என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கியபோது, குத்தூசி அவரது செயலாளராக கூடவே இருந்தார்; தமிழ்நாடு முழுக்க இருவரும் ஒன்றாக டூர் போவார்கள்; சம்பத்தின் உடைகளை வெளுக்கும் சலவைத் தொழிலாளி ஒரே வீட்டுத் துணிதானே என இரண்டு பேர்களின் வெள்ளை வேட்டி, சட்டைகளிலும் ஒரே சலவைக் குறியை போட்டுவிட்டாராம். சம்பத் மறைவுக்குப் பிறகும், இவரது உடைகளில் அதே சலவைக் குறி தொடர்ந்தது. "சம்பத் அண்ணன் ஞாபகமா இருந்திட்டுப் போகட்டும்னு நானும் அப்படியே விட்டுட்டேன்" என்று சொன்ன போது அவரது குரலில் ஒரு நெகிழ்ச்சியை நான் கவனித்தேன்..இன்று கூட பழைய விஷயங்கள் குறித்த ஆழமான கட்டுரைகள் எழுதும்போது, என்னத்தான் கூகுள் ஆசான் உதவி செய்தாலும், சின்னக் குத்தூசியை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்..(தொடரும்)