உலகக் குடிமகன் – 23.– நா.கண்ணன்.நான் அயலகம் செல்கிறேன் என்றவுடன் "இவனுக்கு ஒரு கால்கட்டு போட்டு அனுப்புவோம்" என வீட்டில் முடிவு செய்து விட்டனர். எனக்கும் 31 வயதாகியிருந்தது. ஆனால் எனக்கு திருமணத்தில் ஆர்வமில்லை. ஆய்வு முதல் காதலி, தமிழ் இரண்டாம் காதலி. மூன்றாவதாக யாராவது வருவாரா? என்ற எண்ணமிருந்தது. பெரும்பாலும் ஆய்வகத் தோழிகளையே திருமணம் செய்து கொண்டு, இருவரும் போஸ்ட்டாகாக வெளிநாடு செல்வது ஒரு டிரெண்டாக இருந்தது. நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், அக்காவிற்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் குடும்பத்தின் மீதும் ஓர் அன்பு. எனவே, என்னை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டனர்..எவ்வளவோ புரட்சிக் கருத்துக்கள் என்னிடம் இருந்தாலும் என் வீக்னஸ் பணிவு. இப்பணிவு என்னைப் படாத பாடு படுத்தியிருக்கிறது. மும்பை, டெல்லியிலிருந்து வருவோருக்கு இவ்வளவு பணிவு, குரு விஸ்வாசம் இருப்பதில்லை. என்னைக் கெடுத்து வைத்திருந்தார்கள். பெரியக்கா எனக்குத் தாய் போல என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்டு கழுத்தை நீட்டினேன்! திருமணம் என வந்துவிட்டால் தமிழகத்தில் ஆணுக்கும், பெண்ணிற்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருமே அவதிப்படுகின்றனர். கால்கட்டு போடாமல் சுதந்திரமாக ஆணும், பெண்ணும் வாழ வேண்டுமென நினைப்பவன் நான். ஜெர்மனி போனவுடன் எனது சகாவிற்கு குழந்தை இருந்தது. ஆனால், திருமணம் இன்னும் செய்து கொள்ளவில்லை. எனக்கு அந்த அரேன்ஜ்மெண்ட் பிடித்தது..கல்யாணமாகி மனைவி ஜப்பான் வருவதற்கு சில மாதங்கள் ஆயின. ஏ.என்.எஸ். தன் மனைவியை அழைத்துக் கொள்ளவில்லை. துபாய், குவைத் எனப் போகும் தமிழர்களும் மனைவியை அழைத்துச் செல்வதில்லை. இது பெரும் கொடுமை என நினைப்பவன் நான். மனைவி இல்லாத மூன்று மாதங்களில் மட்சுயாமாவில் வாழ்வது பெரும் கொடுமையாக இருந்தது. ஏனெனில், அமைதி என்றால் பேய் அமைதியாக இருந்தது ஊர். இப்படிக் கூட ஒரு நாடு இருக்குமா? என நான் எண்ணியதுண்டு. இங்கு ஓர் பேச்சு என்றால் அது நாலு பேருக்குக் கேட்கும் அளவிற்குத்தான் பேசுவோம். கல்யாணம், கார்த்திகை, கோயில், திருவிழா என லவுட் ஸ்பீக்கர் போட்டு அலறவிடுவது நம் வழக்கம். சத்தம் என்பதும் ஓர் மாசு என நான் அகில இந்திய வானொலியில் பேசியுள்ளேன். அங்கு என்னடாவென்றால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது அவர்களுக்கே கேட்குமா? என்று இருந்தது. அந்த நிசப்தத்தில் எங்கிருந்தோ ஒரு மணியோசை மாலையில் கேட்கும். ஈனஸ்வரத்தில் நூடுல் விற்பவன் கொடுக்கும் குரல் ஏதோ செய்யும்? பயமாகவே இருக்கும். நிசப்தம் ஓர் கொடுமையெனக் கண்ட காலங்கள் அது. காலையில் அலாரம் வைத்து எழவில்லையெனில் விடிந்ததே தெரியாது. இந்தக் கோழி கூவுவது, கோல மாவு விற்பவனின் அதிகாலைக் கூக்குரல், பால்காரன் குரல், காய்கறிக்காரியின் கூவல். ம்ஹூம், ஒரு சத்தம் கிடையாது. அந்த நூடுல்காரன் மட்டும்தான் நடமாடும் விற்பனை!.பின்னால் மனைவி வந்த பிறகு கோடையில் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது தொந்தரவாக இருந்தது என்று பக்கத்து வீட்டுக்காரன் புகார் செய்துவிட்டான். அவனுக்குத் தோட்டம் இருந்தது. நான் இருந்த வீடு அபார்ட்மெண்ட் ஹவுஸிங். வெளியே என்றால் ஏறக்குறைய தெருதான். வீட்டிற்குள்தான் எல்லாப்பேச்சும் என்றாகிவிடுகிறது அங்கு வாழ்க்கை..அடுத்து சைவ உணவு. அங்கு சைவம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள். கடை கண்ணிக்கிப் போனால் குழிப்பணியாரம் விற்பார்கள். ஆம்! அதே நம்மவூர் வெரைடிதான். ஆசையாக வாங்கி சுவைத்தால் நடுவில் சவுக்கு, சவுக்கு என்று ஏதோவொன்று! என்ன என்று கேட்டால் எட்டுக்கால் கடல் உயிரான ஆக்டோபஸ்ஸின் கால்களை துண்டு துண்டாக வெட்டி நடுவில் ஒரு துண்டு போட்டு குழிப்பணியாரம் செய்கிறார்கள். அங்கு சைவம் என்று சாப்பாட்டுக்கடையில் கேட்டால் வெறும் சாலட் மட்டும்தான்! எப்படியோ சொல்லிப் புரிய வைத்து ஒரு வெஜிடேரியன் சூப் கொண்டு வரச் சொன்னால் இறுதியில் வெங்காயத்தோல்போல ஒன்றை சூப்பின் மேலே போட்டுக் கொடுத்து விடுவார்கள். அது உஷ்ணத்தில் நெளியும். கேட்டால் அது மீனின் சரகு என்பார்கள். அது இல்லாமல் சூப் சுவைக்காது என்பார்கள். எனவே, மனைவி இல்லாத ஜப்பான் வாழ்வு என்பது நரகம்!.எப்படித் தெரு சத்தம் இல்லாமல் இருக்கிறதோ, அதேபோல் தெருவில் தூசு பார்க்க முடியாது. "எப்படி இவர்களால் படுத்துக்கொள்ளலாம் போன்ற உணர்வைத் தரும் தெருவை உருவாக்கி தக்க வைக்க முடிகிறது" என்பது கேள்வி. தெருவை சுத்தம் செய்யும் வண்டிகள் நாம் முழிப்பதற்குள் அதிகாலையில் சத்தமில்லாமல் வந்து சுத்தம் செய்துவிட்டு போய்விடும். அதன்பின் தெருவில் குப்பை போடாமல் ஒழுக்கமாக வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள் ஜப்பானியர். இந்திய வீடுகளில் உட்சுகாதாரம் இருக்கும். இருமுறை குளிப்பார்கள். பூஜை, புணஸ்காரமென்று ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள். ஆனால், எச்சல் இலையை வீட்டு வாசலில் போடக் கூச்சப்படமாட்டார்கள். சென்னை ரங்கநாதன் தெருவில் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் குப்பையை கடை வாசலில் போட்டு அசிங்கமாக வைத்திருக்க எப்படி முடிகிறது எனும் கேள்வி என்னுள் எழும். இந்த அழுக்குக் குப்பையில் டீ, வடை, பஜ்ஜி, பாணிபூரி என சுடச்சுட வியாபாரம் ஓடிக்கொண்டிருக்கும். குப்பையோடு குப்பையாக பன்றிகள் போல் வாழத் தமிழன் பழகிக்கொண்டுவிட்டான் எனத் தோன்றும்..அங்கு எல்லாவற்றையும் ஒரு கலை நயத்தோடு காணும் போக்கு இருக்கிறது. புத்த கோயில் என்றால் அதுவொரு அழகு, அமைதி, சுத்தம். பெரிய, பெரிய மால் என்றால் அங்கு வேறொரு பிரகாசம், சுத்தம், அழகு. வீடு என்றால் சொல்லவே வேண்டாம். ஜப்பானிய ஓவியமாகட்டும், வீடாகட்டும், கோயிலாகட்டும் அவர்களுக்கு வெளி என்பதை எப்படிக் கலைநயத்தோடு காண்பது என்று தெரியும். கடையில் வாங்கும் எப்பொருளையும் அப்படியே கையில் கொடுக்கும் பழக்கம் கிடையாது. அதை அழகாக சுற்றி, பூச்சூட்டிக் கொடுப்பர். இந்த அழகு உணர்ச்சிதான் அவர்கள் தெருவையும் சுத்தமாக வைக்கத் தூண்டுகிறது. சங்ககாலத் தமிழனிடம் இவ்வழகுணர்ச்சியைக் காணலாம். நம் கோயில்களில், அரண்மனையில் காணலாம். ஏன் கிராமப்புற குடிசை வீட்டில்கூட ஓர் அழகு இருக்கும். ஆனால் தமிழக நகர வாழ்வு என்பது நரக வாழ்வே! நகரத்தில் அழகு பார்க்க யாருக்கும் நேரமில்லை. அதைவிட நகரத்தில் எங்கிங்கு இருந்தோ வருகிறார்கள். சென்னை தன் நகரம் எனும் உணர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. ஓர் உறவு இல்லாமல் போய்விடுகிறது..இங்குதான் ஜப்பானியர் நம்மிலிருந்து வேறுபடுகின்றனர். வாய்க்கு வாய் அவர்கள் இது எங்கள் நாடு. நாம் ஜப்பானியர் என்பர். இங்கு யாரும் நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில்லை. நம் எல்லை நம் வீடு, நம் ஜாதி என்பதோடு நின்று விடுகிறது. நாங்கள் வசித்த காலங்களில் ஒரு நாள் தெரு சுத்தம் செய்யும் நாள் என்று ஒரு நாளைத் தேர்வு செய்து அத்தெருவில் இருக்கும் அனைவரும் நம் தெரு, அதை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை. இது நம் நாடு. எனும் தோரணையில் ஏழை, பணக்காரன், கற்றவன், கல்லாதவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து சுவர் அழுக்கை நீக்குவதுவரை எல்லாவற்றையும் தலையில் வாரிப் போட்டுக்கொண்டு செய்வதைக் கண்டு விக்கித்துப் போய் நின்றேன்..நம் எண்ணம் ஏன், நம் வீட்டைத்தாண்டி பொது வெளிக்குள் வர மறுக்கிறது? நமது ஜாதீய வாழ்வியலில் இன்ன தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற வரைமுறை இருக்கிறது. எனவே, "குப்பை போடுவது என் உரிமை. குப்பையை எடுப்பது கடை நிலை ஊழியனின் கடமை" என்று நாம் முன்தீர்மானித்து விடுகிறோம். எனவே, வெளியே கிடக்கும் குப்பை நம்மை உறுத்துவதில்லை. குப்பையைப் போலவே கடைநிலை ஊழியனையும் நாம் காண்கிறோம், அதிகாரம் செய்கிறோம். நமக்கு கூச்சம் வருவதில்லை. அங்கு ஜாதி கிடையாது. யாரும், எத்தொழிலையும் செய்யலாம். மெய்ஜி சகாபதம் என்று சொல்லும் காலத்தில் கட்டுக் கோப்பான ஜப்பானிய சமூகம் தன் இறுக்கத்தை விட்டு ஐரோப்பிய விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டு நவீனப்படுகிறது. அன்றிலிருந்து ஜப்பான் தன்னை ஓர் ஐரோப்பிய நாடு என்றே இனம் காணத் தொடங்குகிறது. எதைச் செய்தாலும் சிறப்பாய் செய்ய வேண்டுமென்ற பிறவிக்குணத்தால் ஜப்பானை ஐரோப்பிய நாடைவிட சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ளப் பழகிவிட்டனர். அங்கு எல்லாமே அழகுதான்..(தொடரும்)
உலகக் குடிமகன் – 23.– நா.கண்ணன்.நான் அயலகம் செல்கிறேன் என்றவுடன் "இவனுக்கு ஒரு கால்கட்டு போட்டு அனுப்புவோம்" என வீட்டில் முடிவு செய்து விட்டனர். எனக்கும் 31 வயதாகியிருந்தது. ஆனால் எனக்கு திருமணத்தில் ஆர்வமில்லை. ஆய்வு முதல் காதலி, தமிழ் இரண்டாம் காதலி. மூன்றாவதாக யாராவது வருவாரா? என்ற எண்ணமிருந்தது. பெரும்பாலும் ஆய்வகத் தோழிகளையே திருமணம் செய்து கொண்டு, இருவரும் போஸ்ட்டாகாக வெளிநாடு செல்வது ஒரு டிரெண்டாக இருந்தது. நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், அக்காவிற்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் குடும்பத்தின் மீதும் ஓர் அன்பு. எனவே, என்னை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டனர்..எவ்வளவோ புரட்சிக் கருத்துக்கள் என்னிடம் இருந்தாலும் என் வீக்னஸ் பணிவு. இப்பணிவு என்னைப் படாத பாடு படுத்தியிருக்கிறது. மும்பை, டெல்லியிலிருந்து வருவோருக்கு இவ்வளவு பணிவு, குரு விஸ்வாசம் இருப்பதில்லை. என்னைக் கெடுத்து வைத்திருந்தார்கள். பெரியக்கா எனக்குத் தாய் போல என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்டு கழுத்தை நீட்டினேன்! திருமணம் என வந்துவிட்டால் தமிழகத்தில் ஆணுக்கும், பெண்ணிற்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருமே அவதிப்படுகின்றனர். கால்கட்டு போடாமல் சுதந்திரமாக ஆணும், பெண்ணும் வாழ வேண்டுமென நினைப்பவன் நான். ஜெர்மனி போனவுடன் எனது சகாவிற்கு குழந்தை இருந்தது. ஆனால், திருமணம் இன்னும் செய்து கொள்ளவில்லை. எனக்கு அந்த அரேன்ஜ்மெண்ட் பிடித்தது..கல்யாணமாகி மனைவி ஜப்பான் வருவதற்கு சில மாதங்கள் ஆயின. ஏ.என்.எஸ். தன் மனைவியை அழைத்துக் கொள்ளவில்லை. துபாய், குவைத் எனப் போகும் தமிழர்களும் மனைவியை அழைத்துச் செல்வதில்லை. இது பெரும் கொடுமை என நினைப்பவன் நான். மனைவி இல்லாத மூன்று மாதங்களில் மட்சுயாமாவில் வாழ்வது பெரும் கொடுமையாக இருந்தது. ஏனெனில், அமைதி என்றால் பேய் அமைதியாக இருந்தது ஊர். இப்படிக் கூட ஒரு நாடு இருக்குமா? என நான் எண்ணியதுண்டு. இங்கு ஓர் பேச்சு என்றால் அது நாலு பேருக்குக் கேட்கும் அளவிற்குத்தான் பேசுவோம். கல்யாணம், கார்த்திகை, கோயில், திருவிழா என லவுட் ஸ்பீக்கர் போட்டு அலறவிடுவது நம் வழக்கம். சத்தம் என்பதும் ஓர் மாசு என நான் அகில இந்திய வானொலியில் பேசியுள்ளேன். அங்கு என்னடாவென்றால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது அவர்களுக்கே கேட்குமா? என்று இருந்தது. அந்த நிசப்தத்தில் எங்கிருந்தோ ஒரு மணியோசை மாலையில் கேட்கும். ஈனஸ்வரத்தில் நூடுல் விற்பவன் கொடுக்கும் குரல் ஏதோ செய்யும்? பயமாகவே இருக்கும். நிசப்தம் ஓர் கொடுமையெனக் கண்ட காலங்கள் அது. காலையில் அலாரம் வைத்து எழவில்லையெனில் விடிந்ததே தெரியாது. இந்தக் கோழி கூவுவது, கோல மாவு விற்பவனின் அதிகாலைக் கூக்குரல், பால்காரன் குரல், காய்கறிக்காரியின் கூவல். ம்ஹூம், ஒரு சத்தம் கிடையாது. அந்த நூடுல்காரன் மட்டும்தான் நடமாடும் விற்பனை!.பின்னால் மனைவி வந்த பிறகு கோடையில் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது தொந்தரவாக இருந்தது என்று பக்கத்து வீட்டுக்காரன் புகார் செய்துவிட்டான். அவனுக்குத் தோட்டம் இருந்தது. நான் இருந்த வீடு அபார்ட்மெண்ட் ஹவுஸிங். வெளியே என்றால் ஏறக்குறைய தெருதான். வீட்டிற்குள்தான் எல்லாப்பேச்சும் என்றாகிவிடுகிறது அங்கு வாழ்க்கை..அடுத்து சைவ உணவு. அங்கு சைவம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள். கடை கண்ணிக்கிப் போனால் குழிப்பணியாரம் விற்பார்கள். ஆம்! அதே நம்மவூர் வெரைடிதான். ஆசையாக வாங்கி சுவைத்தால் நடுவில் சவுக்கு, சவுக்கு என்று ஏதோவொன்று! என்ன என்று கேட்டால் எட்டுக்கால் கடல் உயிரான ஆக்டோபஸ்ஸின் கால்களை துண்டு துண்டாக வெட்டி நடுவில் ஒரு துண்டு போட்டு குழிப்பணியாரம் செய்கிறார்கள். அங்கு சைவம் என்று சாப்பாட்டுக்கடையில் கேட்டால் வெறும் சாலட் மட்டும்தான்! எப்படியோ சொல்லிப் புரிய வைத்து ஒரு வெஜிடேரியன் சூப் கொண்டு வரச் சொன்னால் இறுதியில் வெங்காயத்தோல்போல ஒன்றை சூப்பின் மேலே போட்டுக் கொடுத்து விடுவார்கள். அது உஷ்ணத்தில் நெளியும். கேட்டால் அது மீனின் சரகு என்பார்கள். அது இல்லாமல் சூப் சுவைக்காது என்பார்கள். எனவே, மனைவி இல்லாத ஜப்பான் வாழ்வு என்பது நரகம்!.எப்படித் தெரு சத்தம் இல்லாமல் இருக்கிறதோ, அதேபோல் தெருவில் தூசு பார்க்க முடியாது. "எப்படி இவர்களால் படுத்துக்கொள்ளலாம் போன்ற உணர்வைத் தரும் தெருவை உருவாக்கி தக்க வைக்க முடிகிறது" என்பது கேள்வி. தெருவை சுத்தம் செய்யும் வண்டிகள் நாம் முழிப்பதற்குள் அதிகாலையில் சத்தமில்லாமல் வந்து சுத்தம் செய்துவிட்டு போய்விடும். அதன்பின் தெருவில் குப்பை போடாமல் ஒழுக்கமாக வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள் ஜப்பானியர். இந்திய வீடுகளில் உட்சுகாதாரம் இருக்கும். இருமுறை குளிப்பார்கள். பூஜை, புணஸ்காரமென்று ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள். ஆனால், எச்சல் இலையை வீட்டு வாசலில் போடக் கூச்சப்படமாட்டார்கள். சென்னை ரங்கநாதன் தெருவில் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் குப்பையை கடை வாசலில் போட்டு அசிங்கமாக வைத்திருக்க எப்படி முடிகிறது எனும் கேள்வி என்னுள் எழும். இந்த அழுக்குக் குப்பையில் டீ, வடை, பஜ்ஜி, பாணிபூரி என சுடச்சுட வியாபாரம் ஓடிக்கொண்டிருக்கும். குப்பையோடு குப்பையாக பன்றிகள் போல் வாழத் தமிழன் பழகிக்கொண்டுவிட்டான் எனத் தோன்றும்..அங்கு எல்லாவற்றையும் ஒரு கலை நயத்தோடு காணும் போக்கு இருக்கிறது. புத்த கோயில் என்றால் அதுவொரு அழகு, அமைதி, சுத்தம். பெரிய, பெரிய மால் என்றால் அங்கு வேறொரு பிரகாசம், சுத்தம், அழகு. வீடு என்றால் சொல்லவே வேண்டாம். ஜப்பானிய ஓவியமாகட்டும், வீடாகட்டும், கோயிலாகட்டும் அவர்களுக்கு வெளி என்பதை எப்படிக் கலைநயத்தோடு காண்பது என்று தெரியும். கடையில் வாங்கும் எப்பொருளையும் அப்படியே கையில் கொடுக்கும் பழக்கம் கிடையாது. அதை அழகாக சுற்றி, பூச்சூட்டிக் கொடுப்பர். இந்த அழகு உணர்ச்சிதான் அவர்கள் தெருவையும் சுத்தமாக வைக்கத் தூண்டுகிறது. சங்ககாலத் தமிழனிடம் இவ்வழகுணர்ச்சியைக் காணலாம். நம் கோயில்களில், அரண்மனையில் காணலாம். ஏன் கிராமப்புற குடிசை வீட்டில்கூட ஓர் அழகு இருக்கும். ஆனால் தமிழக நகர வாழ்வு என்பது நரக வாழ்வே! நகரத்தில் அழகு பார்க்க யாருக்கும் நேரமில்லை. அதைவிட நகரத்தில் எங்கிங்கு இருந்தோ வருகிறார்கள். சென்னை தன் நகரம் எனும் உணர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. ஓர் உறவு இல்லாமல் போய்விடுகிறது..இங்குதான் ஜப்பானியர் நம்மிலிருந்து வேறுபடுகின்றனர். வாய்க்கு வாய் அவர்கள் இது எங்கள் நாடு. நாம் ஜப்பானியர் என்பர். இங்கு யாரும் நாம் இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில்லை. நம் எல்லை நம் வீடு, நம் ஜாதி என்பதோடு நின்று விடுகிறது. நாங்கள் வசித்த காலங்களில் ஒரு நாள் தெரு சுத்தம் செய்யும் நாள் என்று ஒரு நாளைத் தேர்வு செய்து அத்தெருவில் இருக்கும் அனைவரும் நம் தெரு, அதை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை. இது நம் நாடு. எனும் தோரணையில் ஏழை, பணக்காரன், கற்றவன், கல்லாதவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து சுவர் அழுக்கை நீக்குவதுவரை எல்லாவற்றையும் தலையில் வாரிப் போட்டுக்கொண்டு செய்வதைக் கண்டு விக்கித்துப் போய் நின்றேன்..நம் எண்ணம் ஏன், நம் வீட்டைத்தாண்டி பொது வெளிக்குள் வர மறுக்கிறது? நமது ஜாதீய வாழ்வியலில் இன்ன தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற வரைமுறை இருக்கிறது. எனவே, "குப்பை போடுவது என் உரிமை. குப்பையை எடுப்பது கடை நிலை ஊழியனின் கடமை" என்று நாம் முன்தீர்மானித்து விடுகிறோம். எனவே, வெளியே கிடக்கும் குப்பை நம்மை உறுத்துவதில்லை. குப்பையைப் போலவே கடைநிலை ஊழியனையும் நாம் காண்கிறோம், அதிகாரம் செய்கிறோம். நமக்கு கூச்சம் வருவதில்லை. அங்கு ஜாதி கிடையாது. யாரும், எத்தொழிலையும் செய்யலாம். மெய்ஜி சகாபதம் என்று சொல்லும் காலத்தில் கட்டுக் கோப்பான ஜப்பானிய சமூகம் தன் இறுக்கத்தை விட்டு ஐரோப்பிய விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டு நவீனப்படுகிறது. அன்றிலிருந்து ஜப்பான் தன்னை ஓர் ஐரோப்பிய நாடு என்றே இனம் காணத் தொடங்குகிறது. எதைச் செய்தாலும் சிறப்பாய் செய்ய வேண்டுமென்ற பிறவிக்குணத்தால் ஜப்பானை ஐரோப்பிய நாடைவிட சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ளப் பழகிவிட்டனர். அங்கு எல்லாமே அழகுதான்..(தொடரும்)