உலகக் குடிமகன் – 27.– நா.கண்ணன்.நான் ஜெர்மனி வந்தவுடன் சரமாரியாக எனது ஜப்பானிய நண்பர்கள், சக ஆய்வாளர்கள் என்னை வந்து பார்க்கத் தொடங்கினர். எல்லோருக்குமே ஜெர்மனியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை வருவதில் ஆச்சர்யமில்லை. இன்று பொருளாதாரத்தில் முன்னேறிய முதலாம் உலக நாடு ஜெர்மனி. ஆனால், 50-60 களில் அவ்வாறில்லை. இரண்டாம் உலகப்போரால் நிர்மூலமாக்கப்பட்ட நாடு. நான் போய் சேர்ந்த கீல் நிறைய அடிவாங்கி இருந்திருக்கிறது. பழைய, புராதாணக்கட்டிடம் என்று அங்கு ஏதுமில்லை. எல்லாம் குண்டு மழையில் நொறுங்கிவிட்டது. நான் சென்ற காலத்தில் பிரித்தானிய படை அங்கு இன்னும் இருந்தது! ஜப்பானும் அப்படித்தான். அங்கு அமெரிக்கப்படை இருந்தது..ஆனால் இரண்டு நாடுகளும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வந்துவிட்டன. இது என்னை என் பள்ளிக்காலத்திலேயே ஆதர்சப்பட / ஆச்சர்யப்பட வைத்த விஷயம். ஆனால், இந்நாடுகளில் நான் வாழ்வேன் என்று திருப்பூவண காலத்தில் சிந்தித்தது கூடக் கிடையாது. இரண்டு நாடுகளின் மீட்பும் கல்வியால்தான் என்பது ஆச்சர்யம். அதே காலத்தில், இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததற்கு காரணம் கல்வியறிவு இல்லாததுதான். "நெஞ்சு பொறுக்குதிலையே" எனும் பாடலில் பாரதி அன்றிருந்த இந்திய நிலைமையை அழகாக வருணிப்பான், "கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்" என்பான். நாம் அடிமைப்பட்டு இருக்கிறோம் எனும் அறிவுகூட இன்றி, "அப்பால் எவனோ செல்வான் – அவன் ஆடையை கண்டு பயந்தெழுந்து நிற்பார்; எப்போதும் கை கட்டுவார் – இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்" எனும்போது இந்தியாவிருந்த நிலைமை புரிகிறது. பகைப்படைகள் நாட்டை அழிக்கலாம், பொருளாதாரத்தைச் சிதைக்கலாம், ஆனால், ஒருவன் கற்ற கல்வியை எடுத்துவிட முடியாது..போருக்கு முன் ஜெர்மனி ஐரோப்பாவின் திலகமாக இருந்தது. உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள், கட்டிடக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நோபல் பரிசு நாயகர்கள் வாழ்ந்த நாடாக அது இருந்தது. அக்காலத்தில் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் ஜெர்மன் மொழி கற்றுக்கொள்ள வேண்டும்! அதனால்தான், ஜெர்மானிய மருத்துவமுறையை அமுல்படுத்திய ஜப்பான், அக்கல்வியை ஜெர்மன் மொழியிலேயே தன்னாட்டிலும் கற்றுவித்தது. இரண்டாம் உலகப்போர் இல்லையெனில் நாம் டாய்ச்சு எனும் ஜெர்மன் மொழியில் பேசிக்கொண்டிருந்திருப்போம்! ஆங்கிலத்தில் அல்ல! கல்வி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு இவையே இந்நாடுகள் மீண்டுவரக் காரணமாயின. இதை நன்கு உணர்ந்தே ஜவஹர்லால் நேருவின் அரசு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் கல்விக்கு முதலிடம் கொடுத்தது, இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நிரம்பிய நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்தில் நிற்கிறது இந்தியா. கல்வி நம்மைக் காக்கும்..ஜெர்மன் மக்கள், குறிப்பாக வடஜெர்மனி மக்கள் நல்ல வாட்டசாட்டமாக இருப்பர். முன்பு வடதுருவப் பகுதியில் வாழ்ந்த வைக்கிங் இன மக்களின் இரத்தக்கலப்பு என்று கூடச் சொல்லலாம். என்னைக் காண வந்த வத்தனாபே சான், எங்கள் ஆய்வக கழிப்பறைக்குச் சென்றவர் திரும்பவே இல்லை. என்னடா இது என்று உள்ளே போனேன்! பாவம், மிகவும் குள்ளமான வத்தனாபேசானால் அங்கிருந்த கனத்த இரும்புக் கதவைத் திறக்க முடியவில்லை! உள்ளே மாட்டிக் கொண்டு விட்டார். என்ன சார், எல்லாம் ஆச்சா? என்று கேட்டேன். பாவமான முகத்துடன் எங்கே? உங்கள் டாய்லெட் ரொம்ப உயரமா இருக்கு. ஒன்றுக்குப் போக முடியவில்லை என்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை! இதேபோல்தான் ஜெர்மனின் மிகப்பிரபலமான அக்டோபர் பெஸ்ட் எனும் பியர் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டுமென என் ஜப்பானிய சகா அடம்பிடித்து 'பாயென்' மாநிலத்திற்கு அழைத்துப் போக வைத்தார். அங்கு குறைந்த அளவு விநியோகமே ஒரு லிட்டர் பியர்தான். அது கொள்ளும் ஒரு லிட்டர் கிளாஸ் படு கனமாக இருக்கும். நம்ம நண்பருக்கு அதைத்தூக்கி வைத்துக் குடிக்க முடியவில்லை. இவர் பியர் கப்பை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க, 10 கப்பை இடது, வலது என இரு கைகளாலும் தூக்கிய படி ஜெர்மானிய மாது செல்வதைக் கண்டு பிரம்மித்துப் போய் உட்கார்ந்துவிட்டார்..ஜெர்மனி பெரிய நாடு. மிக, மிக அழகிய நாடு. பெரும் ஆறுகளும், மலைகளும், சமவெளிகளும், பெரிய ஏரிகளையும் கொண்ட நாடு. எங்கு சென்றாலும் அன்று துலக்கிய பாத்திரம் போல் மின்னும் நாடு. என் மனைவின் தோழி வந்தபோது அவர் சாக்காக நாங்கள் ஜெர்மனியை சுற்றிப் பார்க்கச் சென்றோம். ஜெர்மனியைப் பல வழிகளில், பல பருவங்களில் காணலாம். வடக்கே நாங்கள் இருந்த பகுதி, ஜெர்மனியின் சுவிட்சர்லாந்து எனப்படும். செங்கல்பட்டு மாவட்டம் போல் ஏகப்பட்ட ஏரிகள். மேற்கே நெதர்லாந்து போன்ற தாழ்ந்த கடற்பகுதி, காற்று உருளைகள் வீசும் காற்றை வாங்கியும், நீர் உருளைகள் நீரை வாரியும் இயங்கும் அழகு தனி..தெற்கே "காதற் செலவு" எனும் ஓர் பயணப்பாதை. ரொமாண்டிச ஸ்ட்ராச எனும் இப்பெருவழி பல அழகிய நகரங்கள் வழி செல்லும். பார்க்கப்பார்க்க கண்கொள்ளாக் காட்சி. இன்னும் தெற்கே போனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர்பயணப்பாதை. நடுவில் கருங்காட்டுப் பகுதி. இப்படி எங்கு நோக்கினும் அழகுடைய நாடு..நாங்கள் காதற் பெருவழியில் சென்றோம். போகும் இடங்களில் பண்ணைகளில் தங்கலாம். காலை உணவோடு பால், தயிர், சீஸ் என நல்ல சாப்பாடும். ஜெர்மனி என்றால் உடனே நினைவிற்கு வருவது அவர்களது வகை வகையான கோதுமை ரொட்டிகளும், சீஸ் வெரைட்டிகளும்தான். கேக், காஃபி என்பது அடுத்த அட்ராக்ஷன். ஜெர்மன் ஒயின், பீர் மிகப்பிரபலம். அங்கு மது அருந்துவது ஒரு பண்பாட்டு நிகழ்வு. இங்கு போல் குடித்து விட்டு கூத்தாடும் மனப்பிறழ்வுற்ற நிகழ்வு அங்கு நடப்பதில்லை. நம்ம ஊரில் வெறும் வெட்டிச் சலம்பல். மனோதத்துவ நிபுணரிடம் போக வேண்டிய கேசுகள்! நல்ல ஒயின் சுவைக்க வேண்டுமெனில் அதற்கென ஒயின் தடம் ஒன்றும் அங்கு இருக்கிறது..(தொடரும்)
உலகக் குடிமகன் – 27.– நா.கண்ணன்.நான் ஜெர்மனி வந்தவுடன் சரமாரியாக எனது ஜப்பானிய நண்பர்கள், சக ஆய்வாளர்கள் என்னை வந்து பார்க்கத் தொடங்கினர். எல்லோருக்குமே ஜெர்மனியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை வருவதில் ஆச்சர்யமில்லை. இன்று பொருளாதாரத்தில் முன்னேறிய முதலாம் உலக நாடு ஜெர்மனி. ஆனால், 50-60 களில் அவ்வாறில்லை. இரண்டாம் உலகப்போரால் நிர்மூலமாக்கப்பட்ட நாடு. நான் போய் சேர்ந்த கீல் நிறைய அடிவாங்கி இருந்திருக்கிறது. பழைய, புராதாணக்கட்டிடம் என்று அங்கு ஏதுமில்லை. எல்லாம் குண்டு மழையில் நொறுங்கிவிட்டது. நான் சென்ற காலத்தில் பிரித்தானிய படை அங்கு இன்னும் இருந்தது! ஜப்பானும் அப்படித்தான். அங்கு அமெரிக்கப்படை இருந்தது..ஆனால் இரண்டு நாடுகளும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வந்துவிட்டன. இது என்னை என் பள்ளிக்காலத்திலேயே ஆதர்சப்பட / ஆச்சர்யப்பட வைத்த விஷயம். ஆனால், இந்நாடுகளில் நான் வாழ்வேன் என்று திருப்பூவண காலத்தில் சிந்தித்தது கூடக் கிடையாது. இரண்டு நாடுகளின் மீட்பும் கல்வியால்தான் என்பது ஆச்சர்யம். அதே காலத்தில், இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததற்கு காரணம் கல்வியறிவு இல்லாததுதான். "நெஞ்சு பொறுக்குதிலையே" எனும் பாடலில் பாரதி அன்றிருந்த இந்திய நிலைமையை அழகாக வருணிப்பான், "கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்" என்பான். நாம் அடிமைப்பட்டு இருக்கிறோம் எனும் அறிவுகூட இன்றி, "அப்பால் எவனோ செல்வான் – அவன் ஆடையை கண்டு பயந்தெழுந்து நிற்பார்; எப்போதும் கை கட்டுவார் – இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்" எனும்போது இந்தியாவிருந்த நிலைமை புரிகிறது. பகைப்படைகள் நாட்டை அழிக்கலாம், பொருளாதாரத்தைச் சிதைக்கலாம், ஆனால், ஒருவன் கற்ற கல்வியை எடுத்துவிட முடியாது..போருக்கு முன் ஜெர்மனி ஐரோப்பாவின் திலகமாக இருந்தது. உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள், கட்டிடக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நோபல் பரிசு நாயகர்கள் வாழ்ந்த நாடாக அது இருந்தது. அக்காலத்தில் அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் ஜெர்மன் மொழி கற்றுக்கொள்ள வேண்டும்! அதனால்தான், ஜெர்மானிய மருத்துவமுறையை அமுல்படுத்திய ஜப்பான், அக்கல்வியை ஜெர்மன் மொழியிலேயே தன்னாட்டிலும் கற்றுவித்தது. இரண்டாம் உலகப்போர் இல்லையெனில் நாம் டாய்ச்சு எனும் ஜெர்மன் மொழியில் பேசிக்கொண்டிருந்திருப்போம்! ஆங்கிலத்தில் அல்ல! கல்வி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு இவையே இந்நாடுகள் மீண்டுவரக் காரணமாயின. இதை நன்கு உணர்ந்தே ஜவஹர்லால் நேருவின் அரசு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் கல்விக்கு முதலிடம் கொடுத்தது, இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நிரம்பிய நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்தில் நிற்கிறது இந்தியா. கல்வி நம்மைக் காக்கும்..ஜெர்மன் மக்கள், குறிப்பாக வடஜெர்மனி மக்கள் நல்ல வாட்டசாட்டமாக இருப்பர். முன்பு வடதுருவப் பகுதியில் வாழ்ந்த வைக்கிங் இன மக்களின் இரத்தக்கலப்பு என்று கூடச் சொல்லலாம். என்னைக் காண வந்த வத்தனாபே சான், எங்கள் ஆய்வக கழிப்பறைக்குச் சென்றவர் திரும்பவே இல்லை. என்னடா இது என்று உள்ளே போனேன்! பாவம், மிகவும் குள்ளமான வத்தனாபேசானால் அங்கிருந்த கனத்த இரும்புக் கதவைத் திறக்க முடியவில்லை! உள்ளே மாட்டிக் கொண்டு விட்டார். என்ன சார், எல்லாம் ஆச்சா? என்று கேட்டேன். பாவமான முகத்துடன் எங்கே? உங்கள் டாய்லெட் ரொம்ப உயரமா இருக்கு. ஒன்றுக்குப் போக முடியவில்லை என்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை! இதேபோல்தான் ஜெர்மனின் மிகப்பிரபலமான அக்டோபர் பெஸ்ட் எனும் பியர் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டுமென என் ஜப்பானிய சகா அடம்பிடித்து 'பாயென்' மாநிலத்திற்கு அழைத்துப் போக வைத்தார். அங்கு குறைந்த அளவு விநியோகமே ஒரு லிட்டர் பியர்தான். அது கொள்ளும் ஒரு லிட்டர் கிளாஸ் படு கனமாக இருக்கும். நம்ம நண்பருக்கு அதைத்தூக்கி வைத்துக் குடிக்க முடியவில்லை. இவர் பியர் கப்பை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க, 10 கப்பை இடது, வலது என இரு கைகளாலும் தூக்கிய படி ஜெர்மானிய மாது செல்வதைக் கண்டு பிரம்மித்துப் போய் உட்கார்ந்துவிட்டார்..ஜெர்மனி பெரிய நாடு. மிக, மிக அழகிய நாடு. பெரும் ஆறுகளும், மலைகளும், சமவெளிகளும், பெரிய ஏரிகளையும் கொண்ட நாடு. எங்கு சென்றாலும் அன்று துலக்கிய பாத்திரம் போல் மின்னும் நாடு. என் மனைவின் தோழி வந்தபோது அவர் சாக்காக நாங்கள் ஜெர்மனியை சுற்றிப் பார்க்கச் சென்றோம். ஜெர்மனியைப் பல வழிகளில், பல பருவங்களில் காணலாம். வடக்கே நாங்கள் இருந்த பகுதி, ஜெர்மனியின் சுவிட்சர்லாந்து எனப்படும். செங்கல்பட்டு மாவட்டம் போல் ஏகப்பட்ட ஏரிகள். மேற்கே நெதர்லாந்து போன்ற தாழ்ந்த கடற்பகுதி, காற்று உருளைகள் வீசும் காற்றை வாங்கியும், நீர் உருளைகள் நீரை வாரியும் இயங்கும் அழகு தனி..தெற்கே "காதற் செலவு" எனும் ஓர் பயணப்பாதை. ரொமாண்டிச ஸ்ட்ராச எனும் இப்பெருவழி பல அழகிய நகரங்கள் வழி செல்லும். பார்க்கப்பார்க்க கண்கொள்ளாக் காட்சி. இன்னும் தெற்கே போனால் ஆல்ப்ஸ் மலைத் தொடர்பயணப்பாதை. நடுவில் கருங்காட்டுப் பகுதி. இப்படி எங்கு நோக்கினும் அழகுடைய நாடு..நாங்கள் காதற் பெருவழியில் சென்றோம். போகும் இடங்களில் பண்ணைகளில் தங்கலாம். காலை உணவோடு பால், தயிர், சீஸ் என நல்ல சாப்பாடும். ஜெர்மனி என்றால் உடனே நினைவிற்கு வருவது அவர்களது வகை வகையான கோதுமை ரொட்டிகளும், சீஸ் வெரைட்டிகளும்தான். கேக், காஃபி என்பது அடுத்த அட்ராக்ஷன். ஜெர்மன் ஒயின், பீர் மிகப்பிரபலம். அங்கு மது அருந்துவது ஒரு பண்பாட்டு நிகழ்வு. இங்கு போல் குடித்து விட்டு கூத்தாடும் மனப்பிறழ்வுற்ற நிகழ்வு அங்கு நடப்பதில்லை. நம்ம ஊரில் வெறும் வெட்டிச் சலம்பல். மனோதத்துவ நிபுணரிடம் போக வேண்டிய கேசுகள்! நல்ல ஒயின் சுவைக்க வேண்டுமெனில் அதற்கென ஒயின் தடம் ஒன்றும் அங்கு இருக்கிறது..(தொடரும்)