ஒரு நிருபரின் டைரி – 33.எஸ். சந்திரமௌலி.பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ.வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள். வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி இரண்டு புனைப்பெயர்கள் வைத்துக் கொள்வார்கள். பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் சொந்தப் பெயரில்தான் எழுதுவார்கள். சிலர் ஓரிரு புனைப்பெயர்களில் எழுதுவதுண்டு. இதற்கெல்லாம் விதி விலக்கு குமுதம். அங்கே பணியாற்றிய எழுத்தாளர்கள் ரா.கி. ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ர.சுந்தரேசன், 'புனிதன்' என்கிற சண்முக சுந்தரம் என அனைவருமே குறைந்தது அரை டஜன் புனைப்பெயர்களில் எழுதுவார்கள். இந்த பாலிசி, அங்கே பத்திரிகையாளரான என்.பாலசுப்ரமணியத்துக்கும் பொருந்தும். அவருடைய முதன்மையான புனைப்பெயர் பால்யூ. அதைத் தவிர ஜடாதரன், மங்களம் ஆத்ரேயி, துருவன், மனிதன், ராஜ்பால், வம்பானந்தா, நட்டுவாக்கலி நாச்சிமுத்து என்று பல பெயர்களில் ஆரம்ப காலத்தில் சிறுகதைகள், அதன் பிறகு பேட்டிகள், கட்டுரைகள், துணுக்குகள், வம்புகள் இன்னபிறவெல்லாம் எழுதுவார். ஆனாலும் குமுதம் வாசகர்களுக்கு 'பால்யூ' என்ற பெயர்தான் மிகவும் பரிச்சயம்..'பால்யூ' என்பது சற்று வித்தியாசமான பெயர். எனவே, சென்னை கே.கே.நகர் மத்திய பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த அவரை முதல் முறை நேரில் சந்தித்தபோது "பால்யூ என்ற பெயரை ஏன் வைத்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். ."கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான். என் பேர் பாலசுப்ரமணியம். இந்தப் பெயர் உள்ளவர்களை சுருக்கமாக 'பாலு' என்றுதானே கூப்பிடுவார்கள்? ஆங்கிலத்தில் Balu வை Bal-u ஆக்கிவிட்டேன். அதுதான் தமிழில் பால்யூ" என்று விளக்கம் கொடுத்தார். திருமதி பால்யூவின் பெயர் மங்களம். கணவரைப் போலவே அவரும் கனிவாகப் பேசுவார். அன்புடன் உபசரிப்பார். எல்லா பத்திரிகைகளியும் படித்துவிடுவார். பார்க்கும்போதே, "இந்த வாரம் இது பத்தி எழுதி இருக்கியே! படித்தேன்!" என்பார். பால்யூவின் புனைப்பெயர்களில் ஒன்றான மங்களம் ஆத்ரேயி இவரது உபயம்தான்!.பால்யூ திருவாரூர்க்காரர். திருவாரூரிலும், மயிலாடுதுறையிலும் ஸ்கூல் படித்தவர். இவரும், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து போஸ்டல் ஆடிட் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்தார். 'மாதச் சம்பளம் தவிர உபரிsயாக கொஞ்சம் வருவாய் வந்தால், குடும்பப் பராமரிப்புக்கு உதவியாக இருக்குமே' என்று பத்திரிகைகளில் கதைகள் எழுதத் துவங்கினார். "நடக்காத கல்யாணம்" என்ற இவரது முதல் சிறுகதை 1948ல் கல்கியில் வெளியானது. தொடர்ந்து கல்கியிலும், வெள்ளிமணியிலும் கதைகள் வெளியாயின..அடுத்து குமுதத்துக்கு ஒரு கதை எழுதி எடுத்துக் கொண்டு ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் வீட்டுக்கே போய்விட்டார். அங்கே இருந்த ஒரு இளைஞர், என்னவென்று விசாரிக்க, இவர் குமுதத்துக்கு கதை கொடுக்க வந்திருப்பதாக சொல்லவும், அவர் கதையை வாங்கிக்கொண்டு வேறு ஏதும் பேசாமல் அனுப்பி வைத்துவிட்டார். ஆனால், அந்த இளைஞர்தான் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்பது அப்போது பால்யூவுக்குத் தெரிந்திருக்கவில்லை. 'தாம்பத்யம்' என்ற அந்தச் சிறுகதை 1948 டிசம்பரில் அட்டைப்படக் கதையாக வெளியானது. இப்படித்தான் பால்யூ குமுதத்தில் என்டிரி ஆனார். அதன் பிறகு 1999 வரை அவரது இன்னிங்ஸ் தொடர்ந்தது..விடுமுறைநாட்களில் அவர் வீட்டுக்குப் போய் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது அனுபவங்களை கதைபோல சுவாரசியமாகச் சொல்லுவார். இளம் பத்திரிகையாளர்களுக்கு ஜர்னலிசம் வகுப்பில் கூட அதையெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த பால்யூவின் செய்தி உணர்வினை பரிசோதிக்க குமுதம் ஆசிரியர் குழுவினர் ஒரு சுவாரசியமான துணுக்குச் செய்தியை எழுதித் தரச்சொல்லி ஒரு டெஸ்ட் வைத்தார்களாம். தன் அலுவலக நண்பர் சொன்ன மிக வித்தியாசமான விஷயம் ஒன்று இவருக்கு ஞாபகம் வந்தது. வடாற்காடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு புரோகிதர், வீட்டில் குதிரை வளர்த்தார். அவர் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு புரோகிதம் செய்துவைக்க, தனது குதிரையில்தான் செல்வார். இந்தத் தகவலை எழுதிக்கொடுக்க, அது குமுதத்தில் பிரசுரமானது..இந்தத் தகவலை எழுதும்போது எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒரு இளைஞர், அமரர் கல்கியை சந்தித்து வேலை கேட்டாராம். அவரது எழுத்துத் திறமையை பரிசோதிக்க விரும்பிய கல்கி, "ஒரு சுவாரசியமான துணுக்கு எழுது பார்க்கலாம்" என்று சொன்னாராம். அந்த இளைஞர், " சென்னைக்கு வரும் வெளியூர்வாசிகள், எழும்பூர் ரயில் நிலையம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் திண்டாடவேண்டாம்; அது கல்கி அலுவலகத்துக்கு எதிரில்தான் இருக்கிறது" என்று எழுதிக் கொடுக்க, 'சோமாஸ்காந்தன்' என்ற அந்த இளைஞருக்கு கல்கி ஆசிரியர் இலாக்காவில் வேலை கிடைத்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?.பால்யூவின் சமூகத் தொடர்புகள் மிகவும் பரந்து பட்டது. "அரசியல், இலக்கியம், பத்திரிகை, சமூக சேவை, சட்டம் மற்றும் நீதித்துறை என்று அவருக்குத் தெரியாத முக்கியஸ்தர்களே கிடையாது" என்று சொல்லலாம். ஆரம்பகாலத்தில், பல சமயங்களில், நான் பேட்டி காணவேண்டிய நபர்களின் தொலைபேசி எண்களை அவரிடமிருந்துதான் கேட்டுப் பெறுவேன். சில சமயங்களில் நான் பேட்டிக்குச் செல்வதற்கு முன்பாக அவரை டெலிபோன் செய்து என்னைப் அந்தப் பிரமுகருக்கு அறிமுகப்படுத்தும்படி சொல்வேன். அவரது அறிமுகத்துடன் சென்றால், போகிற இடத்தில் கிடைக்கும் வரவேற்பும் நன்றாக இருக்கும்; போகிற வேலையும் சுலபமாக முடியும். எந்த நேரத்தில் என்ன உதவி கேட்டாலும், தயங்காமல் செய்யக்கூடியவர். அல்லது யார் மூலமாக அந்த உதவியை பெறலாம் என வழி காட்டுவார்..அவர் பிரபலமானவர்களை பேட்டி கண்டு எழுதுவது தவிர, அவர்களை சந்திக்கச் செல்லும்போது அந்த வீடு, அலுவலகத்தை நுட்பமான, புதுமையான விஷயங்களை கவனித்து, பிரபலங்கள் பற்றிய சுவையான துணுக்குத் தகவல்களையும் கூட எழுதிக் கொடுப்பார். அவ்வளவு ஏன்? "பால்யூ பார்த்தது" என்ற தலைப்பிலேயே வாராவாரம் படு சுவாரசியமாக அவர் விஷயங்களை கொடுத்து வந்ததை மறக்கமுடியுமா?.இன்று பத்திரிகைகளில் பல்துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பேட்டி கண்டு, தொடராக வெளியிடுவது சகஜமான ஒன்று. ஆனால், இந்த வகையில் முன்னோடி பால்யூதான்! ஏவி. மெய்யப்ப செட்டியாரை பேட்டி கண்டு, அவரது வாழ்க்கை அனுபவங்களை தொடராக எழுதினார். சுமார் ஆறு மாதம் வெளியான அந்தத் தொடர், பின்னர் புத்தகமாக வெளியானது. ஏவி.எம். நிறுவனம், தனது பொன்விழாவினை கோலாகலமாக கலைஞர் தலைமையில் கொண்டாடியபோது, இதனை நன்றியோடு நினைவு கூர்ந்து பால்யூவுக்கு ஷீல்டு கொடுத்து கௌரவித்தார்கள்..ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவரை, ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுத வைப்பது சாத்தியமா? கலைஞர் கருணாநிதி குமுதத்தில் 'ரோமாபுரிப் பாண்டியன்' என்ற தொடர்கதையை 90 வாரங்கள் எழுதினார். அதன் பிறகு வாசகர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதிலளித்தார். முதலமைச்சர் கலைஞர் குமுதத்தில் எழுதினால் நன்றாக இருக்கும்" என ஆசிரியர் எஸ்.ஏ.பி. சொன்னது முதல், தொடர்கதை எழுதி முடித்தது 15 வாரங்கள் கேள்விகளுக்கு பதிலளித்தது வரையில் பால்யூவின் பங்களிப்பு எத்தனை சவாலானது, சங்கடமானது, சாமர்த்தியமானது, சந்தோஷமானது என்பது அவருக்கும், அன்றைய குமுதம் ஆசிரியர் குழுவினருக்கும் நன்றாகவே தெரியும். அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக பால்யூவுக்கு ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கிக்கொடுத்ததாக நினைவு..மிகவும் புதுமையான, குறும்புத்தனமான ஐடியாக்களை செயல்படுத்தி கட்டுரைகள் எழுதுவது என்பது குமுதத்துக்கு அல்வா சாப்பிடுவது போல. பெரும்பாலும் அந்தக் கட்டுரைகளையெல்லாம் எழுதியவர் பால்யூதான். ஒரு வெகு சாமானியமான மனிதனை ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பிட வைப்பது, பிளாட்பாரத்தில் பத்திரிகைகளை அடுக்கி வைத்து, விற்பனைக்கு ஆள் இல்லாமல், ஒரு உண்டியை மட்டும் வைத்து பத்திரிக்கைக்கு உரிய காசை உண்டியில் போட்டுவிட்டு, பத்திரிகையை எடுத்துக் கொண்டு போகும்படிச் செய்து, அதை எட்ட இருந்து கவனித்து கட்டுரை எழுதுவது இதெல்லாம் சில உதாரணங்கள். அதேபோல அவர் ஏற்பாடு செய்த ஜெயலலிதா – கி.வ.ஜ, வாரியார் – எம்.ஆர். ராதா, உள்ளிட்ட பல அபூர்வ சந்திப்பு கட்டுரைகள் படு சுவாரசியமானவை. அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டவை. 'அடுத்த அபூர்வ சந்திப்பு ஜோடி யார்?' என வாசகர்களின் பிளட் பிரஷரை எகிற வைத்தவை அவை. ஆகவேதான் இப்போது அந்த அபூர்வ சந்திப்புகள் மறுபிரசுரம் ஆகின்றன..சில பேட்டிக் கட்டுரைகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும். சம்மந்தப்பட்டவர்கள் காச் மூச் என்று சத்தம் போடுவார்கள். குமுதம் ஒரு கோட்டை. இந்த சத்தமெல்லாம் அங்கே எடுபடாது. ஆனால் குமுதத்தின் வெளி உலகத் தொடர்பு முகமான பால்யூதான் அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு முறை கண்ணதாசனுக்குப் பின் அரசவைக் கவிஞர்கள் சரியாக அமையவில்லை என்ற கருத்தில் ஒரு கட்டுரை வெளியானதும், அப்போதைய அரசவைக் கவிஞரான புலமைப் பித்தனுக்கு வந்ததே கோபம். தன் வீட்டுக்கு பால்யூவை வரச்சொல்லி, சீறினார் அந்த சீனியர் கவிஞர். உணர்ச்சி வசப்படாமல், பொறுமை காத்து, நிலைமையை சமாளித்தார். சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று சந்தித்த அனுபவத்தைச் சொன்னபோது, பால்யூவை எடிட்டர் மகிழ்ந்து பாராட்டினார்.."எந்த ஒரு அசைன்மென்ட்டைக் கொடுத்தாலும், அதை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை" என்ற வெறியுடன் பணியாற்றியவர். இந்தக் காலம் போல வாகனப் போக்குவரத்து வசதி, மொபைல் போன், இன்டர்நெட் என எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் அவர் எழுதியவை பிரமிப்பூட்டுபவை. எந்த நேரத்தில் என்ன மாதிரியான ஐடியாவைக் கொடுத்து எழுதச் சொல்லுவார்கள் என்றே தெரியாதாம். ஒரு நாள் திடீரென்று கூப்பிட்டு, "வெண்கலக் கடையில் யானை புகுந்தா மாதிரி" என்று சொல்வார்கள் இல்லையா? நிஜமாகவே ஒரு வெண்கலக் கடைக்குள்ளே ஒரு யானை புகுந்தால் எப்படி இருக்கும்? இந்த அசைன்மென்ட்டை பால்யூ தலையில் கட்டிவிட்டார்கள். எந்த யானைப்பாகன், தன் யானையை வெண்கலக் கடைக்குள்ளே புகுவதற்கு ஒப்புக்கொள்வான்? எந்த வெண்கலக் கடைக்காரர் தன் கடைக்குள்ளே யானை வருவதற்கு சம்மதிப்பார்? ஆனால், இந்த ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தி, அந்த அனுபவத்தை எழுதினார் பால்யூ..திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் அங்கிருந்த யானைப்பாகனிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் முதலில் மறுத்தாலும், கடைசியில், "எந்த கடைக்காரராவது ஒப்புக்கொண்டால், தான் ரெடி" என்றார். பக்கத்திலேயே ஒரு பாத்திரக் கடையில் வெண்கலப் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் இவருக்கு ஒரே சந்தோஷம். கடைக்காரரிடம் விஷயத்தைச் சொன்னதும் முதலில் மறுப்பு. குமுதம் பெயர், பவ்யமான பேச்சு இவற்றின் பயனாகவும், "களேபரம் ஒன்றும் நிகழாமல் பாகன் பார்த்துக் கொள்வார்" என்ற உறுதி மொழியின்பேரிலும் கடைக்காரரையும் ஒரு மாதிரி சரிகட்டிவிட்டார். யானையுடன் பாகன் வெண்கலக் கடைக்கு வந்துவிட்டார். ஏனோ தெரியவில்லை யானை கடைக்குள் போக மறுத்தது. பாகன் அதன் பாஷையில் யானையோடு ஏதோ பேச, யானை தன் வலது முன்னக் காலை எடுத்து கடைக்குள்ளே வைத்தது. அதன் கால் பட்டு நசுங்காமல் பாத்திரங்களை தள்ளி வைத்தார் கடைக்காரர். தும்பிக்கையால் ஒரு வெண்கல குண்டானைத் தூக்கியது யானை. ஆச்சரியம் தாங்காமல், அதை உடன் வந்த புகைப்படக்காரர் கிளிக்கினார். ஒரு வழியாக அசம்பாவிதம் ஏதுமில்லாமல் அசைன்மென்ட் நல்லபடியாக முடிந்தது. பாகனுக்கு பணம் கொடுத்துவிட்டு, கடைக்காரருக்கு மனதார நன்றி சொல்லிவிட்டு, எடிட்டரிடம் தன் வெற்றி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளப் புறப்பட்டார் பால்யூ!.அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!.(தொடரும்)
ஒரு நிருபரின் டைரி – 33.எஸ். சந்திரமௌலி.பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ.வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள். வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி இரண்டு புனைப்பெயர்கள் வைத்துக் கொள்வார்கள். பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் சொந்தப் பெயரில்தான் எழுதுவார்கள். சிலர் ஓரிரு புனைப்பெயர்களில் எழுதுவதுண்டு. இதற்கெல்லாம் விதி விலக்கு குமுதம். அங்கே பணியாற்றிய எழுத்தாளர்கள் ரா.கி. ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ர.சுந்தரேசன், 'புனிதன்' என்கிற சண்முக சுந்தரம் என அனைவருமே குறைந்தது அரை டஜன் புனைப்பெயர்களில் எழுதுவார்கள். இந்த பாலிசி, அங்கே பத்திரிகையாளரான என்.பாலசுப்ரமணியத்துக்கும் பொருந்தும். அவருடைய முதன்மையான புனைப்பெயர் பால்யூ. அதைத் தவிர ஜடாதரன், மங்களம் ஆத்ரேயி, துருவன், மனிதன், ராஜ்பால், வம்பானந்தா, நட்டுவாக்கலி நாச்சிமுத்து என்று பல பெயர்களில் ஆரம்ப காலத்தில் சிறுகதைகள், அதன் பிறகு பேட்டிகள், கட்டுரைகள், துணுக்குகள், வம்புகள் இன்னபிறவெல்லாம் எழுதுவார். ஆனாலும் குமுதம் வாசகர்களுக்கு 'பால்யூ' என்ற பெயர்தான் மிகவும் பரிச்சயம்..'பால்யூ' என்பது சற்று வித்தியாசமான பெயர். எனவே, சென்னை கே.கே.நகர் மத்திய பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த அவரை முதல் முறை நேரில் சந்தித்தபோது "பால்யூ என்ற பெயரை ஏன் வைத்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். ."கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான். என் பேர் பாலசுப்ரமணியம். இந்தப் பெயர் உள்ளவர்களை சுருக்கமாக 'பாலு' என்றுதானே கூப்பிடுவார்கள்? ஆங்கிலத்தில் Balu வை Bal-u ஆக்கிவிட்டேன். அதுதான் தமிழில் பால்யூ" என்று விளக்கம் கொடுத்தார். திருமதி பால்யூவின் பெயர் மங்களம். கணவரைப் போலவே அவரும் கனிவாகப் பேசுவார். அன்புடன் உபசரிப்பார். எல்லா பத்திரிகைகளியும் படித்துவிடுவார். பார்க்கும்போதே, "இந்த வாரம் இது பத்தி எழுதி இருக்கியே! படித்தேன்!" என்பார். பால்யூவின் புனைப்பெயர்களில் ஒன்றான மங்களம் ஆத்ரேயி இவரது உபயம்தான்!.பால்யூ திருவாரூர்க்காரர். திருவாரூரிலும், மயிலாடுதுறையிலும் ஸ்கூல் படித்தவர். இவரும், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து போஸ்டல் ஆடிட் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்தார். 'மாதச் சம்பளம் தவிர உபரிsயாக கொஞ்சம் வருவாய் வந்தால், குடும்பப் பராமரிப்புக்கு உதவியாக இருக்குமே' என்று பத்திரிகைகளில் கதைகள் எழுதத் துவங்கினார். "நடக்காத கல்யாணம்" என்ற இவரது முதல் சிறுகதை 1948ல் கல்கியில் வெளியானது. தொடர்ந்து கல்கியிலும், வெள்ளிமணியிலும் கதைகள் வெளியாயின..அடுத்து குமுதத்துக்கு ஒரு கதை எழுதி எடுத்துக் கொண்டு ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் வீட்டுக்கே போய்விட்டார். அங்கே இருந்த ஒரு இளைஞர், என்னவென்று விசாரிக்க, இவர் குமுதத்துக்கு கதை கொடுக்க வந்திருப்பதாக சொல்லவும், அவர் கதையை வாங்கிக்கொண்டு வேறு ஏதும் பேசாமல் அனுப்பி வைத்துவிட்டார். ஆனால், அந்த இளைஞர்தான் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்பது அப்போது பால்யூவுக்குத் தெரிந்திருக்கவில்லை. 'தாம்பத்யம்' என்ற அந்தச் சிறுகதை 1948 டிசம்பரில் அட்டைப்படக் கதையாக வெளியானது. இப்படித்தான் பால்யூ குமுதத்தில் என்டிரி ஆனார். அதன் பிறகு 1999 வரை அவரது இன்னிங்ஸ் தொடர்ந்தது..விடுமுறைநாட்களில் அவர் வீட்டுக்குப் போய் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது அனுபவங்களை கதைபோல சுவாரசியமாகச் சொல்லுவார். இளம் பத்திரிகையாளர்களுக்கு ஜர்னலிசம் வகுப்பில் கூட அதையெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த பால்யூவின் செய்தி உணர்வினை பரிசோதிக்க குமுதம் ஆசிரியர் குழுவினர் ஒரு சுவாரசியமான துணுக்குச் செய்தியை எழுதித் தரச்சொல்லி ஒரு டெஸ்ட் வைத்தார்களாம். தன் அலுவலக நண்பர் சொன்ன மிக வித்தியாசமான விஷயம் ஒன்று இவருக்கு ஞாபகம் வந்தது. வடாற்காடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு புரோகிதர், வீட்டில் குதிரை வளர்த்தார். அவர் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு புரோகிதம் செய்துவைக்க, தனது குதிரையில்தான் செல்வார். இந்தத் தகவலை எழுதிக்கொடுக்க, அது குமுதத்தில் பிரசுரமானது..இந்தத் தகவலை எழுதும்போது எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒரு இளைஞர், அமரர் கல்கியை சந்தித்து வேலை கேட்டாராம். அவரது எழுத்துத் திறமையை பரிசோதிக்க விரும்பிய கல்கி, "ஒரு சுவாரசியமான துணுக்கு எழுது பார்க்கலாம்" என்று சொன்னாராம். அந்த இளைஞர், " சென்னைக்கு வரும் வெளியூர்வாசிகள், எழும்பூர் ரயில் நிலையம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் திண்டாடவேண்டாம்; அது கல்கி அலுவலகத்துக்கு எதிரில்தான் இருக்கிறது" என்று எழுதிக் கொடுக்க, 'சோமாஸ்காந்தன்' என்ற அந்த இளைஞருக்கு கல்கி ஆசிரியர் இலாக்காவில் வேலை கிடைத்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?.பால்யூவின் சமூகத் தொடர்புகள் மிகவும் பரந்து பட்டது. "அரசியல், இலக்கியம், பத்திரிகை, சமூக சேவை, சட்டம் மற்றும் நீதித்துறை என்று அவருக்குத் தெரியாத முக்கியஸ்தர்களே கிடையாது" என்று சொல்லலாம். ஆரம்பகாலத்தில், பல சமயங்களில், நான் பேட்டி காணவேண்டிய நபர்களின் தொலைபேசி எண்களை அவரிடமிருந்துதான் கேட்டுப் பெறுவேன். சில சமயங்களில் நான் பேட்டிக்குச் செல்வதற்கு முன்பாக அவரை டெலிபோன் செய்து என்னைப் அந்தப் பிரமுகருக்கு அறிமுகப்படுத்தும்படி சொல்வேன். அவரது அறிமுகத்துடன் சென்றால், போகிற இடத்தில் கிடைக்கும் வரவேற்பும் நன்றாக இருக்கும்; போகிற வேலையும் சுலபமாக முடியும். எந்த நேரத்தில் என்ன உதவி கேட்டாலும், தயங்காமல் செய்யக்கூடியவர். அல்லது யார் மூலமாக அந்த உதவியை பெறலாம் என வழி காட்டுவார்..அவர் பிரபலமானவர்களை பேட்டி கண்டு எழுதுவது தவிர, அவர்களை சந்திக்கச் செல்லும்போது அந்த வீடு, அலுவலகத்தை நுட்பமான, புதுமையான விஷயங்களை கவனித்து, பிரபலங்கள் பற்றிய சுவையான துணுக்குத் தகவல்களையும் கூட எழுதிக் கொடுப்பார். அவ்வளவு ஏன்? "பால்யூ பார்த்தது" என்ற தலைப்பிலேயே வாராவாரம் படு சுவாரசியமாக அவர் விஷயங்களை கொடுத்து வந்ததை மறக்கமுடியுமா?.இன்று பத்திரிகைகளில் பல்துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பேட்டி கண்டு, தொடராக வெளியிடுவது சகஜமான ஒன்று. ஆனால், இந்த வகையில் முன்னோடி பால்யூதான்! ஏவி. மெய்யப்ப செட்டியாரை பேட்டி கண்டு, அவரது வாழ்க்கை அனுபவங்களை தொடராக எழுதினார். சுமார் ஆறு மாதம் வெளியான அந்தத் தொடர், பின்னர் புத்தகமாக வெளியானது. ஏவி.எம். நிறுவனம், தனது பொன்விழாவினை கோலாகலமாக கலைஞர் தலைமையில் கொண்டாடியபோது, இதனை நன்றியோடு நினைவு கூர்ந்து பால்யூவுக்கு ஷீல்டு கொடுத்து கௌரவித்தார்கள்..ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவரை, ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுத வைப்பது சாத்தியமா? கலைஞர் கருணாநிதி குமுதத்தில் 'ரோமாபுரிப் பாண்டியன்' என்ற தொடர்கதையை 90 வாரங்கள் எழுதினார். அதன் பிறகு வாசகர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதிலளித்தார். முதலமைச்சர் கலைஞர் குமுதத்தில் எழுதினால் நன்றாக இருக்கும்" என ஆசிரியர் எஸ்.ஏ.பி. சொன்னது முதல், தொடர்கதை எழுதி முடித்தது 15 வாரங்கள் கேள்விகளுக்கு பதிலளித்தது வரையில் பால்யூவின் பங்களிப்பு எத்தனை சவாலானது, சங்கடமானது, சாமர்த்தியமானது, சந்தோஷமானது என்பது அவருக்கும், அன்றைய குமுதம் ஆசிரியர் குழுவினருக்கும் நன்றாகவே தெரியும். அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக பால்யூவுக்கு ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கிக்கொடுத்ததாக நினைவு..மிகவும் புதுமையான, குறும்புத்தனமான ஐடியாக்களை செயல்படுத்தி கட்டுரைகள் எழுதுவது என்பது குமுதத்துக்கு அல்வா சாப்பிடுவது போல. பெரும்பாலும் அந்தக் கட்டுரைகளையெல்லாம் எழுதியவர் பால்யூதான். ஒரு வெகு சாமானியமான மனிதனை ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பிட வைப்பது, பிளாட்பாரத்தில் பத்திரிகைகளை அடுக்கி வைத்து, விற்பனைக்கு ஆள் இல்லாமல், ஒரு உண்டியை மட்டும் வைத்து பத்திரிக்கைக்கு உரிய காசை உண்டியில் போட்டுவிட்டு, பத்திரிகையை எடுத்துக் கொண்டு போகும்படிச் செய்து, அதை எட்ட இருந்து கவனித்து கட்டுரை எழுதுவது இதெல்லாம் சில உதாரணங்கள். அதேபோல அவர் ஏற்பாடு செய்த ஜெயலலிதா – கி.வ.ஜ, வாரியார் – எம்.ஆர். ராதா, உள்ளிட்ட பல அபூர்வ சந்திப்பு கட்டுரைகள் படு சுவாரசியமானவை. அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டவை. 'அடுத்த அபூர்வ சந்திப்பு ஜோடி யார்?' என வாசகர்களின் பிளட் பிரஷரை எகிற வைத்தவை அவை. ஆகவேதான் இப்போது அந்த அபூர்வ சந்திப்புகள் மறுபிரசுரம் ஆகின்றன..சில பேட்டிக் கட்டுரைகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும். சம்மந்தப்பட்டவர்கள் காச் மூச் என்று சத்தம் போடுவார்கள். குமுதம் ஒரு கோட்டை. இந்த சத்தமெல்லாம் அங்கே எடுபடாது. ஆனால் குமுதத்தின் வெளி உலகத் தொடர்பு முகமான பால்யூதான் அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு முறை கண்ணதாசனுக்குப் பின் அரசவைக் கவிஞர்கள் சரியாக அமையவில்லை என்ற கருத்தில் ஒரு கட்டுரை வெளியானதும், அப்போதைய அரசவைக் கவிஞரான புலமைப் பித்தனுக்கு வந்ததே கோபம். தன் வீட்டுக்கு பால்யூவை வரச்சொல்லி, சீறினார் அந்த சீனியர் கவிஞர். உணர்ச்சி வசப்படாமல், பொறுமை காத்து, நிலைமையை சமாளித்தார். சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சென்று சந்தித்த அனுபவத்தைச் சொன்னபோது, பால்யூவை எடிட்டர் மகிழ்ந்து பாராட்டினார்.."எந்த ஒரு அசைன்மென்ட்டைக் கொடுத்தாலும், அதை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை" என்ற வெறியுடன் பணியாற்றியவர். இந்தக் காலம் போல வாகனப் போக்குவரத்து வசதி, மொபைல் போன், இன்டர்நெட் என எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் அவர் எழுதியவை பிரமிப்பூட்டுபவை. எந்த நேரத்தில் என்ன மாதிரியான ஐடியாவைக் கொடுத்து எழுதச் சொல்லுவார்கள் என்றே தெரியாதாம். ஒரு நாள் திடீரென்று கூப்பிட்டு, "வெண்கலக் கடையில் யானை புகுந்தா மாதிரி" என்று சொல்வார்கள் இல்லையா? நிஜமாகவே ஒரு வெண்கலக் கடைக்குள்ளே ஒரு யானை புகுந்தால் எப்படி இருக்கும்? இந்த அசைன்மென்ட்டை பால்யூ தலையில் கட்டிவிட்டார்கள். எந்த யானைப்பாகன், தன் யானையை வெண்கலக் கடைக்குள்ளே புகுவதற்கு ஒப்புக்கொள்வான்? எந்த வெண்கலக் கடைக்காரர் தன் கடைக்குள்ளே யானை வருவதற்கு சம்மதிப்பார்? ஆனால், இந்த ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தி, அந்த அனுபவத்தை எழுதினார் பால்யூ..திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் அங்கிருந்த யானைப்பாகனிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் முதலில் மறுத்தாலும், கடைசியில், "எந்த கடைக்காரராவது ஒப்புக்கொண்டால், தான் ரெடி" என்றார். பக்கத்திலேயே ஒரு பாத்திரக் கடையில் வெண்கலப் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் இவருக்கு ஒரே சந்தோஷம். கடைக்காரரிடம் விஷயத்தைச் சொன்னதும் முதலில் மறுப்பு. குமுதம் பெயர், பவ்யமான பேச்சு இவற்றின் பயனாகவும், "களேபரம் ஒன்றும் நிகழாமல் பாகன் பார்த்துக் கொள்வார்" என்ற உறுதி மொழியின்பேரிலும் கடைக்காரரையும் ஒரு மாதிரி சரிகட்டிவிட்டார். யானையுடன் பாகன் வெண்கலக் கடைக்கு வந்துவிட்டார். ஏனோ தெரியவில்லை யானை கடைக்குள் போக மறுத்தது. பாகன் அதன் பாஷையில் யானையோடு ஏதோ பேச, யானை தன் வலது முன்னக் காலை எடுத்து கடைக்குள்ளே வைத்தது. அதன் கால் பட்டு நசுங்காமல் பாத்திரங்களை தள்ளி வைத்தார் கடைக்காரர். தும்பிக்கையால் ஒரு வெண்கல குண்டானைத் தூக்கியது யானை. ஆச்சரியம் தாங்காமல், அதை உடன் வந்த புகைப்படக்காரர் கிளிக்கினார். ஒரு வழியாக அசம்பாவிதம் ஏதுமில்லாமல் அசைன்மென்ட் நல்லபடியாக முடிந்தது. பாகனுக்கு பணம் கொடுத்துவிட்டு, கடைக்காரருக்கு மனதார நன்றி சொல்லிவிட்டு, எடிட்டரிடம் தன் வெற்றி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளப் புறப்பட்டார் பால்யூ!.அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!.(தொடரும்)