உலகக் குடிமகன் – 9.– நா.கண்ணன்.அமெரிக்கன் கல்லூரியில் ஓராண்டு பயிற்றுவித்ததும் மகிழ்வாக இருந்தது. நம் பேரைச் சொல்லவும் சில மாணவர்கள் இருப்பார்கள் என்னும் திருப்தி. எனது வகுப்பில் பயின்ற சில மாணவர்கள் பின்னால் பெரிய பிரபலங்களாக ஆகியிருக்கிறார்கள். உதாரணம், கராத்தே வீரர் ஹுசைன். இவர் கமலஹாசனுக்கு மெய்க்காப்பாளராக இருந்திருக்கிறார். சமையற்கலையில் விற்பன்னராகவும் தொலைக்காட்சியில் வந்திருக்கிறார். நான் வேலை வேண்டாம் என ஆய்வுலகில் கால் பதித்தபோது என்னிடம் பயின்ற ஜான் லூயி, பஷீர் இருவரும் மூலக்கூறு உயிரியல் துறையில் பட்டம் பெற என்னுடன் மதுரைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். அவர்கள் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டனர்..எனக்குப் பெற்றோர் இல்லாதக் குறையைப் போக்க ஜே.சி.பி. ஓர் அவதாரம் எடுக்கிறார். நல்ல அவதாரம்தான். ஆனால், எல்லா பெற்றோரும் செய்யும் அதே பிழையை ஜே.சி.பி.யும் செய்தார். அதுதான் பிள்ளைகளின் ஆசை என்னவென்று அறிந்து உதவுவது. அவருக்கு என் ஆசைகள் ஏதும் தெரியாது. தமிழின் பால் உள்ள காதல் தெரியாது. ஆய்வு செய்து வெளிநாடு எல்லாம் செல்ல வேண்டுமென்ற என் ஆசை தெரியாது. அவர் எதிர்பார்த்தது நான் அவர் ஆசையை நிறைவேற்றுவதுதான். இது எவ்வளவு கொடூரம்..ஆனால், நாம் இதையறியாமல் பெற்றோர் எனும் கோதாவில் நன்மை செய்கிறோம் என நினைத்து தவறு செய்கிறோம். நான் அறிந்தவரை தமிழ் கூறும் நல்லுலகின் பெற்றோர்கள் பிள்ளைகளை டாக்டர் ஆக்கிப் பார்க்க விரும்புகின்றனர். காரணம், மருத்துவம் நல்ல சம்பாத்தியம் தரும் எனும் நம்பிக்கை. ஆனால் மருத்துவன் ஆவதென்ன அவ்வளவு எளிதா? தமிழ் மரபுப்படி, ஒரு வைத்தியன் என்பவன்,.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்..நோய்களோடு உறவாடும் மனோதிடம் வேண்டும். சமீபத்திய கொரோனா பெருந்தொற்றில் பல மருத்துவர்கள் உயிர் இழந்தனர். அதற்கு மேல் வருகின்ற நோயாளியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் குடும்ப வைத்தியர் என்று ஒருவர் இருப்பார். அவருக்கு அக்குடும்பத்தின் ஜாதகமே தெரியும். அது அவசியம். ஏனெனில் நோயின் காரணம் குடும்ப மரபில் இருக்கலாம் அல்லது வாழும் சூழலிலிருந்து வரலாம். அதற்காக சதா படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தெரிந்தால்தான் நோயைத் தணிக்க முடியும்.நம் குழந்தைகளிடம் இத்திறன் இருக்கிறதா? என சோதித்துப் பார்ப்பதே இல்லை. இதை நான் என்று உணர்ந்தேன் எனில், இந்தியாவில் எனக்குப் படிப்பு இருந்தும் பிற சமூகக் காரணங்களால் மருத்துவம் படிக்க முடியாத வருத்தத்தை என் பெண் டாக்டராகிக் காட்டி நிறைவேற்றுவாள் என எதிர்பார்த்து அவளிடம் சொன்னேன். ஜெர்மனியில் மருத்துவம் படிக்க திறமை இருந்தால் போதும், வேறு சமூகக் காரணங்கள் வேண்டாம்..ஆனால், அவள் பதிலுக்குச் சொன்னாள், மருத்துவராக வேண்டும் என்பது உங்கள் கனவு. அது என் கனவில்லை. நான் அரசியல் படிக்கப் போகிறேன். ஒரு மருத்துவருக்கு இருக்கும் பொறுமையோ, அறுவைச் சிகிச்சை செய்யும் ஆசையோ என்னிடமில்லை. எனவே உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது. ஆனால் என் ஆசைக்கு உழைப்பேன் என்றாள். எவ்வளவு தெளிவு. அதேபோல் அவள் பன்னாட்டு அரசியலைப் பாடமாக எடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய வேலைக்குச் சேர்ந்தாள்..தமிழர்கள் தம் பிள்ளைகளை மருத்துவராக்க எவ்வளவோ கஷ்டப்படுகின்றனர். இல்லையெனில், பிள்ளை இன்ஜினீயர் ஆக வேண்டும். இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க வேண்டும். இவையே பிரதான கனவு. உலகில் எத்தனை வளர்ச்சி காண்கிறோம். எத்தனை புதிய துறைகள் வந்திருக்கின்றன. ஜெர்மனியில் பட்டம் பெற்றால்தான் மதிப்பு என்றில்லை. இங்கு ஒரு கார் மெக்கானிக் என்பவர், பேராசிரியரை விட முக்கியமானவராக உள்ளார். கொரியாவில் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் கிரேன் இயக்குநருக்கு ஒரு பேராசிரியரை விடச் சம்பளம் அதிகம். ஆயினும் மலேசியா போன்ற நாடுகளில் பெண் பிள்ளை என்றால் தமிழ் ஆசிரியையாக வேண்டும். பையன் என்றால் இன்ஜினீயர் ஆக வேண்டும். அவ்வளவுதான்..ஜே.சி.பி ஒரு நாள் கூட என்னை அழைத்து என் ஆசைகள் என்ன என்று கேட்டதில்லை. அவருக்குக் கட்டுப்படும் ஒரு நாய் போல் நானிருக்க வேண்டுமென எதிர்பார்த்தார். அவர் ஒரு ரஷ்ய விஞ்ஞானியை மேற்கோள் காட்டுவார். பாலோவ் என்பது அவர் பெயர். அவர்தான் விலங்குகளைப் பழக்கப் பரிசு அல்லது தண்டனை எனும் முறையைக் கொண்டு வந்தார். நாய் வளர்ப்பவர் ஆசையை நாய் நிறைவேற்றினால் பரிசுண்டு. அதே நேரத்தில் அவர் ஆசைக்கு எதிராகச் செயல்பட்டால் தண்டனையுண்டு. இதைப் பழக்கப்படுத்துதல் என்பர். உதாரணமாக மணி அடித்து நாய்க்கு உணவு வைத்துப் பழக்கினால், பின் சும்மா மணி அடித்தாலே நாய் வாயில் எச்சி ஊறி உண்ணக் காத்திருக்கும். இந்த அணுகுமுறையை என்னிடம் காட்டினார். அவர் 'விலங்குப் பண்ணை' எனும் நூலில் வருவது போல் என் மேல் சோதனை நடத்தினாரா? எனத் தெரியவில்லை. என்னைப் பிச்சைக்காரர்களிடம் அனுப்பினார். பின் மணியடித்து அழைத்துத் திட்டுவார். ஒரு நிலையில் மணி அடித்தால் குலைநடுங்கும். அவர் ஏதோ உளவியல் பாதிப்பில் இருந்திருக்கிறார், ஆனால் நான் அவரிடம் மாட்டிக்கொண்டு பலியானேன். அப்போது எனக்கு ஒரே ஆறுதல் சாம் ஜார்ஜ் எனும் சகா. அவர்தான் ஏதாவது ஜாலியாகப் பேசி, என்னைக் கவிதை எழுத வைத்து, அவரது புல்லட் மோட்டர் பைக்கில் என்னை மதுரை மேம்பாலம் வழியாக அழைத்துச் சென்று ஆறுதல்படுத்துவார். அவர் இல்லையெனில் நான் பைத்தியமாகி இருப்பேன். இவர் எனக்கு அனுகூலமாக இருக்கிறார் என்பதறிந்து அதற்காகவும் தண்டிப்பார். ஒரு நிலையில் அங்கு வேலை பார்க்கும் சேவகருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாத அளவிற்கு ஆக்கிவிட்டார். இரவில் கனவில் உளற ஆரம்பித்தேன். என் சகோதரிகளுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. 'வேலையொன்றும் முக்கியமில்லை, நீ எங்கள் ஒரே தம்பி. நீ மகிழ்வாக இருப்பதே எங்கள் இன்பம்' என்று அழுந்தச் சொல்லிவிட்டனர்..எனவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக நான் வேலையை விட்டு விட்டு ஆய்வுலகில் நுழைய ஏற்பாடுகள் செய்தேன். முதுகலைப் பட்டம் இருந்தாலும் நாம் மேலைநாடு போய் முனைவர் பட்டப் படிப்பிற்குச் சேரலாம். ஆனால், அதற்கு நிறைய நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கணிதத்திறன் அறிய சில தேர்வுகள். ஆங்கில ஞானமறிய சில தேர்வுகள். பிறகு மேலைநாடு செல்வதற்குப் பிணையாக தமிழகத்தில் சொத்துபத்து காட்ட வேண்டும். நான் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்..ஒருவர் என்னை ஜிப்பர் மருத்துக் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி எங்களிடம் 5000 ரூபாய் கேட்டார். அன்றையப் பொருளாதாரச் சூழலில் 5000 ரூபாய் என்பது பெரிய காசு. அன்றோடு நான் மருத்துவக் கனவை விட்டவன்தான். அப்படி இருக்கும் போது அமெரிக்கா செல்லப் பிணையாக நான் எதை வைப்பேன்?.1970 களில் அமெரிக்கா ஓர் பெருங்கனவு. எல்லோரும் அமெரிக்கா செல்ல ஆசைப்பட்டனர். கட்டற்ற சுதந்திரம், ஆசைப்பட்டபடி வாழ வாய்ப்புகள் என அமெரிக்கா எல்லோரையும் வெறியூட்டியது. இதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, எவ்வளவு தடைகள் போட முடியுமோ அவ்வளவு போட்டுப் பார்த்தது. சென்னையிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் பெரிய வரிசை இருக்கும். முன்னிரவே சென்று காத்திருக்க வேண்டும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து மிரண்டு விட்டேன். கஷ்டமோ நஷ்டமோ நான் இந்தியாவில் ஓர் முனைவர் பட்டம் பெற்று பின் அயலகம் செல்லலாம் என முடிவெடுத்தேன். அதுவே பொருளாதார ரீதியில் சரியாகப்பட்டது. என் படையெடுப்பு மதுரைப் பல்கலைக்கழகத்தை நோக்கி அமைந்தது..(தொடரும்)
உலகக் குடிமகன் – 9.– நா.கண்ணன்.அமெரிக்கன் கல்லூரியில் ஓராண்டு பயிற்றுவித்ததும் மகிழ்வாக இருந்தது. நம் பேரைச் சொல்லவும் சில மாணவர்கள் இருப்பார்கள் என்னும் திருப்தி. எனது வகுப்பில் பயின்ற சில மாணவர்கள் பின்னால் பெரிய பிரபலங்களாக ஆகியிருக்கிறார்கள். உதாரணம், கராத்தே வீரர் ஹுசைன். இவர் கமலஹாசனுக்கு மெய்க்காப்பாளராக இருந்திருக்கிறார். சமையற்கலையில் விற்பன்னராகவும் தொலைக்காட்சியில் வந்திருக்கிறார். நான் வேலை வேண்டாம் என ஆய்வுலகில் கால் பதித்தபோது என்னிடம் பயின்ற ஜான் லூயி, பஷீர் இருவரும் மூலக்கூறு உயிரியல் துறையில் பட்டம் பெற என்னுடன் மதுரைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். அவர்கள் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டனர்..எனக்குப் பெற்றோர் இல்லாதக் குறையைப் போக்க ஜே.சி.பி. ஓர் அவதாரம் எடுக்கிறார். நல்ல அவதாரம்தான். ஆனால், எல்லா பெற்றோரும் செய்யும் அதே பிழையை ஜே.சி.பி.யும் செய்தார். அதுதான் பிள்ளைகளின் ஆசை என்னவென்று அறிந்து உதவுவது. அவருக்கு என் ஆசைகள் ஏதும் தெரியாது. தமிழின் பால் உள்ள காதல் தெரியாது. ஆய்வு செய்து வெளிநாடு எல்லாம் செல்ல வேண்டுமென்ற என் ஆசை தெரியாது. அவர் எதிர்பார்த்தது நான் அவர் ஆசையை நிறைவேற்றுவதுதான். இது எவ்வளவு கொடூரம்..ஆனால், நாம் இதையறியாமல் பெற்றோர் எனும் கோதாவில் நன்மை செய்கிறோம் என நினைத்து தவறு செய்கிறோம். நான் அறிந்தவரை தமிழ் கூறும் நல்லுலகின் பெற்றோர்கள் பிள்ளைகளை டாக்டர் ஆக்கிப் பார்க்க விரும்புகின்றனர். காரணம், மருத்துவம் நல்ல சம்பாத்தியம் தரும் எனும் நம்பிக்கை. ஆனால் மருத்துவன் ஆவதென்ன அவ்வளவு எளிதா? தமிழ் மரபுப்படி, ஒரு வைத்தியன் என்பவன்,.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்..நோய்களோடு உறவாடும் மனோதிடம் வேண்டும். சமீபத்திய கொரோனா பெருந்தொற்றில் பல மருத்துவர்கள் உயிர் இழந்தனர். அதற்கு மேல் வருகின்ற நோயாளியைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் குடும்ப வைத்தியர் என்று ஒருவர் இருப்பார். அவருக்கு அக்குடும்பத்தின் ஜாதகமே தெரியும். அது அவசியம். ஏனெனில் நோயின் காரணம் குடும்ப மரபில் இருக்கலாம் அல்லது வாழும் சூழலிலிருந்து வரலாம். அதற்காக சதா படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தெரிந்தால்தான் நோயைத் தணிக்க முடியும்.நம் குழந்தைகளிடம் இத்திறன் இருக்கிறதா? என சோதித்துப் பார்ப்பதே இல்லை. இதை நான் என்று உணர்ந்தேன் எனில், இந்தியாவில் எனக்குப் படிப்பு இருந்தும் பிற சமூகக் காரணங்களால் மருத்துவம் படிக்க முடியாத வருத்தத்தை என் பெண் டாக்டராகிக் காட்டி நிறைவேற்றுவாள் என எதிர்பார்த்து அவளிடம் சொன்னேன். ஜெர்மனியில் மருத்துவம் படிக்க திறமை இருந்தால் போதும், வேறு சமூகக் காரணங்கள் வேண்டாம்..ஆனால், அவள் பதிலுக்குச் சொன்னாள், மருத்துவராக வேண்டும் என்பது உங்கள் கனவு. அது என் கனவில்லை. நான் அரசியல் படிக்கப் போகிறேன். ஒரு மருத்துவருக்கு இருக்கும் பொறுமையோ, அறுவைச் சிகிச்சை செய்யும் ஆசையோ என்னிடமில்லை. எனவே உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது. ஆனால் என் ஆசைக்கு உழைப்பேன் என்றாள். எவ்வளவு தெளிவு. அதேபோல் அவள் பன்னாட்டு அரசியலைப் பாடமாக எடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய வேலைக்குச் சேர்ந்தாள்..தமிழர்கள் தம் பிள்ளைகளை மருத்துவராக்க எவ்வளவோ கஷ்டப்படுகின்றனர். இல்லையெனில், பிள்ளை இன்ஜினீயர் ஆக வேண்டும். இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க வேண்டும். இவையே பிரதான கனவு. உலகில் எத்தனை வளர்ச்சி காண்கிறோம். எத்தனை புதிய துறைகள் வந்திருக்கின்றன. ஜெர்மனியில் பட்டம் பெற்றால்தான் மதிப்பு என்றில்லை. இங்கு ஒரு கார் மெக்கானிக் என்பவர், பேராசிரியரை விட முக்கியமானவராக உள்ளார். கொரியாவில் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் கிரேன் இயக்குநருக்கு ஒரு பேராசிரியரை விடச் சம்பளம் அதிகம். ஆயினும் மலேசியா போன்ற நாடுகளில் பெண் பிள்ளை என்றால் தமிழ் ஆசிரியையாக வேண்டும். பையன் என்றால் இன்ஜினீயர் ஆக வேண்டும். அவ்வளவுதான்..ஜே.சி.பி ஒரு நாள் கூட என்னை அழைத்து என் ஆசைகள் என்ன என்று கேட்டதில்லை. அவருக்குக் கட்டுப்படும் ஒரு நாய் போல் நானிருக்க வேண்டுமென எதிர்பார்த்தார். அவர் ஒரு ரஷ்ய விஞ்ஞானியை மேற்கோள் காட்டுவார். பாலோவ் என்பது அவர் பெயர். அவர்தான் விலங்குகளைப் பழக்கப் பரிசு அல்லது தண்டனை எனும் முறையைக் கொண்டு வந்தார். நாய் வளர்ப்பவர் ஆசையை நாய் நிறைவேற்றினால் பரிசுண்டு. அதே நேரத்தில் அவர் ஆசைக்கு எதிராகச் செயல்பட்டால் தண்டனையுண்டு. இதைப் பழக்கப்படுத்துதல் என்பர். உதாரணமாக மணி அடித்து நாய்க்கு உணவு வைத்துப் பழக்கினால், பின் சும்மா மணி அடித்தாலே நாய் வாயில் எச்சி ஊறி உண்ணக் காத்திருக்கும். இந்த அணுகுமுறையை என்னிடம் காட்டினார். அவர் 'விலங்குப் பண்ணை' எனும் நூலில் வருவது போல் என் மேல் சோதனை நடத்தினாரா? எனத் தெரியவில்லை. என்னைப் பிச்சைக்காரர்களிடம் அனுப்பினார். பின் மணியடித்து அழைத்துத் திட்டுவார். ஒரு நிலையில் மணி அடித்தால் குலைநடுங்கும். அவர் ஏதோ உளவியல் பாதிப்பில் இருந்திருக்கிறார், ஆனால் நான் அவரிடம் மாட்டிக்கொண்டு பலியானேன். அப்போது எனக்கு ஒரே ஆறுதல் சாம் ஜார்ஜ் எனும் சகா. அவர்தான் ஏதாவது ஜாலியாகப் பேசி, என்னைக் கவிதை எழுத வைத்து, அவரது புல்லட் மோட்டர் பைக்கில் என்னை மதுரை மேம்பாலம் வழியாக அழைத்துச் சென்று ஆறுதல்படுத்துவார். அவர் இல்லையெனில் நான் பைத்தியமாகி இருப்பேன். இவர் எனக்கு அனுகூலமாக இருக்கிறார் என்பதறிந்து அதற்காகவும் தண்டிப்பார். ஒரு நிலையில் அங்கு வேலை பார்க்கும் சேவகருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாத அளவிற்கு ஆக்கிவிட்டார். இரவில் கனவில் உளற ஆரம்பித்தேன். என் சகோதரிகளுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. 'வேலையொன்றும் முக்கியமில்லை, நீ எங்கள் ஒரே தம்பி. நீ மகிழ்வாக இருப்பதே எங்கள் இன்பம்' என்று அழுந்தச் சொல்லிவிட்டனர்..எனவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக நான் வேலையை விட்டு விட்டு ஆய்வுலகில் நுழைய ஏற்பாடுகள் செய்தேன். முதுகலைப் பட்டம் இருந்தாலும் நாம் மேலைநாடு போய் முனைவர் பட்டப் படிப்பிற்குச் சேரலாம். ஆனால், அதற்கு நிறைய நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கணிதத்திறன் அறிய சில தேர்வுகள். ஆங்கில ஞானமறிய சில தேர்வுகள். பிறகு மேலைநாடு செல்வதற்குப் பிணையாக தமிழகத்தில் சொத்துபத்து காட்ட வேண்டும். நான் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்..ஒருவர் என்னை ஜிப்பர் மருத்துக் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி எங்களிடம் 5000 ரூபாய் கேட்டார். அன்றையப் பொருளாதாரச் சூழலில் 5000 ரூபாய் என்பது பெரிய காசு. அன்றோடு நான் மருத்துவக் கனவை விட்டவன்தான். அப்படி இருக்கும் போது அமெரிக்கா செல்லப் பிணையாக நான் எதை வைப்பேன்?.1970 களில் அமெரிக்கா ஓர் பெருங்கனவு. எல்லோரும் அமெரிக்கா செல்ல ஆசைப்பட்டனர். கட்டற்ற சுதந்திரம், ஆசைப்பட்டபடி வாழ வாய்ப்புகள் என அமெரிக்கா எல்லோரையும் வெறியூட்டியது. இதை அமெரிக்கா நன்கு அறியும். எனவே, எவ்வளவு தடைகள் போட முடியுமோ அவ்வளவு போட்டுப் பார்த்தது. சென்னையிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் பெரிய வரிசை இருக்கும். முன்னிரவே சென்று காத்திருக்க வேண்டும். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து மிரண்டு விட்டேன். கஷ்டமோ நஷ்டமோ நான் இந்தியாவில் ஓர் முனைவர் பட்டம் பெற்று பின் அயலகம் செல்லலாம் என முடிவெடுத்தேன். அதுவே பொருளாதார ரீதியில் சரியாகப்பட்டது. என் படையெடுப்பு மதுரைப் பல்கலைக்கழகத்தை நோக்கி அமைந்தது..(தொடரும்)