கோவைக்கு வயது 218

கோவைக்கு வயது 218

ஹலோ ஹாப்பி பெர்த்டே ங்கண்ணா

 

 ன்னங்கண்ணா.. ஏனுங்கண்ணா என்று அனைவரையும் மரியாதையுடன் அழைப்பதை மட்டுமே கொங்குச் சீமையாம் கோவையின் அடையாளமாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பல  விஷயங்கள் கோவையின் சிறப்பைச் சொல்கின்றன.

கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி, கடந்த பத்து ஆண்டுகளாக நவம்பர் 24-ம் தேதியை கோயமுத்தூர் தினமாக கோவை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கோவை மாநகராட்சியும் ஆண்டுதோறும் கோயமுத்தூர் தினத்தில் கருத்தரங்கங்கள் புகைப்படக் கண்காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர் பரிபாலனம் செய்துள்ளனர். அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள். இதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804-ல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது. சோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரி பெருவழி பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் செல்கிறது. கி.மு 4-ம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானிய காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. இதில் பழமையான நகரங்களாக கொடுமணல், வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது” என்கிறது ஒரு தொல்லியல் குறிப்பு. 

கோவைக்கு ஏன் அந்தப்பெயர்?  பெயர்க் காரணமாகச் சொல்லப்படுவது  கோனியம்மன் தெய்வம்.  தற்போது அம்மன் போவில் அமைந்துள்ள இடத்துக்கு தெற்கே ஓடும் நொய்யலாற்றில் முன்பு இருந்தது. ஆறு பெருக்கெடுத்து அழித்ததால் அம்மனை கோட்டை மேட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்  என்கிறது ஒர் ஆய்வு.

கோவை பஞ்சாலைகளுக்கு புகழ்பெற்ற நகரம். இங்கே உருவான முதல் பஞ்சாலை ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் (சி.எஸ்.டபிள்யூ). இதை உருவாக்கியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர். இதைத் தொடர்ந்து பல பஞ்சாலைகள் போத்தனூரில் உருவாகின, தென் மேற்கிலிருந்து வீசும் கேரளத்தின் குளுமையான காற்று இங்கே இதமான தட்பவெப்பத்தைத் தந்ததால், ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்தமான ஊராக இருந்தது போத்தனூர். அதனால் ஒரு காலகட்டத்தில் இது  இந்தியாவின்மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட்து.

ஆங்கிலேயர்கள் கட்டிய மிகப் பழமையான லண்டன் தேவாலயம் போத்தனூரில் உள்ளது. தற்போது கோவையிலுள்ள வனக்கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படும் விக்டோரியா ஹால், ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹாமில்டன் கிளப் எல்லாமே ஆங்கிலேயர் உருவானவை.

“ஆனால், இதுபோல் வேறு சில கட்டிடங்களும் சிதிலமடைந்தும், உருத் தெரியாமலும் போய்க் கொண்டிருக்கின்றன. இவைகளையும் புதுப்பித்து பாரம்பரியம்மிக்க கோவைக்கான தனி அடையாளங்களாக பாதுகாக்க வேண்டும்” என்கிறார்கள் கோவை மக்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com