குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் மும்முரமாக இறங்கி உள்ளன.
சட்டசபையில் மொத்த இடங்கள் 182. இதில் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க. 109 இடங்களில் வென்றது. காங்கிரசுக்கு 59 சீட்கள் கிடைத்தன. ஆம் ஆத்மிக்கு ஒரு சீட்டு மட்டுமே கிடைத்தது.
இந்த தடவை, பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசு எடுத்த ரகசிய சர்வே முடிவுகளின்படி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் தொகுதிகளைக் கண்டறியப்பட்டன.
அதன் அடிப்படையில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 38 பேருக்கு இந்த முறை தேர்தலில் நிற்க சீட் தரப்படவில்லை.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கட்சிக்கு பாதிப்பு இருக்குமா? என்றால், “இல்லை” என்று அடித்துச் சொல்கிறது காவி வட்டாரம்.
பா.ஜ.க. மேலிடத்தின் இந்த குஜராத் ஸ்டைல் வேட்பாளர் தேர்வு கர்நாடகாவில் ஆளும் தரப்பு எம்.எல்.ஏ.கள் மத்தியில் கிலி ஏற்படுத்தி உள்ளது. இது போதாதென்று கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்குச் சென்றுள்ள எம்.பி.யான லஹர் சிங் சியோரா அண்மையில் போட்ட டுவிட்டர் கர்நாடகாவின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் டென்ஷனை அதிகரித்துள்ளது.
“குஜராத் மாடல் வேட்பாளர் தேர்வினை 2023 மே மாதம் கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் கட்சி கடைபிடித்தால், நிறைய புது முகங்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும்” என்று அவர் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
பழைய பெருச்சாளிகள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் சிரோயா.