
பொதுவாக, முகத்தில் இறந்துபோன செல்கள் அதிகம் இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்றவை உருவாகும். மேலும், வறட்டுத் தன்மை போன்ற பிரச்னைகளும் முகத்தில் தோன்றும். இவை அனைத்திற்கும் ஒன்று பார்லர் சென்று நிறைய செலவில் ட்ரீட்மென்ட் எடுப்பார்கள். இல்லை தங்கள் வீட்டிலேயே அனைத்து பிரச்னைகளுக்கும் தனித்தனியாக இயற்கை முறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால், முகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ப்ளம் எண்ணெய் என்பது உங்களுக்குத் தெரியுமா? ப்ளம் எண்ணெய் பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ப்ளம் பழத்தின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்தான் ப்ளம் எண்ணெய். இந்த எண்ணெயை அனைத்துவிதமான முக சரும நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த ப்ளம் எண்ணெயில் விட்டமின் ‘ஏ’, ‘சி’ மற்றும் ‘ஈ’ உள்ளதால் முகத்தை அழகாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவும். மேலும், இது முகச் சுருக்கம் வராமல் தடுக்க உதவும்.
ப்ளம் எண்ணெயில் ஒமேகா அமிலம் 6லிருந்து 9 வரை இருப்பதால் இது முகத்தை வறட்சியில் இருந்து தடுத்து நீர் சத்துடன் வைத்துக்கொள்ள உதவும்.
ப்ளம் எண்ணெயில் அதிகப்படியான பாலிப்பினால் இருப்பதால் இது சூரிய ஒளியிலிருந்து வரும் யூவி அலைகளில் இருந்து முகம் பாதிப்படைவதை தடுக்கும்.
ப்ளம் எண்ணெயில் இருக்கும் விட்டமின் ஈ முகத்தில் வழுவழுப்பை கூட்டி பிரகாசமாக வைத்துக்கொள்ளும். மேலும் முகத்தில் ஏற்படும் தழும்புகள் போன்றவை நீங்கி சருமத்தை மேம்படுத்த உதவும்.
பிளம் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் இருப்பதால் அனைத்துவிதமான சருமத்திற்கும் பருக்கள் வராமல் தடுக்கும். இந்த ஒலிக் அமிலம் சருமத்தை வலிமையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ளும்.
எப்போதெல்லாம் பயன்படுத்துவது:
பொதுவாக ப்ளம் எண்ணெய் இரவில் தூங்குவதற்கு முன்னர் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துவிட்டு காலை எழுந்தவுடன் கழுவினால் நல்ல ரிசல்ட் தெரியும். அப்படி இல்லையென்றால் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துவிட்டு பின் குளிக்கலாம்.
மேலும் மேக்கப் போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் இந்த ப்ளம் எண்ணெயை நன்றாக தடவி, கழுவிவிட்டு மேக்கப் போட்டால் முகத்தின் சருமம் பாதுகாப்புடனும் நீர்சத்துடனும் இருக்கும்.
ப்ளம் எண்ணெயை முகத்தில் மட்டுமல்லாமல் கழுத்து, மார்பகம், கைகள், கால்கள் ஆகிய இடங்களிலும் தேய்ப்பதனால் உடல் சருமம் ஆரோக்கியமானதாக இருக்கும்.