
கத்திரிக்காய் என்றாலே காததூரம் ஓடுபவர்கள் இருப்பார்கள். அதிலும் பிள்ளைகளுக்கு சொல்லவே வேண்டியதில்லை. கத்திரிக்காயா "நோ" என்பார்கள். இந்த முறையில் கத்திரிக்காய்களை செய்து பாருங்கள். பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இனி செய்முறை...
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்- கால் கிலோ, பொட்டுக்கடலை -அரைக்கப்,
தேங்காய் - ஒரு கப் துருவியது,
ரசப்பொடி - மூன்று தேக்கரண்டி, (மிளகு, சீரகம் தனியா மிளகாய் வறுத்துப் பொடித்தது)
புளி - பெரிய எலுமிச்சை உருண்டை அளவு,
நெய்- சிறிது,
உப்பு - தேவையான அளவிற்கு,
வெல்லம் - தேவையான அளவு எண்ணெய் -நான்கு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துத் தூளாக்கவும். அதனுடன் ரசப்பொடி, உப்பு, தேங்காய், பொடி செய்த வெல்லம், ஆகியவற்றை கலந்து நன்கு பிசைந்து உடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உதிரியாக வைத்துக் கொள்ளவும். பிறகு வாங்கிய நடுத்தர சைஸ் கத்திரிக்காயை கழுவி விட்டு நான்காக பிளந்து கொள்ளவும். முழு கத்திரிக்காயாக இருக்க வேண்டும். கலந்து வைத்துள்ள பொட்டுக்கடலை பொடியை எடுத்து ஒவ்வொரு கத்தரிக்காயின் உள்ளேயும் நிரப்பி ஸ்டஃப் செய்யவும்.
பிறகு ஒரு அடி கனமான அகன்ற வாணலியில் சிறிது நெய்யும் எண்ணெயும் விட்டு காய்ந்ததும், காய்களை நிதானமாக போட்டு அடிப்பிடிக்காமல் குலுக்கி விடவும். வேகமாக கிளறக் கூடாது. காய்கள் வதங்கிய பிறகு வேகும் அளவிற்கு சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைக்கவும். வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரையும் மீதமுள்ள பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும். உப்பும் தேவைப்பட்டால் சேர்க்கவும். தனியாக சிறிது நெய்யில் கருவேப்பிலை, கடுகு, பெருங்காயம் தாளித்து கத்திரிக்காய் சாப்ஸில் சேர்க்கவும். காரம், இனிப்பு, புளிப்பு கலந்த வித்தியாசமான கத்திரிக்காய் கோலா சாப்ஸ் சூப்பர் மணத்துடன் சுவைக்க ரெடி.