உங்கள் பிள்ளைகளை ஒல்லி பெல்லியாக்கும் கொள்ளுப் பயிறு!

உங்கள் பிள்ளைகளை ஒல்லி பெல்லியாக்கும் கொள்ளுப் பயிறு!

ந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதைப் போல ஒபீசிட்டி எனப்படும் உடற்பருமனும் ஒரு நோயாக மாறி வருகிறது. சிறு குழந்தைகள் கூட உடற்பருமனுக்கு ஆளாகி வருவது கண்கூடு. ஜங் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகளை விரும்பி உண்ணுவதே அவர்களின் உடற்பருமனுக்குக் காரணம். அவர்களுக்கு நல்ல சத்துள்ள ஆகாரங்களை அளித்து, தங்கள் உயரத்திற்கேற்ற சரியான எடையை கொண்டிருப்பதில் பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும்.

 ‘’இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’’ என்ற கிராமத்துப் பழமொழிக்கேற்ப அதிக உடல் எடையுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய பயிறு வகை கொள்ளு. எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு முன்னோர்கள் அளித்தனர். இதில் அதிகளவு இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதமும், குறைந்த அளவு கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி கொள்ளு சூப் செய்து கொடுக்கலாம். உப்புப்போட்டு வேகவைத்து மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக தரலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை கடைப்பிடித்தாலும், உணவிலும் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை விலக்கி, உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக்கொண்டால் தான் எடையைக் குறைக்க முடியும். அவர்களுக்கு கை கொடுக்கும் அற்புத தானியம் தான் கொள்ளு. மேல் நாட்டு தானியமான ஓட்ஸை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களைத் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, விலையில் குறைந்த, வீட்டருகில் இருக்கும் சிறிய மளிகைக்டைகளில் கூட எளிதாகக் கிடைக்கும் கொள்ளுப் பயிறை வாங்கி உண்ணலாம்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் சம்மந்தப்பட்ட நோய்களை கொள்ளு குணப்படுத்தும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும். பிரசவமான இளம் தாய்மார்களின் பிரசவ அழுக்கை வெளியேற்றும். இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும்;  காய்ச்சலையும் குணமாக்கும். சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும்.

கொள்ளு சூப் செய்முறை;

கொள்ளு          -    ஒரு கப் (100 கி)
மிளகு, சீரகம் -    தலா 1 ஸ்பூன்
பூண்டு            -   ஐந்து பற்கள்

வரமிளகாய்    - இரண்டு

தக்காளி          -  2 மீடியம் அளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

சின்ன வெங்காயம்- நான்கு (தோல் உரித்து சிறிதாக நறுக்கவும்)

முதலில் கொள்ளுப் பயிரை இரண்டு மணி நேரம் நான்கு டம்ளர் நீரில் ஊற வைக்கவேண்டும். குக்கரில் ஒரு டம்ளர் ஊர் வைத்த நீருடன் கொள்ளு, மிளகு,சீரகம், பூண்டு, தக்காளி போட்டு ஐந்து விசில் விட்டு நன்கு வேக வைக்கவும். ஆற வைத்து மிக்சியில் இட்டு மைய அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம் தாளித்து, அரைத்த கொள்ளுக் கலவையையும்,  சேர்த்து, உப்புப் போட்டு கொதிக்க வைக்கவும். பின் ஊற வைத்த கொள்ளுத் தண்ணீரையும் சேர்த்து சற்று நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தலைகளை சேர்த்தால் சூப் தயார்.

   இந்த கொள்ளு சூப்பை வாரத்தில் நான்கு நாட்கள் குடித்து வந்தால், உங்கள் பிள்ளைகள் விரைவில் எடை குறைந்து ஒல்லி பெல்லிகளாக ஆவது உறுதி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com