மூல நோய் ஏற்பட காரணங்கள் :
வயிற்றில் அதிகரித்த வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் அழுத்தம், பிரசவ நேரத்தில் ஏற்படும் வலி, அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகில் உள்ள தசைகளில் ஏற்படும் பலவீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, மாவுச்சத்துள்ள உணவுகள், எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உண்பது, எப்போதும் உட்கார்ந்து இருப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற காரணங்களால் மூலநோய் வருகிறது.
நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தில்லாத மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.
மூல நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும். மூல நோய் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
மூல நோய்களை குணமாக்கும் வழிமுறைகள்:
தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும்.
மேலும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், கடுமையான வலியில் இருந்து தப்பிக்கலாம்.
ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.
தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும். ஒருவேளை தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், கடுமையான இரத்தக் கசிவு மற்றும் வலியை உணரக் கூடும்.
திரிபலா சூரணம் ஒரு கிராம், நாகப்பற்பம் 100 மில்லி கிராம், நத்தை பற்பம் 100 மில்லி கிராம், இவைகளை வெந்நீரில் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை தலாஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.
நிலவாகை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்குமுன்பு சாப்பிட வேண்டும்.
மூலக்குடார நெய் 5 மி.லி. இரவு ஒரு வேளை சாப்பிட வேண்டும்.
துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம்.
கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி புளி சேர்த்து குழம்பாக வாரம்இரு முறை பயன்படுத்தி வரலாம்.
பிரண்டைத் தண்டை துவையல் அல்லது பொடியாக செய்து பயன்படுத்தலாம்.
முள்ளங்கி காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கோவைக்காய், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைஉணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை எண்ணெய்குளியல் செய்ய வேண்டும்.