
‘பஞ்சபூத வஸ்துக்களில் ஒன்றான மண்ணால் உருவாக்கப்பட்ட இறை உருவங்களோடு, ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள உலக உயிர்களின் உருவங்களையும் வடித்து என்னை வழிபட்டால், அவர்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்குவேன்’ என்கிறாள் தேவி புராணத்தில் அம்பிகை. இப்படி புரட்டாசி நவராத்திரியில் கொலு வைப்பதில் ஒரு தத்துவம் அடங்கி உள்ளது. பொதுவாக, கொலு வைக்கும்போது ஒன்பது படிகள் வைத்து அதன் ஒவ்வொரு படியிலும் மேற்சொன்ன மண் பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம். நவராத்திரி பண்டிகை கொலு குறித்த சில தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
* கொலு படிகளில் பொம்மைகளை அடுக்கும் முன்பு படிகளை சரிபார்க்கவும். மேல் படிகளில் இருந்து பொம்மைகளை அடுக்கவும்.
* நவராத்திரி கொலுவின்போது பிளாஸ்டிக் தோரணங்களைத் தவிர்த்து, மாவிலை தோரணம் கட்டலாம். அது மங்கலகரமானது மட்டுமல்ல, கிருமிகளை விரட்டக் கூடியதும் ஆகும்.
* சாம்பிராணி புகை, கற்பூரம் இவற்றை படிகளின் அருகில் காட்டினால் பொம்மைகளின் மேல் புகை படியும். படிகளின் மேல் விரித்துள்ள துணியில் தீப்பிடிக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தூரத்தில் இருந்து காட்டுவது நல்லது.
* கொலு தொடங்க ஒரு வாரம் முன்பே சிறு மண் தொட்டிகள், கிண்ணங்களில் மண் நிரப்பி நெல், வெந்தயம், மல்லி, கம்பு போன்றவற்றை ஊன்றி வைத்தால் செடிகள் வளர்ந்து விடும். இவற்றை கொலுவில் பார்க்க ரம்மியமாக இருக்கும். இதுபோன்ற செடிகளில் கடுகு, எள்ளு வைப்பதைத் தவிர்க்கவும். அவை நற்காரியங்களுக்கு உகந்தவை அல்ல.
* நவராத்திரியின்போது கொலு பொம்மைகள் வாங்குவது நம் சம்பிரதாயம். கொலு வைக்கும் கோயில்களுக்கும் பொம்மைகள் வாங்கித் தரலாம்.
* கொலு பார்க்க வருபவர்களுக்கு ஒரு பொம்மையாவது தாம்பூலத்துடன் பரிசாகத் தரலாம்.
* கொலு முடிந்ததும் பொம்மைகளை பருத்தித் துணி அல்லது செய்தித்தாள்களில் சுற்றி வைத்தால் அவற்றின் நிறம் மங்காமல் இருக்கும்.
* மரப்பாச்சி மற்றும் மர பொம்மைகளை வார்னிஷ் அடித்து வைத்தால் புதிது போல் பளபளக்கும்.
* பொம்மைகளை பெட்டியில் இருந்து எடுத்ததும் துணியால் தூசி போக துடைத்து விட்டு பஞ்சில் மண்ணெண்ணெய் தொட்டு சுத்தம் செய்யலாம். பிறகு விபூதி தடவி துடைத்து விட்டால் பளிச்சென்று இருக்கும்.
* தரையில் ஜமுக்காளம் அல்லது தார்ப்பாய் விரித்து மணலை பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.
* பச்சை வண்ணப் பொடியை சீராகத் தூவி புல்வெளி உருவாக்கலாம். ரோடு போட மணலில் கருப்பு நிற இங்க் கலந்தால் தார் ரோடு போல இருக்கும். அல்லது கருப்பு நிற காகிதத்தை கத்தரித்து ரோடு அமைக்கலாம்.
* அட்டைப் பெட்டிகளில் பொம்மைகளை எடுத்து வைக்கும்பொழுது அதில் என்ன பொம்மைகள் உள்ளன என்பதை வெளிப்புறத்தில் எழுதி வைக்கவும்.
* நவராத்திரி பூஜையின்போது எந்த நைவேத்தியத்தையும் கொதிக்க கொதிக்க வைப்பது சரியல்ல. பதமான சூட்டில் இருக்கும்போது கிண்ணம் அல்லது தட்டில் சிறிதளவு வைக்காமல், முழுவதுமாக வைக்க வேண்டும்.