தைராய்டு நோய்களின் ராஜா!

மாற்று மருத்துவம்
தைராய்டு நோய்களின் ராஜா!

டாக்டர் ஆர். ஞானசம்பந்தம் (ஹோமியோபதி மருத்துவர்)

ற்பல ஆரோக்கிய பிரச்னைகளின் மூலகாரணமாக இருக்கும் தைராய்டு கோளாறுகள் பற்றி விளக்கம் தருகிறார் டாக்டர் ஆர். ஞானசம்பந்தம். இவர், தமிழக ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின் தலைவர். மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு ஆலோசனைக் குழ உறுப்பினராகவும் உள்ளார்.

“முன்னே ரொம்ப ஒல்லியா இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப குண்டாயிட்டேன்!”

“ரொம்ப இளைச்சுப் போயிட்டாப்பா என் மவ; கழுத்துலே வேறே வீங்கி இருக்கு! ரொம்பக் கோபப்படறா... கை கால் எல்லாம் நடுங்குது. எப்பவும் படபடப்பா இருக்குறா!”

“பீரியட்ஸ் சரியாகவே வர்றதில்லே. கல்யாணமாகி நாலு வருஷமாவுது. இன்னும் குழந்தை பிறக்கலை. இப்ப மருந்தெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்!”

“எனக்கு தலைமுடி அடர்த்தியா இருக்கும். எல்லாம் கொட்டிப் போய், எலி வால் மாதிரி ஆயிடுச்சு. தலையிலே எண்ணெய் வச்சா மண்டையெல்லாம் தெரியுது!”

- இப்படி சங்கிலித் தொடர் போல தொந்தரவுகள் தற்போது அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பெண்களிடையே இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நமது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள நோய்களின் அரசன் தைராய்டு சுரப்பிதான். இப்பல்லாம் எந்த ஒரு நோயை எடுத்தாலும், தைராய்டு சுரப்பியல் கோளாறு உள்ளதா என்றுதான் மருத்துவர்கள் முதலில் பார்க்கிறார்கள்.

இந்தத் தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தாலும் தொல்லை; குறைவாகச் சுரந்தாலும் தொல்லை. அது மட்டுமா? உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்துவிடும். சில சமயங்களில் எல்லாம் சரியாக இருந்தும், சிறு சிறு கட்டிகள் தோன்றி, கேன்சராக இருக்குமோ என்று மனஉளைச்சல் தந்துவிடும்.

தைராய்டு கோளாறுகளைப் பகுத்தறிவது மிகவும் சுலபம். இரத்தப் பரிசோதனை T3, T4, TSH ஆகிய பரிசோதனை களைச் செய்து ஹார்மோன்கள் பற்றி முதலில் பார்க்கவேண்டும். TSH அதிகமாக இருந்தால், தைராய்டு சுரப்பி நன்றாகச் சுரக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். அதேபோல் TSH குறைவாக இருந்தால், தைராய்டு  சுரப்பி அதிகமாகச் சுரக்கிறது என்று தெரிந்துகொளு்ளலாம். கட்டிகள் தோன்றினால், எப்படிப்பட்ட வகை என்பதை ஸ்கேன் மூலம் அறிந்துகொள்ள முடியும். கேன்சர் போன்ற சந்தேகங்கள் இருந்தால் தெளிவுபடுத்திக் கொள்ள கட்டியிலிருக்கும் செல்களை ஊசியால் எடுத்து நுண்பெருக்கி மூலம் தெளிவு கொள்ள முடியும். இவை அனைத்தும் மருத்துவ நிபுணர்கள் மட்டுமே ஆராய்ந்து சொல்ல முடியும்.

தைராய்டு குறைவாக இருந்தால்...

ரு பெண்மணிக்கு தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் (Hypothyroidism) ஆரம்பத்தில் அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இருக்கும். முதலில் மாற்றம் மாதவிலக்கில் ஏற்படலாம். தீட்டு தாறுமாறாக, அதிகமாக அல்லது ஏற்படாமல் இருக்கலாம். அதோடு மட்டு மில்லாமல் உடல் பருமனாக ஆரம்பித்துவிடும்!

இளம் பெண்களுக்கு இந்தக் கோளாறுடன் கருமுட்டையில் நீர்க்கட்டிகள் (Poly Cystic Ovarin Disease) இருக்கலாம். குழந்தைப் பேற்றுக்குப் பின் சில பெண்களுக்கு தைராய்டு சுரப்பியில் அலர்ஜி ஏற்பட்டு, தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்க ஆரம்பிக்கலாம். அதனால்தான் பெரும்பாலான பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு குண்டாகிவிடுகின்றனர்.

முகம், பருமனாக ஆரம்பித்துவிடும்; கைகளில் வீக்கம் இருப்பது போல தோன்றும்; உடல் பருமன் அதிகமாவதால் களைப்பு, குளிர்ச்சியைத் தாங்க முடியாத நிலை தோன்றும். கை, கால் உளைச்சல், மூட்டுவலி என்று இத் தொல்லைகள் வளர்ந்துகொண்டே போகும். ஞாபகமறதி, மனச்சோர்வு அதிகமாக இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையிலும் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். சிலருக்குக் குரல் மாற்றம் வரலாம்; சருமம் வறண்டு காணப்படும்; பொலிவு இருக்காது.

அது மட்டுமா? தான் ஸ்ட்ரைக் செய்வதோடு மற்ற நாளமில்லா சுரப்பிகளையும் அதனதன் வேலைகளைச் சரிவர செய்ய முடியாவண்ணம் செய்துவிடும் இந்த தைராய்டு சுரப்பிகள். இதனால்தான் முடிவளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டு, தலையில் வழுக்கை விழுகிறது. மேலும், வேண்டாத மீசை தாடியை வளரச் செய்கிறது.

கருமுட்டைப் பையில் சிறுசிறு நீர்க்கட்டிகள் (PCOD) தோன்றக் காரணமாக இருக்கும் இந்த ஹார்மோன், மாதவிலக்குக் கோளாறுகளை ஏற்படுத்தி கருமுட்டை சரியாக வெளியேறாமல் தடுத்துவிடுகிறது. இதனால் கர்ப்பம் தடைபடுகிறது. குழந்தைப்பேறு இல்லாமல் பல தம்பதியர் தவிக்க நேர்வது இந்த ஹார்மோன் பிரச்னையால்தான்!

தைராய்டு அதிகமாகச் சுரந்தால்...

தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தால் நோய்குறிகள் அப்படியே எதிர்மாறாக இருக்கும். கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். உடல் முழுவதும் சூடாக இருத்தல், படபடப்பு, வெயிலைத் தாங்க முடியாமை, கை, கால் நடுக்கம் போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிடும். வியர்வை அதிகமாகச் சுரக்கும். இதயத் துடிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால், இதயப் படபடப்பை பாதிக்கப்பட்டவர்களே உணர்ந்துகொள்ளலாம். களைத்துப் போவார்கள். நாக்கு வறண்டுவிடும்; குமட்டல் வாந்திகூட வரும்; எந்த வேலையும் சரிவர செய்ய முடியாமல் தவிப்பார்கள்; தூக்கம் சரியாக இருக்காது. தீட்டுக் கோளாறுகள் பல்வேறு கோணங்களில் தோன்ற ஆரம்பிக்கும். சிலருக்குக் குறைப்பிரசவம், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் போன்ற அவதிகள் நேரும்.

ஒருசிலருக்குக் கண்கள் பெரிதாக வீங்கத் தொடங்கி, பார்வைக் கோளாறுகூட ஏற்படலாம்.

“தைராய்டு பிரச்னை இருந்தால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடணுமாமே!” இது பலரது சந்தேகம். அடிப்படையாகப் பார்த்தால் பரம்பரைத் தன்மை, சுயநோய் எதிர்ப்புத்திறன் குறைதல் (Auto Immune Disease), உடல் இயக்கக் கோளாறுகளால்தான் இந்நோய் ஏற்படுகிறது. எனவே, இந்த அடிப்படைக் கோளாறைச் சீராக்கினாலே நோய் நீங்கும்.

(மங்கையர் மலர் ஜனவரி 2008 இதழிலிருந்து...)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com