சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இன்று நடை திறக்கப்படுகிறது. இதுகுறித்து தேவஸ்தானம் தெரிவித்ததாவது:
சபரி மலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடந்த 26-ம் தேதி மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
இரவு 10 மணிக்கு நடை சாத்தபட்ட பின்னர் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகரவிக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடைபெறுகிறது. நாளை முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
–இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.