பகுதி -11.– ரேவதி பாலு.ஆண்டாள்!.பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான். ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம் நினைவுக்கு முதலில் வரும்..ஸ்ரீ வில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பக்தர் தன் வீட்டிலேயே ஒரு நந்தவனம் அமைத்து பூமாலைகள் கட்டி, அவற்றை தினந்தோறும் அந்த ஊர் கோயிலுள்ள வடபத்ரசாயி என்னும் பெருமாளுக்கு சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்துவந்தார். திருமாலிடத்தில் மிகுந்த பக்திகொண்ட பக்திமான் ஆதலால் பெரியாழ்வார் என்றும் அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனால் 'பட்டர்பிரான்' என்னும் பட்டம் பெற்றவர்..ஒரு நாள் பெரியாழ்வார் வழக்கம்போல் தன் நந்தவனத்தில் துளசி தளங்களைப் பறித்துக்கொண்டிருந்தபோது செடியின் அடியில் ஒரு பச்சிளங்குழந்தை இருப்பதைப் பார்த்து திகைத்துப்போனார். அந்தக் குழந்தையை அன்போடு தூக்கியபோது அது அவரைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. இதுவும் பெருமாளின் ஒரு லீலையே என்றெண்ணி மெய்சிலிர்த்துப் போனார். பூமியிலிருந்து கிடைத்த குழந்தையாதலால் அவள் பூமி பிராட்டியின் அவதாரமே என்று நினைத்து அவர் குழந்தையை உச்சி முகர்ந்து கோதை என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார். அந்தப் பெண் குழந்தை கிடைத்தத் தினம் ஆடிப்பூரம்..பூமிப் பிராட்டியின் அவதாரமாய்ப் பிறந்த கோதையை சீராட்டி, பாராட்டி, கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் விஷ்ணுசித்தர். சிறுவயது முதலே தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து கவிச் சிறப்பையும், பக்தி சிறப்பையும் கோதை கற்றுத் தேர்ந்தாள். தன் அன்பு மகள் கோதைக்கு அரங்கனைப் பற்றிய கதைகளை பெரியாழ்வார் தினமும் கூறுவது வழக்கம். அக்கதைகளைக் கேட்கக் கேட்க அவள் வளர வளர கண்ணன் மேல் கொண்ட பக்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது. பெருமாளின் மேல் கொண்ட அன்பு கோதையை முழுமையாக ஆக்ரமித்தது. சாதாரண மானிடர் போல உடலால், உணர்ச்சியால் அல்லாது, ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றால் நன்கு முதிர்ந்து வளர்ந்து வந்தது. தான் வளர்க்கப்பட்ட விதத்தால், கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்ட வளாகவும், தமிழில் கவி இயற்றும் நல்ல திறமை கொண்டவளாகவும் இருந்தாள். அழகுத் தமிழால் அரங்கப் பெருமானை ஆண்டதால் 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றாள் கோதை. கிருஷ்ணனின் சிறு வயது லீலைகளைப் பற்றி பெரியாழ்வார் கதைகளாகச் சொன்னது அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. எந்நேரமும் குழந்தை கிருஷ்ணனுடன், தான் விளையாடுவதுபோல ஒரு பிரமையிலேயே அவள் சிறு பிராயம் கழிந்தது..பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்து வந்த ஆண்டாளுக்கு இந்தப் பூவை சூடிக்கொள்ளும் அரங்கன் எப்படி கம்பீரமாக, அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணம் வந்தது. தன்னையே அந்த அரங்கனாக பாவித்துக்கொண்டு பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல், தான் அணிந்து அழகு பார்ப்பாள். பிறகு மிக்க மனமகிழ்வோடு திரும்பவும் பெரியாழ்வார் மாலைகளை வைக்கும் இடத்தில் கொண்டுபோய் வைத்து விடுவாள். இதனால் கோதை சூட்டிக்கொண்டு அழகு பார்த்துவிட்டு வைத்த மாலைகளே தினமும் கோயிலில் இறைவனுக்கு சூட்டப்பட்டன. இந்த காரியம் வெகு நாட்களாக நடந்துகொண்டிருந்தது..ஒரு முறை கோயில் அர்ச்சகர் பெரியாழ்வார் கொண்டு வந்த பூமாலையை பெருமாளுக்கு அணிவிக்க எடுத்தபோது அதில் ஒரு நீண்ட முடி இருப்பதைக் கண்டவர் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு மாலை கொண்டு வரும்படி பெரியாழ்வாரிடம் கூறினார். பெரியாழ்வார் மனம் பதைத்துப் போனார். தான் வெகுநாட்களாக செய்துகொண்டிருக்கும் பகவத் சேவையில் இப்படி ஒரு பிழை நேர்ந்துவிட்டதே என்று எண்ணி மனம் கலங்கினார்..அடுத்த நாள் பெரியாழ்வார் மிகுந்த கவனத்துடன் மாலை தொடுத்து வைத்து விட்டு கோயிலுக்குக் கிளம்ப யத்தனித்தபோது ஆண்டாள் அந்த மாலையை அணிவதை பார்த்துவிட்டார். மிகுந்த கோபத்துடன் ஆண்டாளைக் கண்டித்தார். இதை எப்படி இத்தனை நாட்கள்தான் கவனியாமல் விட்டுவிட்டோம் என்றெல்லாம் எண்ணி மீளா துயரத்திற்கு ஆளானார். அன்றும் கோயிலுக்கு பெருமாளுக்கு மாலை கொடுக்க இயலவில்லை..மிகுந்த மன வருத்தத்துடன் அன்று இரவு உறங்கப் போனார். கனவில் அரங்கன் வந்தான். இரண்டு நாட்களாக ஏன் தனக்கு மாலை கொணர வில்லையென்று வினவினான். பெரியாழ்வாரும் தன் செல்ல மகள் செய்த காரியத்தை மிகுந்த துயரத்துடனும் மன வருத்தத்துடனும் அரங்கனிடம் பகிர்ந்துகொண்டார். தாள முடியாமல் கண்ணீர் வந்தது.."நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், உம் மகள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உவப்பானது!" என்று சொல்லி அரங்கன் அவரைத் தேற்றி கோதை நாச்சியாரின் பிறப்பின் பெருமையையும் அவருக்குப் புரிய வைத்தான்..காலை கண் விழித்த பெரியாழ்வாருக்கு கனவு நினைவுக்கு வர, உண்மை நிதர்சனமாகப் புரிந்தது. அன்று தான் தொடுத்த மாலைகளை ஆண்டாளுக்குக் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக்கொண்டு அரங்கனுக்கு சார்த்த கோயிலுக்கு விரைந்தார். அரங்கனுக்குரிய மாலையை தான் சூடிக் கொடுத்த செயலால் ஆண்டாள் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்று சிறப்பித்து அழைக்கப்பட்டாள்..ஆண்டாளுக்கு மண வயது வந்தது. கண்ணனின் பெருமைகளையே எப்போதும் துதித்து துதித்து, எப்போதும் அவன் நினைவிலேயே வாழ்ந்ததால், அவனையே மணம் முடிக்க எண்ணம் கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக பாவனை செய்துகொண்டு வாழ ஆரம்பித்தாள்..'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்…' என்று உரைத்து தன் மணவாளன் அரங்கனே என்று தந்தைக்கு உணர்த்தினாள். மார்கழி மாதம் முப்பது நாளும் பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடிச் சிறப்பித்தாள் ஆண்டாள்..அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலைசூடிக் கொடுத்தாளைச் சொல்லு.சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய்! நாடி நீவேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்நாம் கடவா வண்ணமே நல்கு..ஆண்டாளின் சிறப்பைச் சொல்லும் இந்த வெண்பாக்களை மார்கழி மாதத்தில் திருப்பாவை சொல்வதற்கு முன்னே வைணவர்கள் சொல்வது வழக்கம்..பாவை நோன்பும் முடிந்தது. பூமாலை தொடுத்து பாமாலை பாடி அரங்கனை வழிபட்டுக்கொண்டிருந்த ஆண்டாளுக்கு தன் மணவாளனை என்று, எவ்வாறு அடைவோம் என்ற சிந்தனையே மனதை வாட்டிக்கொண்டிருந்தது..கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய பெரியாழ்வாரும் 'இது நடக்கக் கூடிய காரியமா? பெருமாள் இவளை மணமுடித்தல் கூடுமோ?' என்று நினைத்து கலங்கிப்போனார். அப்போது ஒரு நாள் திருவரங்கன் ஆழ்வாரது கனவில் தோன்றி, "நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்!" என்று உரைத்தார்..அதே நேரம் கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, "நீவிர் குடை வாத்தியங்கள் முதலிய பலவித சிறப்புகளுடன் சென்று பட்டர்பிரானின் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக!" என்று பணித்தார். மேலும் பாண்டிய நாடு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீ வில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக" என்று பணிக்கிறார்..மன்னன் பெரியாழ்வாரிடம் தன் கனவினைக் கூறி, தான் பெருமாள் உத்தரவுக்கேற்ப திருமணத்துக்கு சகல ஏற்பாடுகளையும் செய்வதாகக் கூறினான். ஸ்ரீவில்லிப்புத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை வழிமுழுவதும் சிறப்பாகத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. தோழியர் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தச் செய்து, பலவாறு ஒப்பனை செய்தனர். கோதையும் தோழிகள் புடைசூழ பல்லக்கில் ஏறி அமர்ந்து திருவரங்கம் சென்றாள். அரசன், பெரியாழ்வார் முதலானோர் தொடர்ந்து வர, அந்தக் குழு திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது. பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுவதற்காக ஏங்கிய அரங்கனின் பேரழகைக் கண்ணாரக் கண்டாள். நேராக நம்பெருமாளின் சன்னதிக்குச் சென்று அவன் திருமேனியில் கலந்தாள். காணுதற்கரிய இக்காட்சி கண்டு அனைவரும் பிரமித்துப் போய் நின்றார்கள். பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாள் அரங்கன் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது..108 திவ்யத்தலங்களில் ஆண்டாள் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 10 கோயில்களை மங்களாசாஸனம் செய்துள்ளார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி சூடிக் கொடுத்த பூமாலைகளைப் போலவே அவர் திருநாவால் பாடிக் கொடுத்த பாமாலைகளும் புகழ் பெற்றவை. அவர் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பவை பிரசித்தி பெற்ற பாமாலைகளாகத் திகழ்கின்றன. எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் நாச்சியாருக்கு ஒரு சன்னதி இருக்கும்.
பகுதி -11.– ரேவதி பாலு.ஆண்டாள்!.பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான். ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம் நினைவுக்கு முதலில் வரும்..ஸ்ரீ வில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பக்தர் தன் வீட்டிலேயே ஒரு நந்தவனம் அமைத்து பூமாலைகள் கட்டி, அவற்றை தினந்தோறும் அந்த ஊர் கோயிலுள்ள வடபத்ரசாயி என்னும் பெருமாளுக்கு சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்துவந்தார். திருமாலிடத்தில் மிகுந்த பக்திகொண்ட பக்திமான் ஆதலால் பெரியாழ்வார் என்றும் அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனால் 'பட்டர்பிரான்' என்னும் பட்டம் பெற்றவர்..ஒரு நாள் பெரியாழ்வார் வழக்கம்போல் தன் நந்தவனத்தில் துளசி தளங்களைப் பறித்துக்கொண்டிருந்தபோது செடியின் அடியில் ஒரு பச்சிளங்குழந்தை இருப்பதைப் பார்த்து திகைத்துப்போனார். அந்தக் குழந்தையை அன்போடு தூக்கியபோது அது அவரைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. இதுவும் பெருமாளின் ஒரு லீலையே என்றெண்ணி மெய்சிலிர்த்துப் போனார். பூமியிலிருந்து கிடைத்த குழந்தையாதலால் அவள் பூமி பிராட்டியின் அவதாரமே என்று நினைத்து அவர் குழந்தையை உச்சி முகர்ந்து கோதை என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார். அந்தப் பெண் குழந்தை கிடைத்தத் தினம் ஆடிப்பூரம்..பூமிப் பிராட்டியின் அவதாரமாய்ப் பிறந்த கோதையை சீராட்டி, பாராட்டி, கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் விஷ்ணுசித்தர். சிறுவயது முதலே தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து கவிச் சிறப்பையும், பக்தி சிறப்பையும் கோதை கற்றுத் தேர்ந்தாள். தன் அன்பு மகள் கோதைக்கு அரங்கனைப் பற்றிய கதைகளை பெரியாழ்வார் தினமும் கூறுவது வழக்கம். அக்கதைகளைக் கேட்கக் கேட்க அவள் வளர வளர கண்ணன் மேல் கொண்ட பக்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது. பெருமாளின் மேல் கொண்ட அன்பு கோதையை முழுமையாக ஆக்ரமித்தது. சாதாரண மானிடர் போல உடலால், உணர்ச்சியால் அல்லாது, ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றால் நன்கு முதிர்ந்து வளர்ந்து வந்தது. தான் வளர்க்கப்பட்ட விதத்தால், கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்ட வளாகவும், தமிழில் கவி இயற்றும் நல்ல திறமை கொண்டவளாகவும் இருந்தாள். அழகுத் தமிழால் அரங்கப் பெருமானை ஆண்டதால் 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றாள் கோதை. கிருஷ்ணனின் சிறு வயது லீலைகளைப் பற்றி பெரியாழ்வார் கதைகளாகச் சொன்னது அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. எந்நேரமும் குழந்தை கிருஷ்ணனுடன், தான் விளையாடுவதுபோல ஒரு பிரமையிலேயே அவள் சிறு பிராயம் கழிந்தது..பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்து வந்த ஆண்டாளுக்கு இந்தப் பூவை சூடிக்கொள்ளும் அரங்கன் எப்படி கம்பீரமாக, அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணம் வந்தது. தன்னையே அந்த அரங்கனாக பாவித்துக்கொண்டு பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல், தான் அணிந்து அழகு பார்ப்பாள். பிறகு மிக்க மனமகிழ்வோடு திரும்பவும் பெரியாழ்வார் மாலைகளை வைக்கும் இடத்தில் கொண்டுபோய் வைத்து விடுவாள். இதனால் கோதை சூட்டிக்கொண்டு அழகு பார்த்துவிட்டு வைத்த மாலைகளே தினமும் கோயிலில் இறைவனுக்கு சூட்டப்பட்டன. இந்த காரியம் வெகு நாட்களாக நடந்துகொண்டிருந்தது..ஒரு முறை கோயில் அர்ச்சகர் பெரியாழ்வார் கொண்டு வந்த பூமாலையை பெருமாளுக்கு அணிவிக்க எடுத்தபோது அதில் ஒரு நீண்ட முடி இருப்பதைக் கண்டவர் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு மாலை கொண்டு வரும்படி பெரியாழ்வாரிடம் கூறினார். பெரியாழ்வார் மனம் பதைத்துப் போனார். தான் வெகுநாட்களாக செய்துகொண்டிருக்கும் பகவத் சேவையில் இப்படி ஒரு பிழை நேர்ந்துவிட்டதே என்று எண்ணி மனம் கலங்கினார்..அடுத்த நாள் பெரியாழ்வார் மிகுந்த கவனத்துடன் மாலை தொடுத்து வைத்து விட்டு கோயிலுக்குக் கிளம்ப யத்தனித்தபோது ஆண்டாள் அந்த மாலையை அணிவதை பார்த்துவிட்டார். மிகுந்த கோபத்துடன் ஆண்டாளைக் கண்டித்தார். இதை எப்படி இத்தனை நாட்கள்தான் கவனியாமல் விட்டுவிட்டோம் என்றெல்லாம் எண்ணி மீளா துயரத்திற்கு ஆளானார். அன்றும் கோயிலுக்கு பெருமாளுக்கு மாலை கொடுக்க இயலவில்லை..மிகுந்த மன வருத்தத்துடன் அன்று இரவு உறங்கப் போனார். கனவில் அரங்கன் வந்தான். இரண்டு நாட்களாக ஏன் தனக்கு மாலை கொணர வில்லையென்று வினவினான். பெரியாழ்வாரும் தன் செல்ல மகள் செய்த காரியத்தை மிகுந்த துயரத்துடனும் மன வருத்தத்துடனும் அரங்கனிடம் பகிர்ந்துகொண்டார். தாள முடியாமல் கண்ணீர் வந்தது.."நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், உம் மகள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உவப்பானது!" என்று சொல்லி அரங்கன் அவரைத் தேற்றி கோதை நாச்சியாரின் பிறப்பின் பெருமையையும் அவருக்குப் புரிய வைத்தான்..காலை கண் விழித்த பெரியாழ்வாருக்கு கனவு நினைவுக்கு வர, உண்மை நிதர்சனமாகப் புரிந்தது. அன்று தான் தொடுத்த மாலைகளை ஆண்டாளுக்குக் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக்கொண்டு அரங்கனுக்கு சார்த்த கோயிலுக்கு விரைந்தார். அரங்கனுக்குரிய மாலையை தான் சூடிக் கொடுத்த செயலால் ஆண்டாள் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்று சிறப்பித்து அழைக்கப்பட்டாள்..ஆண்டாளுக்கு மண வயது வந்தது. கண்ணனின் பெருமைகளையே எப்போதும் துதித்து துதித்து, எப்போதும் அவன் நினைவிலேயே வாழ்ந்ததால், அவனையே மணம் முடிக்க எண்ணம் கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக பாவனை செய்துகொண்டு வாழ ஆரம்பித்தாள்..'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்…' என்று உரைத்து தன் மணவாளன் அரங்கனே என்று தந்தைக்கு உணர்த்தினாள். மார்கழி மாதம் முப்பது நாளும் பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடிச் சிறப்பித்தாள் ஆண்டாள்..அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலைசூடிக் கொடுத்தாளைச் சொல்லு.சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய்! நாடி நீவேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்நாம் கடவா வண்ணமே நல்கு..ஆண்டாளின் சிறப்பைச் சொல்லும் இந்த வெண்பாக்களை மார்கழி மாதத்தில் திருப்பாவை சொல்வதற்கு முன்னே வைணவர்கள் சொல்வது வழக்கம்..பாவை நோன்பும் முடிந்தது. பூமாலை தொடுத்து பாமாலை பாடி அரங்கனை வழிபட்டுக்கொண்டிருந்த ஆண்டாளுக்கு தன் மணவாளனை என்று, எவ்வாறு அடைவோம் என்ற சிந்தனையே மனதை வாட்டிக்கொண்டிருந்தது..கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய பெரியாழ்வாரும் 'இது நடக்கக் கூடிய காரியமா? பெருமாள் இவளை மணமுடித்தல் கூடுமோ?' என்று நினைத்து கலங்கிப்போனார். அப்போது ஒரு நாள் திருவரங்கன் ஆழ்வாரது கனவில் தோன்றி, "நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்!" என்று உரைத்தார்..அதே நேரம் கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, "நீவிர் குடை வாத்தியங்கள் முதலிய பலவித சிறப்புகளுடன் சென்று பட்டர்பிரானின் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக!" என்று பணித்தார். மேலும் பாண்டிய நாடு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீ வில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக" என்று பணிக்கிறார்..மன்னன் பெரியாழ்வாரிடம் தன் கனவினைக் கூறி, தான் பெருமாள் உத்தரவுக்கேற்ப திருமணத்துக்கு சகல ஏற்பாடுகளையும் செய்வதாகக் கூறினான். ஸ்ரீவில்லிப்புத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை வழிமுழுவதும் சிறப்பாகத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. தோழியர் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தச் செய்து, பலவாறு ஒப்பனை செய்தனர். கோதையும் தோழிகள் புடைசூழ பல்லக்கில் ஏறி அமர்ந்து திருவரங்கம் சென்றாள். அரசன், பெரியாழ்வார் முதலானோர் தொடர்ந்து வர, அந்தக் குழு திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது. பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுவதற்காக ஏங்கிய அரங்கனின் பேரழகைக் கண்ணாரக் கண்டாள். நேராக நம்பெருமாளின் சன்னதிக்குச் சென்று அவன் திருமேனியில் கலந்தாள். காணுதற்கரிய இக்காட்சி கண்டு அனைவரும் பிரமித்துப் போய் நின்றார்கள். பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாள் அரங்கன் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது..108 திவ்யத்தலங்களில் ஆண்டாள் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 10 கோயில்களை மங்களாசாஸனம் செய்துள்ளார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி சூடிக் கொடுத்த பூமாலைகளைப் போலவே அவர் திருநாவால் பாடிக் கொடுத்த பாமாலைகளும் புகழ் பெற்றவை. அவர் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பவை பிரசித்தி பெற்ற பாமாலைகளாகத் திகழ்கின்றன. எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் நாச்சியாருக்கு ஒரு சன்னதி இருக்கும்.