பிரிட்டன் போர்க்கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எஃப்-35 போர் விமானம் விபத்துக்குள்ளாகி மத்தியதரைக் கடல் பகுதியில் கடலில் விழுந்தது. அதன் விமானி பாராசூட் மூலம் குதித்துத் தப்பினார். விமானத்தை மீட்கும் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.
இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரிட்டனில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளுக்காக எச்எம்எஸ் குயீன் எலிசபெத் என்ற விமானம் தாங்கிக் கப்பல் மத்திய தரைக் கடல் பகுதிக்குச் சென்றது. அக்கப்பலிலிருந்து ஏவப்பட்ட எஃப்-35 ரக விமானம், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
–இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.